| நெடுவரை யெனவும், தெற்கின்கண்ணதாகிய குமரியெனவும், குணக்கின்கண்ணதாகிய தொடுகடலெனவும், குடக்கின்கண்ணதாகிய பௌவமெனவும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகையாயின. இதனால், இவ்வுரைகாரர், வடாதென்னும் முற்றுவினைக் குறிப்பைப் பெயர்ப்படுத்திப் பனி படு நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன் வடக்குமென்க என்றார். பண்பொட்டென்றது. இருபெயரொட்டுப் பண்புத்தொகை. தொடுகடல், தோண்டப்பட்ட கடலெனப் பொருள்படுதலின், இதற்கேற்ப, சகரரால் தோண்டப்பட்ட சாகரம் என்று உரைத்தார். சகரர் தோண்டியது சாகரமாயிற்று. கீழைக் கடலினும் மேலைக் கடல் பழைதாதலால், அதனைத் தொன்றுமுதிர் பௌவம் என்றார். இப்பாண்டியன் காலத்தில் தெற்கில் கடலில்லையாதலால், தெனாஅது உருகெழு குமரி யென்றாராக, உரைகாரரும் தெற்கின் கண்ணது உட்குந்திறம்பொருந்திய கன்னியா றென்றுரை கூறினார். மேலது என்றது, மேலுள்ள துறக்க முதலிய உலகுகளையெல்லாம் அகப்படுத்தி நிற்குமாயினும், எல்லாவுலகிலும் மேலதாகிய ஆனிலையுலகிற்காயிற்று. உருவுட் காகும் (தொல். சொல். 300) என்பவாகலின், அவ்வுட்காவது ஆணையாற் பிறர் அஞ்சும் உட்குடைமை என்றார். பணியியரத்தை, செலியரத்தை என நின்ற அத்தையும், ஆங்க வென்பதும் அசை நிலை. தேஎம் என்பது அத்துச் சாரியை பெற்றுத் தேஎத்து என நிற்கும். தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப என்பதற்கு இங்கே கூறியது போலவன்றி வேறுரைத்தலு முண்டு. தேஎத்து என்பதன் அத்துச்சாரியையை அசைநிலையாக்கி விலக்கி; தேஎம் என நிறுத்தி, தேஎம் கடற்படைக்குள்ளே குளிப்ப (மூழ்க) என்று இயைத்து, பகைவரது தேயம் படையாகிய கடலுக்குள்ளே மூழ்க என்று பொருள் கூறுபவரும் உண்டு. உருவும் புகழுமாகி நிற்றிறம் சிறக்க என இயைத்து, உருவும், புகழும் உடையவாய் நின்படைகுடி முதலிய திறங்கள் சிறக்க வென்றுரைப்பவரு முண்டென்பதை, ஆகியென்பதைத் திரியாது நிற்றிறஞ் சிறக்க வென்பதனோ டியைத் துரைப்பாருமுளர் என்றார். அறமும் பொருளும் இன்பமும் வீடும் என்ற நான்கும் பெறுக வென்றறிவுறுத்துவது சான்றோர்க் கியல்பாதலால், காரிகிழாரும் பாண்டியற்குப் பணிக வென்பதனால் வீடும், இறைஞ்சுக வென்பதனால் அறமும், வாடுக வென்பதனால் பொருளும், தணிக வென்பதனால் இன்பமும் கூறினார். அற முதலிய நான்கனுள் சான்றோரால் தலையாய தெனக் கருதப்படுவது வீடாதலின் அதனை முதலிலும், கடையாக வைத்து ஒதுக்கப்படுவது இன்பமாதலின் அதனை இறுதியிலும் ஓதினார். வீடு பேற்றுக்கு வாயிலாதலின் அறத்தை வீட்டை யடுத்தும், இன்பத்துக்கு ஆக்கமாதலின் பொருளை அதனை யடுத்தும் வைத்துரைத்தார். வேந்தன்பால் நடுவுநிலை இன்றாயின், படை குடி அமைச்சு நட்பு முதலிய உறுப்புக்கள் சிறப்புற நின்று அரசியலுக்குத் துணைசெய்யாவாதலால் ஒரு திறம் பற்றலிலியரோ என்றார்.
அரசியலுக்கு உறுப்பாகிய படை குடி அமைச்சு முதலிய ஆறனையும் திறம் என்றார். திறம் -கூறு. ஞமன் - துலாக்கோலின் நாக்கு. பகைவர் மதிலைக் கவர்ந்து அவ்விடத்துப் பகைமன்னர் திறையாகத் தரும் செல்வத்தைக்கொணர்ந்து பரிசிலர்க் கீவது பண்டைத் தமிழ்வேந்தர் மரபாதலால்,ஆரெயில் பலதந்து அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம், பரிசில் மாக்கட்கு நல்கி என்றார். பலர் புறங் |