| திணை: பொதுவியல் துறை:கையறுநிலை.சேரமான்பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருது புறப்புண்ணாணி வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
உரை:முழா மண் மறப்ப - முழா மார்ச்சனை யிடுத லொழிய; யாழ்பண் மறப்ப - யாழ் பண்ணை யொழிய; இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப - பெரிய இடத்தையுடைய பானை பாலின்மையிற் கவிழ்ந்து நெய் கடைதலை யொழிய; சுற்றம் சுரும்பார் தேறல் மறப்ப - தம்முடைய கிளை வண்டார்ந்த மதுவை யுண்ணா தொழிய; உழவர் ஓதை மறப்ப - உழுவார் தொழில் செய்யு மோசையை யொழிய; அகலுள் ஆங்கண் சீறூர் விழவும் மறப்ப - அகன்ற தெருவினையுடைய சீறூர் விழாவினை யொழிய; உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து - உவாவந்து கூடிய பெரிய நாளாகிய பொழுதின்கண்; இரு சுடர் தம்முள் நோக்கி - ஞாயிறுந் திங்களுமாகிய இரு சுடரும் தம்முள் எதிர்நின்று பார்த்து; ஒரு சுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்கு - அவற்றுள் ஒரு சுடர் புல்லியமாலைப் பொழுதின்கண் மலையுள்ளே யொளித்தாற்போல; தன் போல் வேந்தன் முன்பு குறித்தெறிந்த புறப்புண் நாணி - தன்னை யொக்கும் வேந்தன் முன்னாகக் கருதி யெறிந்த புறத்துற்ற புண்ணுக்கு நாணி; மறத்தகை மன்னன் வாள் வடக் கிருந்தனன் - மறக் கூறுபாட்டையுடைய வேந்தன் வாளோடு வடக்கிருந்தான்; ஈங்கு ஞாயிற்றுப் பகல் - நாள்போற்கழியல - ஆதலால், இவ்விடத்து யாம் அவனை யின்றித் தனித்து உயிர்வாழும் ஞாயிற்றையுடைய பகல் எமக்கு இனி முன்பு கழிந்த நாள் போலக் கழியா எ-று.
மண் முழாமறப்ப வென்று முதலாகிய செயவெனெச்சங்க ளெல்லாம் வாள் வடக்கிருந்தன னென்னும் வினையோடு முடிந்தன. எறிந்த புண் - எறிதல் ஏதுவாக வுற்ற புண். முன்பு குறித்தெறிந்த புறப்புண் ணாணி யென்றது, மார்பில் தைத்துருவின் புண்ணும் புறப்புண்ணாதலை யொக்கு மென நாணி யென்றதாகக் கொள்க.
விளக்கம்: முழாவை மண்ணுதலாவது மார்ச்சனையிடுதல். குழிசி இழுது மறப்ப வென்றதனால், குழிசி யிடத்தே கடைந்தெடுக்கப்படும் இயைபு கருதி, நெய் கடைதல் பொருள் கூறப்பட்டது. இழுது - நெய்; இன்றும் மலைநாட்டவர் உருக்காத நெய்யை இழுது என்ப. அரசர் குடியில் இழவுண்டாயின் ஊர்களில் எடுக்கப்படும் விழா கைவிடப்படும். திரையனை இழந்து வருந்தியதனால் காவிரிப்பூம்பட்டினம் இந்திர விழாவை மறந்த செய்தி மணிமேகலையால் உணர்ந்து கொள்க. கரிகாலனொடு பொருத காலத்தில் சேரமான் முதுகிடாது நேர் நின்று பொருதானென்றும், அவன் மார்பு குறித்தெறிந்த கரிகாலன் வேல் அவனது மார்பிற் பட்டு முதுகிடத்தே புண்ணாக்கிற் றென்றற்கு, முன்பு குறித்தெறிந்த புறப்புண் என்றார். உவாநாளில் இருண் மாலைப்போதில் கிழக்கே திங்கள் தோன்ற, மேற்கே ஞாயிறு மலைவாய் மறையுமாறு தோன்ற, ஒருசுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்கு என்றார். |