பக்கம் எண் :

பக்கம் எண் :594

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை

செல்வ முடையவாகுக எனப் பாவிப்பர். முதிதைப் பாவனை யாவது பிறவுயிர்கள் பெற்றிருக்கும் ஆக்கமும் இன்பமும் கண்டு மன மகிழ்வும் நிறைவும் அமைதியுங்கொண்டு, அவை அவற்றின் நீங்கா திருப்பனவாகுக என நினைப்பது. இதனால் எப்போதும் செவ்விய உணர்வுடையதாயிருக்கும் செம்மை நிலையுண்டாகிறது என்பர். இப்பாவனைகளால் உணர்வின் செம்மை குன்றாது விளங்குதலால், "மைத்திரி கருணா முதிதை யென்றறிந்து திருந்தும் நல்லுணர்வால்" என்றும்'' இதனால் வெகுளியாகிய குற்றம் எளிதின் நீங்குதலின், ''நல்லுணர்வாற் செற்ற மற்றிடுக" என்றும் கூறினார்.

258--9.சுருதி சிந்தனா பாவனை தரிசனை கருதி உய்த்து-சுருதியும் சிந்தனையும் பாவனையும் தரிசனையும் ஆகிய நான்கையும் ஆராய்ந்துணர்ந்து; மயக்கம் கடிக - மயக்கத்தைப் போக்குவாயாக எ-று.

சுருதியாவது அறவுரைகேட்டல், சிந்தனையாவது கேட்டவற்றைச் சிந்தித்தல். பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல். தரிசனையாவது உண்மை தெளிதல். இச் சுருதி முதலிய நான்கினையும் உபேக்ஷா பாவனை யென்றும் கூறுப. இதனால் "செத்தினும் போழினும் செஞ்சாந் தெறியினும்" திரியாத மெய்யுணர்வு1 விளைதலால், "கருதியுய்த்து மயக்கம் கடிக" என்றார். கருதியுய்த்தல் - ஆராய்ந்துணர்தல்.

260--4.இந் நால்வகையால் - இக் கூறிய சுருதி முதலிய நான்கு நெறியால்; மனத்திருள் நீங்கு என்று - மனமயக்கம் கெடுவாயாக என்று; முன்பின் மலையா-முன்னுக்குப் பின் முரணுதல் இல்லாத; மங்கல மொழியின் - அறமாகிய சொற்களால்; ஞானதீபம் நன் கனம் காட்ட - ஞானமாகிய விளக்கத்தைத் தெளியக் காட்டினாராக; பாவை - பாவைபோலும் மணிமேகலை; தவத்திறம் பூண்டு- உண்மை ஞானத்துக்குரிய தவத்தின் கூறுகளை மேற்கொண்டு; தருமம் கேட்டு - பல்வகை யறநெறிகளையும் தெளிவுறக் கேட்டு; பவத்திறம் அறுகு என நோற்றனள்-பிறப்புக்கேதுவாகிய குற்றங்களின் நீங்குவேனென நோற்கலுற்றாள் எ - று.

"இந் நால்வகையால் மனத்திருணீங்" கென்றது, நியமப் பொருட்டாய் வந்த அனுவாதம். இவ்வாறு கொள்ளாது, மைத்திரி, கருணை, முதிதை, உபேக்ஷை யென்ற நால்வகை யெனக் கொண்டு அவற்றால் மயக்கமும் வெகுளியும் காமமும் நீங்குக என்று கோடலு மொன்று; அக் காலை மயக்கத்தோடு ஏனைக் காம வெகுளியும் உபலக்கணத்தாற் கொள்ளப்படும். முன்னுக்குப் பின் மலைவு தோன்றக் கூறுவது குற்றமாதலின், அதனை விலக்கற்கு, "முன்பின் மலையா மொழி" யென்றார். மங்கலமாவது அறமாதலின், அறவுரையை, "மங்கல மொழி" யென்றார். "மலையா வறத்தின்" (28. 100) என்றும் "முரணாத் திருவறம்" (30. 6)


1 லலிதா விஸ்தாரம். 35: 9.