|
அச் சொல் அம் மொழியில் அவ்வடிவை அடைந்ததென்க. திரமிளம் என்பது தமிழ் எனத் திரிதலுமது
என்று பிரயோக விவேக நூலார் (பக். 4) தலைகீழாகக் கூறிய கூற்றில், அவ்வடிவே ஆளப் பெறுதல்
காண்க.
கால்டுவெல் புராணங்களின் பழைய மலையாள மொழிபெயர்ப்புகளிலெல்லாம்
இவ்வடிவே பெருவழக்காயிருப்பதாகக் குண்டர்ட்டு கூறுவதாகவும் அவர் எடுத்துரைப்பார். திரமிளம்
என்னும் சொல்லிற்கு (1) பஞ்ச திராவிட தேசங்கள், (2) தமிழ் என இரு பொருள் கூறும் சென்னைப்
பல்கலைக் கழகத் தமிழகராதியும்.
த்ரமிளம் என்பது பின்பு த்ரமிடம் எனத் திரிந்தது. த்ரமிடம்
என்பதும் சிறிது காலத்தின்பின் த்ரவிடம் எனத் திரியலாயிற்று. இவ்விறுதி வடிவத்தின் நீட்சியே
த்ராவிடம் என்பது. இது தமிழில் திராவிடம் என்றாகும்.
த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என்னுஞ் ரகரஞ் செருகிய
வடிவுகளெல்லாம், வடமொழி வழக்கேயன்றிப் பிறமொழி அல்லது பிறநாட்டு வழக்கல்ல. பிறமொழிகளெல்லாம்
தமிழிற்போல் ரகரமற்ற வடிவே வழங்கும். கி. பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த இவென்
திசாங் (Hwen Thsang)என்னும் சீன வழிப்போக்கர் குறிப்பில்,
சிமொலொ (Tchimo - lo)
என்னும் வடிவம் உள்ளது. இதைத்
திமல (Dimala)
அல்லது திமர (Dimara)
என்றும் படிக்கலாம் என்பர் கால்டு வெல். பாலி மொழியிலுள்ள மகாவமிசம் (mahavamso)
என்னும் இலங்கை வரலாற்றில் ''தமிலொ'' (Damilo) என்னும் வடிவம் உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத்
தமுல் (Tamul)
என்றனர். அவருள் தேனிய விடையூழியர் (Danish
missionaries)
மட்டும் தமுலிக்க மொழி (Lingua Damulica)
என அழைத்தனர். ஆங்கிலத்தில் ''தமிழ்'' (Tamil)
என்னும்
வடிவம் வழங்குகின்றது. தமிழகம் என்னும் பெயர், மேனாட்டுப் பழைய தேசப் படங்களிலும் ஞாலநூற்
சுவடிகளிலும் ''தமிரிக்கெ'' (Damirice)
என்றும், திமிரிக்க
(Dimirica)
என்றும் வழங்கப்பட்டுள்ளது.
முழுகிப்போன குமரிக்கண்டத்தில் கி. மு. (ஏறத்தாழ) ஐம்பதினாயிரம்
ஆண்டுகட்குமுன் முளைத்தெழுந்ததும், திரவிட மொழிகட்கெல்லாந் தாயுமான பழந்தமிழ் ஒரு காலத்தில்
பனிமலை(இமயம்)வரை பரவி யிருந்ததாலும், கி. மு. 1000 ஆண்டுகட்குப் பின்னரே தெலுங்கு முதலிய
திரவிட மொழிகள் அதனின்று கிளைத்ததாலும், அவற்றுள்ளும் ஒருமொழியிலும் கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்குமுன்
இலக்கியந் தோன்றாமையாலும், திரவிடம் என்னும் பெயர் தமிழையும் தமிழி னத்தையும் தமிழ்நாட்டையுமே
முதற்காலத்தில் குறித்துநின்றது. தமிழினின்று திரவிட மொழிகள் கிளைத்த பின்பும், திரவிடம்
என்னும் சொல் தமிழைத் தனிப்படக் குறிக்கும் வழக்கும் கால்டுவெல் காலம்வரை தொடர்ந்து வந்திருந்ததாகத்
தெரிகின்றது. |