பக்கம் எண் :

பக்கம் எண் :593

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை

கட்டு என்பது துக்கமும் அதற் கேதுவு மென்ற இவற்றோடு பிணிப் புண்டிருத்தல். வீடு, இன்பமும், அதற்குரிய ஏதுவுமாம். அதன் காரணத்தது என்பதை இரண்டோடும் இயைக்க. கட்டும் வீடும் எய்துதற்குப் பிறர் காரணரல்லர்; அவரவரே காரணரென்பது கருத்து. கட்டும் அதனைப் பயக்கும் ஏதுவுமாகிய இரண்டிற்கும் அடிப்படையான காரணம் காமம் வெகுளி மயக்கங்களாதலின், "மேலுரைத்த பொருள் கட் கெல்லாம் காமம் வெகுளி மயக்கங் காரணம்" என்றார் திருவள்ளுவரும், "காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன், நாமங் கெடக்கெடும் நோய்" (குறள். 360) என்றல் காண்க. வீடுபேற்றினைப் புதல்வராற் பெறலாமென்பாரை மறுத்தற்கு, "ஒட்டித் தருதற் குரியோ ரில்லை" யென்றார்; முன்னரும், "புத்தே ளுலகம் புதல்வருந் தாரார், மிக்க வறமே விழுத்துணை யாவது" (22. 137-8) என்றார்.

254--5.அநித்தம் துக்கம் அநான்மா அசுசி யெனத் தனித்துப் பார்த்து - பொருள்கள் நிலையில்லாதன வென்றும் துன்பந் தருவன வென்றும் அநான்மா வென்றும் அருவருப்புடையன வென்றும் தனித்தனியாக ஆராய்ந்து கண்டு; பற்று அறுத்திடுதல் - பற்றினை நீக்குமுகத்தால் காமமாகிய காரணத்தைக் கெடுப்பாயாக எ - று.

இவ்வநித்த முதலிய நான்கினையும் விபரியாசங்களென்றும், அநித்தியம் அநான்மா அசுசிதுக்கமென முறை செய்தும் அசுவகோசரும், வாசபந்துவும், சாந்திதேவரும் கூறுவர்.நால்வகைமிருதியுபத்தானங்கட்கும் முன்னர் இன்றியமையாது வேண்டப்படுவன இந்நான்கு மென்றும், இதனாற் காமமாகிய பெருங் குற்றங் கெடுமென்றும் ஆசிரியர் பலரும வற்புறுத்துகின்றனர். இதனை அசுப பாவனை யென்றலு முண்டு.

256--7.மைத்திரி கருணை முதிதை என்று அறிந்து - மைத்திரி பாவனை கருணைப் பாவனை முதிதைப் பாவனை யென்று சொல்லப் படுகின்ற பாவனைகளை யறிந்து; திருந்தும் நல்லுணர்வால் - அவற்றால் திருந்தப் பெறும் நல்லுணர்வு கொண்டு; செற்றம் அற்றிடுக- வெகுளியைப் போக்குவாயாக எ -று.

மைத்திரி பாவனையாவது எல்லா வுயிர்களையும் நட்புறவோடு நினைந்து அவையெல்லாம் துன்பம் நோய் முதலியனவின்றி இன்ப முடையவாகுக என நினைத்தல் என்று சதசஹஸ்ரிக பிரத்ஞபாரமிதை1 யென்ற நூல் கூறுகிறது. இப் பாவனையால் எவ்வுயிர்க்கும் நலஞ் செய்தற்கும், அவற்றிற்கு வேண்டுவனவற்றை யுதவுதற்கு முரிய திருந்திய வுணர்வு பிறக்கிறது. கருணைப் பாவனையாவது பிறவுயிர்கட் குண்டாகுந் துன்பங் கண்டு உள்ளமுருகி அதனை நீக்கற்கு விரையும் விரைவுணர்வு எய்துகிறது. இதனைச் செய்வோர், உயிர்கள் வறுமையின்றியின்பச்


1 141-1. (i-xii)