பக்கம் எண் :

பக்கம் எண் :438

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

ஆகாயமே - நிலமும் நீரும் தீயும் காற்றும் ஆகாயமும் என்ற ஐந்தும்; மெய் வாய் கண் மூக்குச் செவி தாமே-மெய்யும் வாயும் கண்ணும் மூக்கும் செவியுமென்ற ஐந்தும்; உற சுவை யொளி யூறோசை நாற்றம்மே - மெய் முதலிய பொறிகளிலே பொருந்திய சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்ற ஐந்தும் ; வாக்குப்பாணி பாதம் பாயுரு உபத்தம் - வாக்கும் கையும் காலும் பாயுருவும் உபத்தமும் என்ற ஐந்தும்;ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்-இவற்றை ஆக்குவனவாகிய மனமும் மானும் ஆங்காரமும் மூலப்பகுதியுமாகிய நான்கும்; உயிரெனும் ஆன்மாஒன்றொடுமாம்-உயிரெனப்படும் புருடனென்ற ஒன்றொடுகூட இருபத்தைந்தாம்; எனச் செயிரறச் செப்பிய திறமும் கேட்டு -என்று குற்றமறச் சொல்லியவற்றைக் கேட்டு;

சாங்கிய சமயம், பல்வேறு தத்துவப் பொருள்களை ஆசங்கித்து ஆராய்வதுபற்றி, இப்பெயர் பெறுவதாயிற்றென்பர்; வேறு சிலர் இதனை முதன்முதலாகக் கண்டவர் சங்கரென்றும் அவர் பெயரால் இந்நெறிக்குச் சாங்கியமெனப் பெயரெய்துவதாயிற்றென்றும் கூறுவர்; ஆயினும் இதனை நிலை நாட்டின முதலாசிரியர் கபிலர் என்பதே பெரு வழக்கு. சாங்கிய பிரவசன சூத்திர மென்னும் நூல் இக் கபிலரால் செய்யப்பட்டதென்ப. இஃதொழிய, ஈசுரகிருஷ்ணரெழுதிய சாங்கிய காரிகையே பெரிதும் பலராலும் மேற்கொள்ளப்பட்டுளது. சாங்கிய பிரவசன சூத்திரம் முதன்மூன்று அதிகாரங்களில் சாங்கியநூற் கருத்துக்களையும், நான்காவதில் திருட்டாந்தங்களையும் ஐந்தாவதில் பரபக்க மறுதலையையும், ஆறாவதாகிய இறுதி யதிகாரத்தில் ஏனையவற்றுட் கூறியவற்றைத் தொகுத்தும் கூறுகிறது. அம்முறையே இம் மணிமேகலையும் முதற்கண் மூலப்பகுதியையும், பின் அதனோடியைபுடைய தத்துவங்களையும், அவற்றிற்குப் பிறகு புருடனையும் கூறி, முடிவில் அவற்றின் தொகை வரிகளைத் தொகுத்துக்கூறுவது குறிக்கத்தக்கது. சருவதரிசன சங்கிரக முரைத்த மாதவர் இச் சாங்கிய தரிசனத்தைக் கூறுதற்குச் சாங்கிய காரிகையையேபெரிதெடுத்துப் பேசுவதால், சிலர் சாங்கிய பிரவசன சூத்திரம் பதினான்காம் நூற்றாண்டிற்குரியதாகக் கூறுகின்றனர்; சிலர் அவ்வாறு கொள்ளாது, சாங்கிய காரிகைக்கு முற்பட்டதென்றும், மாதவர்காலத்தே பெருவழக்கிலிருந்தது பற்றிக் காரிகையே அவராற் கொள்ளப்பட்ட தென்றும் கூறுவர்.

மானைப் புத்தி யென்றும் மூலப்பகுதியைச் சித்தமென்றும் கூறுவது சாங்கிய நூல் வழக்காதல்பற்றி, அவ்விரண்டினையும் முறையேபுத்தி யென்றும் சித்தமென்றும் கூறினார்; முன்னரும், "சித்தத்து மானென்றுரெத்த புத்தி வெளிப்பட்டு" (மணி. 27: 206-7) என்பது காண்க. புருடன், உயிர், ஆன்மா என்பன ஒரு பொருட் கிளவி; ஆயினும் உயிரது கேவல நிலை புருடன் என்றும், தத்துவத்தொடர்புற்று நிற்கும் நிலை