உலகாணித் தீர்த்தத்தின் மருங்கில் மாகாளேச்சரம் ஒன்றுள்ளது. மாகாளன் என்னும் பாம்பரசு பேரன்பினின்றும் பிறழாத வீடு பேற்றினை விரும்பித் தென் திசைக் கயிலையாகிய காளத்தியில் சடையில் இளம்பிறை யணிந்த பிரானைத் தொழு துறையு நாள் அப்பிரானின் திருவாணையால் காஞ்சியிற் போந்தவ் விலிங்கம் தாபித்துப் போற்றி நிலத்தில் சிறப்புத் தங்கிய தென் கயிலையை மீள நண்ணி நீப்பரிய பெரிய வாழ்வு நிலாவியது. கண்ணேசப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-1786 குமரகோட்டப் படலம் எண்சீரடி யாசிரிய விருத்தம் கடப்ப ரும்பிறவி வேலை சுவற்றுங் கண்ண லிங்கமொடு கவுசிக லிங்கம், மடப்பி டிக்கிடம் அளித்த பிரான்மா காள லிங்கமெனும் மூன்றும் மொழிந்தாம், அடற்ப டைச்செறுநர் சேனை அனைத்தும் அழித்து ழக்கிநிணம் உண்டு திளைத்துக், குடர்க்கொ ழுந்தொடை மிலைச்சிய செவ்வேற் குரிசில் வாழ்குமர கோட்டம் உரைப்பாம். 1 நீந்துதற் கரிய பிறவிக்கடல் வற்ற வணங்கினோர்க்கு அருள் புரியும் கண்ணேச கவுசிகீசம், இளைய பெண் யானையை யொக்கும் உமை யம்மையார்க் கிடப்புறம் வழங்கிய பிரானாரது மாகாளேசம் எனப்பெறும் மூன்று தலங்களின் வரலாற்றினைக் கூறினோம். இனி, சிவந்த வேலை ஏந்திய முருகப்பெருமானார் எழுந்தருளி யுள்ள குமரகோட்ட வரலாற்றினைக் கூறுவோம். வலிமை யமைந்த படைக் கலங்களைக் கொண்ட பகைவராகிய அசுரர் சேனையை முற்றவும் அழித்துக் கலக்கி ஊனைப் பொருந்திப் பயின்று குடர் மாலையைச்சூடிய செவ்வேல் என்க, பெருமானுக்கு ஒப்பன்மையின் வேலுக்கு ஏற்றப்பட்டது. குமாரக் கடவுள் திருவிளையாடல் தருக்கு மிக்குடைய தாருகன் என்னுந் தான வர்க்கிறையை வெய்ய களத்தின், முருக்கி ஆருயிர் செகுத்து விசும்பின் முதல்வனுக்கிறைமை நல்கிய பின்னர்ச், செருக்க டந்தவடி வேல்வலன் ஏந்துஞ் செம்மல் வெண்கயிலை மால்வரை எய்தி, மருக்க டுக்கைமுடி வள்ளலை ஓர்பால் மலைம டந்தையை வணங்கி மகிழ்ந்து. 2 |