மல்லரை மயில்களை வான ரங்களைப் புல்லிய முயல்களைப் பொருச ரங்களை வல்லவா புறக்கொடை கண்ட வான்கதிப் பல்லியல் புரவியின் பந்தி ஆயிரம். 18 | மல்லரையும், மயில்களையும், குரங்குகளையும், சிறிய முயல்களையும், அம்புகளையும் வல்லபடி அவற்றைப் புறங்கண்ட பெரியகதிகளையுடைய பல இலக்கணமமைந்த குதிரையின் பந்திகள் அளவில்லாதன. மதக்கரி தனைமுயல் வயங்கொள் காதையைப் புதுக்கவீங் கிருளொளிப் பொலிவைப் பற்றியீர்த் ததிர்ப்பதென் றுளங்கொளக் கரிய வாங்குர கதத்தொகை பற்றுபொன் தேர்க ணக்கில. 19 | மதத்தால் செருக்கும் ஆண் யானையை முயல் வெற்றிகொண்ட பழைய கதையான் வரும் விம்மிதத்தைப் புதுப்பிக்கச் செறிந்த இருள் ஒளிமிகுதியைப் பற்றி ஈர்த்து ஆரவாரியா நின்றது என மனங் கொள்ளும்படி கரிய குதிரைகள் பற்றி ஈர்க்கும் பொற்றேர்கள் கணக்கில ஆயின. அதிர்வு-நடுக்கம். குரகதம்- குதிரை. எரிமணிச் சோதியுள் மூழ்கி ஈர்த்துச்செல் பரிகளைக் காண்கிலர் பார்த்துச் சூரன்ஊர் திருவுடை இந்திர ஞாலத் தேர்கொல்என் றுருகெழச் செல்லுதேர் உலப்பில் வீதியே. 20 | தேரிற் பதித்த மாணிக்கங்களின் பேரொளியுள் மூழ்குதலின் இழுத்துச் செல்லும் குதிரைகள் காணப்படாவாய் அத்தேர் மட்டும் காணப்பெற்று, இது சூரபதுமன் ஊர்ந்து செல்லும்‘இந்திரஞாலத்தேர்’ கொலோ என அச்சமுறத் தோன்றும் தேர்கள் நீங்குதல் இல வீதிகள். எரி-தீ. திரு-குதிரை இன்றிச் செல்லும் தெய்வத் தன்மை. செம்மணி ஒளியுள் செந்நிறக் குதிரைகள் தோன்றாவாயின. வீரர் இருக்கை நால்வகை நிலையினால் பயிலும் நாமவில் வேல்வளை பலகைவாள் கற்கும் விஞ்சையர் கோலவான் விஞ்சையர் குழாங்கள் நோக்குபு சால்பினை வியத்தகு தலைமைப் பாலரே. 21 | நால்வகையாக நின்று அச்சந்தரும் வில்லையும், வேலையும், சக்கரத்தையும், கேடகத்தையும், வாளையும் ஏந்தி விஞ்சை (வித்தை) கற்போர், அழகிய வானிடத்து வித்தியாதரர் குழுக்கள் நோக்கிக் கலை நிறைவை வியக்கத்தக்க முதன்மையர். கற்கும் அளவிலே இந்நிலையினர் என்பதும், விஞ்சையரைப் போற்றற்குரியர் விஞ்சையரே என்பதும் அறியற்பாலன. |