பக்கம் எண் :

Yasodara Kavium

- 10 -

நூல் நுவல் பொருள்

4. மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்
  பொருவில் புண்ணிய போகம்1 புணர்ப்பதும்
  வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத்
  தெரிவு றுப்பதுஞ் செப்புத2 லுற்றதே.

(இ-ள்.) (இந்நூல், மாந்தர்க்கு) மருவு-(தம்மை) அடைதற்குரிய, வெவ்வினைவாயில்-தீவினைகள் வரும் வழியை, மறுத்து - தடுத்து, உடன் - உடனே, பொருவு இல் - நிகரற்ற, புண்ணிய போகம் - நல்வினையாலாய இன்பத்தை புணர்ப்பதும்-அடைவிப்பதையும், வெருவு செய்யும்- (உயிர்கட்கு) அச்சத்தை உண்டாக்குகின்ற, வினைப்பயன்-தீவினையின் பயன், இற்று என - இத்தகைத்தென, தெரிவுறுப்பதும்- அறிவிப்பதையும், செப்புதலுற்றது-சொல்லக் கருதிற்று.

இந்நூல் மாந்தர்க்கு வினைவரும் வழியைத்தடுப்பதையும், நல்வினைப்பயன் அடைவிப்பதையும்,  தீவினைப் பயன் இதுவெனத் தெரிவிப்பதையும் கூறக் கருதிற்றென்க.

வெவ்வினை மருவும் வாயில், ஊற்று எனப்படும் வடநூலார் ஆஸ்ரவம் என்பர்.  இது ஹீனாஸ்ரவம் முதலாகப் பத்துவகைப்படும் (யசோ.69. உரை.)

மறுத்தல்-வினைகள் வரவொட்டாது தடுத்தல்; இது- ‘செறிப்பு’ எனப்படும்; ஸம்வரை என்பர் வடநூலார். ‘வினைவழி விலக்கிநிற்கும்.... செறிப் பிதாமே‘ (மேரு.99) என்று கூறியிருப்ப தறிக.

பொருவுஇல் புண்ணியம் - ஒப்பில்லாத புண்ணியம் இதனை வடநூலார் தர்மாநுபந்தி புண்ணியம் என்பர்.  தர்மாநுபந்தி புண்ணியம் அதர்மாநுபந்தி புண்ணியம் என்றுபுண்ணியம் இருவகை.

 

1 பண்ணியம்போகம்,

2 தெருவுறுப்பதும்.