| |
5. மேலையாரிய மொழிகளிலும் வழங்குவன.
6. ஆரியத்திற் சிறப்புப் பொருள் அல்லது சிறப்பு வினைத் தொடர்பு கொண்டிருப்பன. |
சில தென் சொற்கள் தமிழினும் வடமொழியிற் பெருவாரியாய்
வழங்குவதால் பெரும்பான்மை வழக்கு வடசொன்மைக்குச் சான்றாகாதெனவறிக.
மேற்கூறிய விதிகள் அல்லது நிலைப்பாடுகள் ஒன்றிற்கு மேற்
பொருந்தியிருப்பின், அவற்றிலே மிகுதிக்குத் தக்கவாறு வடசொன்மை தேற்றமாம். ஆயினும், அவை
கணித முறைப்பட்ட துல்லிய விதிகளல்ல. ஆதலால், பரந்த மொழிநூற் கல்வியும் நெடுநாட் சொல்லாராய்ச்சியும்
சிறந்த நடுநிலையுமிலவேல், அவை பெரிதும் பயன்படா, உண்மையான தென் சொல்லைத் தென்சொல்லென்று
கூறுவதும் நடுவின்மையில் எதிரிகள் கூறலாம். ஆயின் ஆழ்ந்த ஆராய்ச்சியும் தூய மனச்சான்றும்
வலியுறுத்தின் எவருக்கும் எள்ளளவும் அஞ்சவேண்டுவதின்று. சிலர் அறிவாராய்ச்சி வலிமையின்றித்
தம் பட்டம் பதவிச் சிறப்பால் ஒரு முடிபிற்கு வருகின்றனர், அது மிகத் தவறாம்.
பண்டைத் தமிழில் வழங்காது பிற்காலத் தமிழில் இருவகை
வழக்கிலும் வழங்கும் வடசொற்களுள் ''பசு'' என்பது ஒன்றாகும். இது வடசொல்லென்பது வெளிப்படையாயினும்,
ஒருசார் தமிழ்ப் பேராசிரியர் இதைத் தென்சொல் லென்பதால், மாணவரும் ஆராய்ச்சியில்லாதாரும்
மயங்குவதற்கு, இடனாவதுடன், அவரவர் விரும்பியவாறே பல வட சொல் தென்சொலெனவும் பல தென் சொல்
வடசொலெனவும் பட்டு, உண்மையான ஆராய்ச்சி வலியற்றுப் போய்விடுகின்றது. பல அடிப்படைத் தென்சொல்லை
வட சொல்லென்று கூறும் வடமொழியாளர் கூற்றும் வலியுற்றுவிடுகின்றது.
பசுவைக் குறிக்கும் தூயதென்சொற்கள், ஆ (ஆன்), கறவை. குடஞ்சுட்டு,
குரால், கோ, சுரை, பெற்றம் (இருபாற்பொது) என்பன. இவற்றுள், கறவை என்பது பால் கறக்கப்படுவது.
சுரை என்பது மடி பெருத்தது; குடஞ்சுட்டு என்பது ஒருகுடம் பால் கறப்பது; குரால் என்பது புகர் (கபில)
நிறத்தது. பெற்றம் என்பது மிகப் பருத்துயர்ந்தது; ஆ, கோ என்பன பொதுப்பெயர். இவற்றுள் ஆ
என்பது தமிழிலும் திரவிடத்திலும் மட்டும் வழங்கும்; கோ என்பது ஆரியத்திலும் வழங்கும்.
E. cow, A.Sax, cu, G. kub,
D. and Dan. koe, Ice. ku, Sc. kye, skt. go, gaus .
கோவை மேய்ப்பவன் அல்லது வளர்ப்பவன் கோவன், கோவன்
- கோன் - கோனான். ஒ.நோ. ; ஆயன் - ஆவை வளர்க்கும் இடையன்
பசு என்னும் வடசொல், பாசத்தினாற் கட்டப்படுவது என்னும்
வேர்ப் பொருளது. பாசம் = கயிறு, ஆரிய வேள்வியிற் கட்டப்படும் உயிரிகள், மாந்தன், ஆன்,
குதிரை, வெள்ளாடு, செம்மறியாடு என்னும் ஐந்தென்று அதர்வவேதம் (xi, 2, 9 etc) கூறுவதாக, மானியர்
வில்லியம்சு தம் வடமொழி யாங்கில வகராதியிற் காட்டுவர். (பக்-611)
|