பக்கம் எண் :


752காஞ்சிப் புராணம்


     அடியின் கீழடங்கும் கீழுலகம் அனைத்தையும் அதனால்
தோற்றுவித்தும் திருமுடியின் அடங்கும் மேலுலகங்களை அத்திருமுடியால்
படைத்தும் ஒப்பில்லாத கருணை வடிவாகித் துதிக்கும் அடியவர் உள்ளத்துச்
சுடராகிக் கொடிய ஆணவ நோய்த் தீமையைச் சாய்க்கும் அழிவின்மையை
யுடைய ஏகபாதர் திருவுருவம்,

எச்சேச்சுரர்

ஓவா இன்பப் பெருங்கருணை ஒன்றும் வதனம் ஓர்இரண்டும்
பூவார் கமலப் பதம்மூன்றும் போகு கூர்ங்கோ டொருநான்குங்
காவாய் என்பார் மலம்ஐந்தும் அறுமா றளிக்குங் கரம்ஏழுந்
தாவா அருளும் படைத்துடைய எச்சத் தலைவன் திருவுருவம்.  11

     ஒழியாத இன்பத்திற்குக் காரணமாகிய பெருங் கருணை பொருந்தும்
இருமுகங்களும், மூவடிகளும், கூரியவாம் நீண்ட நான்கு கொம்புகளும்,
காக்கவேண்டுவார் தம் ஐந்து மலங்களையும் அறுக்கும் ஏழு கைகளும்,
குன்றாத திருவருளும் கொண்டு விளங்குகின்ற வேள்வி நாயகர் எனப்
பெறும் எச்சேச்சுரர் திருவுருவம்,

இடபாரூடர்

இகலி எதிர்ந்தோர் குடர்குழம்ப இடியின் முழங்கி ஏற்றெதிர்ந்து
தொகுவெம் படைகள் முழுதுழக்குந் தோலா மதுகைச் சூர்த்தவிழிப்
புகரில் காட்சி வெள்ளிவரை நடந்தா லனைய போர்விடைமேல்
திகழ மலைமா துடனுறையுந் தேவ தேவன் திருவுருவம்.        12

     பகைத்துப் போரில் எதிர்ந்தவர் உள்ளம் திடுக்கிடும்படி இடிபோலக்
கர்ச்சனை செய்து மேற்கொண்டெதிர்ந்து திரண்ட தறுகண்மையுடைய
முழுப் படையையும் அழிக்கும் தோல்வி காணாத வலிமையும் அச்சுறுத்தும்
கண்களும் குற்றமற்ற தோற்றமும் வெள்ளிமலை கால் கொண்டு நடந்தால்
அனைய கோலமும் உடைய இடபத்தின்மேல் விளங்க மலைமகளுடன்
வைகும் இடபாரூடர் எனப் பெறும் மகாதேவேர் திருவுருவம்.

சந்திரசேகரர்

உடையாள் ஒருபால் வீற்றிருக்குஞ் செல்வி நோக்கி உள்புக்கு
மிடையா நின்ற பெருந்தேவர் விலகப் புடைக்கும் வேத்திரத்திண்
படையார் குடங்கைத் திருநந்தி பகவன் றனக்கு வரமுதவிப்
புடையார் கணங்கள் போற்றிசைப்ப வைகும் புராணன் திருவுருவம். 13

     அம்மையாருடனிருந்து அருள் செய்யும் சமய மறிந்து புகுந்து
நெருங்குகின்ற திருமால் முதலாம் பெருந்தேவர் சந்நிதியில் ஒதுங்கி