|
"கழுவாக் காலென்பது இடக்கரடக்கு. அதனால் அவ் வமளியும்" இழிக்கப்படுமாறுபோல
இவனால் அவ் வவையும் இழிக்கப்படுமென்ப தாம்," என்பது அவர் சிறப்புக்குறிப்பு.
இவ் வுரையில் பள்ளியென்பது படுக்கை
அல்லது படுக்கைக் கட்டில் என்று கொள்ளப்பட்டது. சான்றோரைத் தேவருக் கொப்பாகக் கூறுவது
இலக்கிய மரபாதலால், இங்குப் பள்ளியென்பது தெய்வத் தன்மையுள்ள இடத்தைக் குறிப்பதென்று
கொள்வதல்லது இன்பந்தரும் இடத்தைக் குறிப்பதென்று கொள்வது பொருந்தாது. ஆகவே, பள்ளி என்பதற்குக்
கோயில் என்பதே பொருளாம். சான்றோர் கூட்டத்துள் ஓர் அறிவிலி
புகுதல், ஒருவன் கழுவாத காலொடு கோயிற்குள் புகுவதொக்கும் என்பதே வள்ளுவர்
கருத்தாதல் வேண்டும். குளித்து விட்டு அல்லது கை கால் கழுவிவிட்டுக் கோயிற்குள் புகுதல்,
இன்றும் பல்வேறு மதத்தார்க்கும் வழக்கமாயிருத்தல் காண்க, தேவரைப் புலவரென்று
திருவள்ளுவர் குறிப்பிடுவதையும்,
| |
அங்கண்
விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்
|
(நாலடி.
151)
|
என்று நாலடியார் கூறுவதையும் நோக்குக.
ஆகவே, ஏற்கெனவே கோயிலைப் பொதுப்படக்
குறித்த பள்ளியென்னும் பெயரே, பிற்காலத்துத் தமிழகத்துப் புதுவதாக ஏற்பட்ட சமண பவுத்த
கிறித்தவ முகமதியக் கோயில்களையும் குறிக்க ஆளப் பட்டிருத்தல் வேண்டும். எதுபோலெனின்,
ஆரிய மறையையே முதன் முதற் குறித்த வேதம் என்னும் சொல், பிற்காலத்துக்
கிறித்தவ மறையையே சிறப்பாகக் குறித்ததுபோலென்க.
வித்துகள் சேற்றிற் பதிந்து கிடத்தலைப் ''பள்ளிக்கிருத்தல்''
என்று நாஞ்சில் நாட்டார் சொல்வதால், பள்ளம் என்னும் பொருளும்; அரசியல்
தீர்வை செலுத்தாதவன் வீட்டில் ஒரு சிறு கம்பு நட்டு அவன் அதைச் செலுத்தும்வரை
மறியல் செய்தலைப் ''பள்ளிகம்பு வைத்தல்'' என அந் நாட்டாரே வழங்குவதால் ''வீடு என்னும்
பொருளும்; இறந்த அரசன் உடலை எரித்த அல்லது புதைத்தவிடத்துக் கோயிற்
கட்டுவதைப் பள்ளிப்படை என்று இலக்கியமுங் கல்வெட்டும் கூறுவதால், கல்லறை என்னும் பொருளும்;
பள்ளி என்னுஞ் சொற்குக் கொள்ளப்பெற்றன.
பள்ளி என்னும் சொல்லின் வேர்
''பள் என்பதும், வேர்ப்பொருள் ''பள்ளம்'' என்பதும் ஆகும். பள்ளம் அல்லது தாழ்வான
இடம் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, பள்ளமான இடத்தில் வேலை செய்யுங் குலத்தான்,
(கீழே) படுக்கை, (படுத்துத் தங்கும்) மனை, (தேவமனையாகிய) கோயில், (முதற்காலத்துக் கோவிலில்
நடத்த பெற்ற கல்விச்சாலை, (பலமனைகள் சேர்ந்த) ஊர், (மனையும்
ஊருமாகிய) இடம் என்னும் எழு பருப்பொருள்களும் இவற்றுட் பலவற்றை நிலைக்களமாகக் கொண்ட
இருபத்திரு நுண்பொருள்களும், பள்ளி என்னுஞ் சொற்குத் தோன்றியுள்ளன. இந் நுண்பொருட் பாகுபாட்டுப்
பட்டி வருமாறு:
|