பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 18
18

இக்காலத்தும், குழந்தைகளும் நோயாளியரும் அயன்மொழித் துவக்க மாணவரும் சில வேளைகளில் ஒரு சொல்லாலேயே தம் கருத்தைத் தெரிவித்தல் காண்க.

5. ஆயிரம் ஆண்டிற்கொரு முறை நூற்றிற்குப் பத்தொன்பது விழுக்காடு எல்லாச் சொற்களும் மாறிவிடுகின்றன என்பது.

எல்லா மொழிகளிலும், அடிப்படைச் சொற்கள் உட்பட, ஆயிரம் ஆண்டிற் கொருமுறை நூற்றுக்கு 19 மேனி எல்லாச் சொற்களும் வழக்கற்றுப் புதுச்சொற்கள் தோன்றுகின்றன என்று அமெரிக்க மொழி நூலார் கொண்டு, இவ் வடிப்படையில் சொன்மாற்றக் காலக்கணிப்பு (Glotto Chronology) என ஒரு கணிப்பு முறையும் வகுத்திருக்கின்றனர். அது வருமாறு:

"ஒரு மொழி இருகிளைகளாகப் பிரிந்துவிடின், ஆயிரம் ஆண்டிற்குப் பின் ஒவ்வொன்றும் மூலச் சொற்றொகுதியில் நூற்றிற்குப் பத்தொன்பது இழந்துவிட்டு, எண்பத்தொன்றே கொண்டு நிற்கும். மூலச் சொற்கள் 200 ஆயின், ஒவ்வொன்றிலும் 162 எஞ்சிநிற்கும். ஆயின், ஒரே சொற்றொகுதியை இரண்டும் இழக்கும் என்று கருதக் காரணமில்லை, ஒன்று இன்னொன்று கொண்டு நிற்பதிலும் இழந்ததிலும் தனித்தனி நூற்றுக்கு 81 தாங்கி நிற்கும் என்பது பெரும்பால் நிகழக் கூடியது. இங்ஙனமாயின், ஒவ்வொன்றும் மூலப் பொதுச் சொற்றொகுதியில் 132 அல்லது நூற்றுக்கு 66 கொண்டு நிற்கும். இக் கணிப்பின்படி, இரு மொழிகளில், அடிப்படைச் சொற்றொகுதியில் நூற்றுக்கு 66 இனச் சொல்லாயிருந்தால் அவை பிரிந்துபோய் ஆயிரம் ஆண்டாயிற்றென்றும், 44 இனச்சொல்லா யிருப்பின், பெரும்பாலும் ஈராயிரம் ஆண்டாயிருக்குமென்றும், அறிந்துகொள்ளலாம்."

இக் கணிப்பின்படி ஒவ்வொரு மொழியும் ஐயாயிரம் ஆண்டிற்குள் முற்றும் மாறிவிட வேண்டும். கி. மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முந்தியது. அதிலுள்ள உலக வழக்குச் சொற்கள் அத்தனையும் இன்றும் தமிழ்நாட்டில் வழங்கி வருவதோடு,

  அஇ உஅம் மூன்றுஞ் சுட்டு (தொல். 31)

  நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி (தொல். 43)

  பன்னீ ருயிரும் மொழிமுத லாகும். (தொல். 59)

என்பனபோன்ற எத்துணையோ நூற்பாக்களும், இற்றை முறையில் அமைந்து எல்லாரும் எளிதுணரக் கிடக்கின்றன. இதனால், மேற்காட்டிய அமெரிக்கச் சொன்மாற்றக் காலக்கணிப்பு முற்றும் புரைபட்டதென்க.

6. எல்லா மொழிகளும் திருந்தியவையே என்பது

"இயன்மொழி யென்றும் திரிமொழி யென்றும், திருந்தியமொழி யென்றும் திருந்தாமொழி யென்றும், மொழிகட்குள் பாகுபாடில்லை. எல்லாம் திருந்தியவையே, சுருட்டு என்பது தெலுங்கில் சுட்டு என்றிருப்பின், அதற்கு அது சரியே. பொன் என்பது கன்னடத்தில் ஹொன்னு என்றிருப்பின், அதற்கு அது திருந்தியதே". இவ்வாறு கொள்வது வண்ணனை மொழிநூல்.