பக்கம் எண் :

354

 

ஓடாப் பூட்கை நின் கிழமையோன் கண்டு - புறக்கொடாத
மேற்கோளையுடைய நின் தமையனைக் கண்டு எ-று.

     வருவ லென்பது கால மயக்கம். மன்னுதல் குறித்தோர் புகழ்
நிறுத்துதலும், புகழ் நிறுத்தாதோர் மன்னராதலும் இவ்வாறன்றோ வென்பது
கருத்தாகக் கொள்க. நின் கிழமையோற் கண்டு வருவலெனவும், வயமான்
தோன்றலைப் பாடிநின்றேனாகப் பரிசிலன் கொன்னே பெயர்தல்
இழந்ததனினும் இன்னாதெனத் தன்னிற் சிறந்தது பிறிதொன்றின்மையின்,
தலை எமக் கீய வாள் தந்தனன்; ஆதலால், ஆடு மலி உவகையின்
வருதல் எனவும் கூட்டுக.

      “கிளைமை யோற்கண்”டென்று பாட மோதுவாரு முளர்.

       விளக்கம்: மன்னா வுலகத் தென்றவிடத்து, மன்னாமைக்குரிய
வினை முதலாகிய எப்பொருளும் என்பது வருவிக்கப்பட்டது. உலகமும்
மன்னாதாயின், புகழ் நிறுவுதல் கூடாதாகும். உலகத்தில் மன்னுவது
புகழொன்று தவிரப் பிற எப்பொருளும் இல்லை யென்பதைத்
திருவள்ளுவரும், “ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றாது
நிற்பதொன்றில்”(குறள்.233) என்றும், பிறரும். “நல்லிசை நிலைஇய
நனந்தலை யுலகத்து”(பதிற்.14) என்றும் கூறுதல் காண்க. இரப்போர்
இரத்தற் கேதுவாகலின், “இன்மையின் இரப்போர்”என்றார். புகழே
உலகத்தோடு தொடர்புற்று அது பொன்றுங்காறும் உடன் தொடர்ந்து
நிற்பதாகலின், புகழ் செய்யாதாரை, “தொடர்பறியலர்”என்றார். புகழ்
பயப்பது ஈத்தலாதலின், “ஈயாமையின் தொடர் பறியலர்”என்றும், ஈத்துப்
புகழ் நிறுவாதார் மனவுணர்விலராகலின், “மாக்க”ளென்றும் குறித்தார்.
பாடு- பெருமை. “நயனுடையானல்கூர்ந்தானாதல் செயு நீர, செய்யா
தமைகலா வாறு”(குறள்.319) என்பதனால், “நாடிழந் ததனினும் நனியின்னா”
தெனக் கருதினான். தன் தலையைக் கொணர்வார்க்குப் பெரும் பொருள்
தருவதாகக்குமண னறிய, அவன் தம்பி நாட்டிற் பறையறைவித்திருந்ததை
யுட்கொண்டு, “தன்னிற் சிறந்தது பிறிதொன்றின்மையின்”என்றும்,
ஈத்தலாகாமைக்குரிய நிலையுண்டாய போழ்தும், தன் பூட்கையிற்
பின்னிடாது தலை கொடுத்த செயலை வற்புறுத்தற்கு, “ஓடாப் பூட்கைக்
கிழமையோன்”என்றும் கூறினார்.

                     166. கௌணியன் விண்ணந்தாயன்

     இவன் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன்
விண்ணந்தாயன் என்று கூறப்படுகின்றான். பூஞ்சாற்றூர் தஞ்சைச் சில்லாவில்
உள்ளது. கௌண்டின்னிய கோத்திரத்துப் பார்ப்பனர் கௌணியர்
எனப்படுகின்றனர். சீகாழித் திருஞான சம்பந்தரும் கௌணியராவர். மேலும்
கௌணியப் பார்ப்பார் அனைவரும் தமிழ்ப் பற்று மிகவுடையரா யிருப்பது
குறிக்கத்தக்கது. விண்ணன் என்பது இவன் தந்தை பெயர்; இவன் இயற்பெயர்
தாயன் என்பது. அரிவாள் தாய நாயனாரும், தாயன் என்ற பெயருடையர்;
இக்காலத்தும் மக்கட்குத் தாயன், தாயப்பன் என்று பெயர் வழங்குவதுண்டு.
இவனது முன்னோர் வடமொழி வல்லுநராய்ச் சொல்வன்மையிற் பெயர்
பெற்றிருந்தனர். வேள்வி பல செய்தனர். இவன் ஒருகால் சிறந்ததொரு
வேள்வி