பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 11
11

நிகழ்தலின் அவ் உளநூலைத் தழுவிய ஏரண முறையும் பெரும்பாலும் இயற்கை யொட்டியே இருக்குமென அறிக. இவ்வுண்மைகளை அறியாதார் தமிழிலும் சொற்பொருள் வரிசையை ஆங்கிலத்திற்போல் வரலாற்று முறையில் அமைக்க முயல்வர் . இதன் புரைமையை ஓர் எடுத்துக்காட்டாற் காட்டுதும் . ''பள்ளி'' என்னும் சொற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள பொருள்வரிசை வருமாறு:

  1. இடம் 10. தூக்கம்
  2.சிற்றூர் 11. விலங்கு துயிலிடம்
  3. இடைச்சேரி  12. பள்ளிக்கூடம்
  4. நகரம் 13. அறை
  5. முனிவ ராச்சிரமம்  14. அறச்சாலை
  6. சைன பௌத்தக் கோயில் 15. சாலை
  7. அரண்மனை  16. வன்னியன்
  8. (தச்சன்) வேலைக்களம் 17. பள்ளத்தி
  9. மக்கட் படுக்கை 18.குறும்பர் (சிற்றரசர் )

பின்னிணைப்பில் (அனுபந்தத்தில்) குறிக்கப்பட்டுள்ள இன்னொரு பொருள் (19) ''கிறித்தவக் கோயில்'' என்பது, இவற்றுள் முதலும் இறுதியும் (1, 19) வரலாற்று முறை தழுவியவை; ஏனைய ஒருமுறையுந் தழுவியவல்ல. இம்முறைகேடு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின் சிறப்பியல்பாகும். இதுபோலுள்ள தமிழ்நூல்களுள் பழைமையான தொல்காப்பியத்தில், பள்ளி என்னும் சொல் இடம் என்னும் பொருளில் ஆளப்பட் டுள்ளது.

 
சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
(தொல். எழுத்து. 100)

என்பது காண்க. இதனால், இடம் என்னும் பொருள் முதலிலும், கிறித்தவம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பெற்றபின் தோன்றிய கிறித்தவக் கோயில் என்னும் பொருள் இறுதியிலும், வைக்கப்பட்டன.

 மேற்குறிக்கப்பட்ட பத்தொன்பான் பொருள்களொடு, பள்ளம், வீடு, கோயில், கல்லறை (சமாதி) என்பவற்றையுஞ் சேர்க்கலாம். கோயில் என்றது ஈண்டு எல்லா மதங்கட்கும் பொதுவான இறையகத்தை.

 
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
(840)

என்னும் குறட்கு,

 "சான்றோ ரவையின்கட் பேதையாயினான் புகுதல், தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும்", என உரைத்தார் பரிமேலழகர் .