பக்கம் எண் :

25

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்

வாய்மை காக்கும் வர்த்தகரானார்

 

இவ்வாறு மடமைக் குள்ளே
     இருந்திட்ட மக்கள் வாழ்வில்
செவ்விய மாற்றங் காணச்
     சிந்தனை செய்தார் நெஞ்சே


அழகொடும் அறிவும் நல்ல
     அருளும்நற் பொருளும் பெற்றே
எழில்மிகு மக்கந் தன்னில்
     ‘கதிஜா’தாம் இருந்தார் நெஞ்சே


முஹம்மதின் புகழ்ம ணந்தான்
     மக்கத்தை வளைத்த தைப்போல்
தகவுடை கதிஜா வின்பால்
     தாவிச்சென் றதுவே நெஞ்சே


தம்முடை வாணி பத்தைத்
     தாங்கியே நடத்த அந்தச்
செம்மலை அழைப்ப தற்கு
     சிந்தைதான் கொண்டார் நெஞ்சே


அழைப்பினை கேட்ட வள்ளல்
     அபுதாலி பிடத்திற் சென்றார்
விழைவினை எடுத்து ரைத்தார்
     விடையையும் பெற்றார் நெஞ்சே


வந்தவர் கதிஜா வின்பால்
     வாய்மைசேர் உரைநி கழ்த்திச்
சிந்தையைக் கவர்ந்த தைத்தான்
     செப்புவ தாமோ நெஞ்சே


அறிவுடன் அழகும் நல்ல
     அடக்கமும் வாய்க்கப் பெற்ற
நறுமலர் முஹம்ம துந்தான்
     நல்லுளம் புகுந்தார் நெஞ்சே!


என்னுடைய வாணி பத்தின்
     ஏற்றஞ்சேர் பொறுப்ப னைத்தும்
நன்னய முடையீர் உம்பால்
     நல்கினம் என்றார் நெஞ்சே


அம்மொழி தன்னைக் கேட்ட
     அறிஞராம் முஹம்ம தும்தான்
விம்மித முற்றார் என்றே
     விளம்பவேண் டுங்கொல் நெஞ்சே

பொறுப்பினை ஏற்றுக் கொண்டே
     பொதியுடன் சிரியா நோக்கி
விருப்புறு விடையுங் கொண்டு
     விரைந்திட லானார் நெஞ்சே


எழிலது ஆட்சி செய்யும்
     எண்ணிலாக் காட்சி கள்தாம்
வழியினில் நிறைந்தி ருக்க
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே


செயலாளர் சென்ற பின்பு
     சிந்தையுள் அவரை எண்ணி
அயர்வுடன் கதிஜா இல்லில்
     அமர்ந்ததும் என்னே நெஞ்சே


நாளொடு நாளும் செல்ல
     நற்செய லாள ரைத்தான்
வாள்விழி நோகும் வண்ணம்
     வழியினில் பார்ப்பார் நெஞ்சே


படுமிடம் சிவந்த தாகும்
     படியுள அடிகள் மாடிப்
படியினில் ஏறி ஏறி
     பதைத்ததும் என்னே நெஞ்சே


அடிவானில் கதிரோன் சென்றே
     ஆழ்ந்திட்ட பின்னுங் கூட
நெடுந்தகை நினைவால் ஆங்கே
     நின்றுபார்த் திடுவார் நெஞ்சே


இன்றைக்கு வருவார் என்றே
     ஏறுவார் மாடி மீதே
என்றைக்கு வருவார் என்றே
     இறங்கியே வருவார் நெஞ்சே

எண்ணிக்கை யின்றி ஏறி
     இறங்கிடச் செய்த தும்தான்
புண்ணியர் இடத்தே கொண்ட
     பொற்புறு அன்போ? நெஞ்சே

அன்றைக்கோ அடிவா னத்தே
     அழகுறு காட்சி ஆமாம்
ஒன்றன்பின் ஒன்றாய் வந்த
     ஒட்டக அணியாம் நெஞ்சே


தம்முடை ஒட்ட கங்கள்
     தாமவை என்ற பின்பு
மும்மடங் காய் ‘கதீஜா’
     முகமொளி ராதோ? நெஞ்சே


முழுமதி கதிஜா நெஞ்சில்
     முஹம்மதின் உருவம் தோன்றி
அழகொளி வீசும் போழ்தில்
     அகமொளி ராதோ? நெஞ்சே


வெள்ளொளி ஒட்ட கத்தில்
     வேந்தர்போல் அமர்ந்தி ருந்த
நல்லொளி முத்தைக் கண்ட
     நல்லின்பம் என்னே நெஞ்சே


முஹம்மதைக் கண்ட தும்தான்
     முத்தனை கதிஜா வின்வாய்
முஹம்மது! முஹம்மது! தென்றே
     மொழிந்ததும் என்னே நெஞ்சே


அமுதத்தை அனைய அந்த
     அரும்பெயர் தனைஇ சைத்த
குமுதவாய் கோலந் தன்னைக்
     கூறிட லாமோ நெஞ்சே


கால்கள்தாம் முன்னி ழுக்க -
     கண்கள்தாம் பின்னி ழுக்க -
சால்புடை உளமோ பேசத்
     துடிதுடித் திடுமே நெஞ்சே

 

சேடியர் தமைஅ ழைத்தார்
     செய்தியை எடுத்து ரைத்தார்
வாடிய முகத்தில் வந்த
     வனப்பதும் என்னே நெஞ்சே


பாடிட லானார் எங்கும்
     பறந்திட லானார் அந்தச்
சேடியர் நிலையை இங்கு
     செப்பிட லாமோ நெஞ்சே


விரிப்பினை விரிப்பார் கையால்
     விரைமலர் எங்கும் தூவிச்
சிரிப்பினால் பேசிப் பேசிச்
     சுற்றுவார்; சுழல்வார் நெஞ்சே


துள்ளியே மகிழ்வார் ஆங்கே
     தொடுசரம் கட்டும் கையால்
கிள்ளியே மகிழ்வார் என்றால்
     கிளத்திட லாமோ நெஞ்சே

 

நிலைகொளா இன்பம் என்கொல்
     நிற்கொணா நிலைதான் என்கொல்
உலப்பிலா மகிழ்வுக் கிங்கோர்
     உவமையுண் டாமோ நெஞ்சே


வந்தநம் முஹம்ம துந்தான்
     வாயிலை அணுகா முன்னம்
சுந்தர கதிஜா ஆங்கே
     தொடர்ந்திட லானார் நெஞ்சே

இன்முகப் பொலிவி னோடும்
     இன்புடன் வருகை கூறி
அன்புடன் இருக்கை நோக்கி
     அழைத்திட லானார் நெஞ்சே


அமருமுன் நலங்கள் கேட்டே
     அடிசில்கள், கனிகள் வைத்தே
அமர்ந்திதை உண்மின் என்ற
     அழகதும் என்னே நெஞ்சே

 

அன்பதன் வெள்ளந் தன்னில்
     ஆழ்ந்திட்ட முஹம்ம தும்தான்
இன்புடன் வாங்கி வந்த
     பொருள்களை ஈந்தார் நெஞ்சே


வழங்கிய பொருள்கள் தம்மை
     வாஞ்சையாய் வாங்கி, அண்ணல்
பழகிடும் முறையை எல்லாம்
     பார்த்திட லானார் நெஞ்சே


மறுவிலா மதியைப் போன்ற
     மன்னரின் அழகில் வீழ்ந்தே
இருகயல் விழியும் நீந்த
     இன்புற்றார் கதிஜா நெஞ்சே


வாணிப விவரம் சொன்னார்
     வரவதைச் செலவைச் சொன்னார்
பேணிய முறைகள் சொன்னார்
     பெருந்தொகை தந்தார் நெஞ்சே

 

பல்லாண்டாய்ப் பார்த்தி டாத
     பெருந்தொகை தன்னைப் பார்த்தே
உள்ளத்தில் பலவும் எண்ணி
     உவந்திட லானார் நெஞ்சே


வாங்கிய தொகையைப் பார்த்த
     வனிதையர் திலகங் கொண்ட
ஓங்கிய வியப்பு தன்னை
     உரைத்திட லாமோ? நெஞ்சே


வாய்மையின் வழியில் அண்ணல்
     வாணிபம் நடத்தி, வாழ்வில்
வாய்மையே போற்று கின்ற
     வனப்பதைக் கண்டார் நெஞ்சே


கணக்குகள் யாவும் தந்து
     கன்னியர் திலகத் தின்பால்
இணக்கமாய் விடையுங் கொண்டே
     ஏகிட லானார் நெஞ்சே

 

அண்ணல்தாம் சென்ற பின்னர்
     அவரருங் குணங்கள் பற்றி
எண்ணியே கதிஜா ஆங்கே
     இன்புற லானார் நெஞ்சே


அண்ணலின் பின்னர் சென்ற
     அன்புடை மைஸ ராவை
நண்ணிய பயணம் பற்றி
     நயமுடன் வினவ லானார்


அண்ணலின் பணியா ளாக
     அமர்ந்திட்ட மைஸ ராவும்
‘உண்மையின் உறையுள்’ என்றே
     உரைதொடுத் தாரே நெஞ்சே


வர்த்தக மணியே ! இந்த
     வையத்துள் முஹம்ம தைப்போல்
பொற்புடை மனிதர் தம்மைப்
     பார்த்திலேன் என்றார் நெஞ்சே


மாண்புறு பயணம் பற்றி
     மைசரா சொல்லும் போது -
காண்பதற் கரிய தான
     காட்சிகள்-என்றார் நெஞ்சே


மேகங்கள் பந்தல் போன்ற
     மேல்வெளி தன்னில் நின்ற
ஏகமாம் காட்சி தன்னை
     எடுத்துரைத் தாரே நெஞ்சே


வளமிகு சிரியா நாட்டின்
     வனப்பினால் ஒட்ட கங்கள்
உளத்தினில் இன்பங் கொண்டே
     ஓடின என்றார் நெஞ்சே


வர்த்தகம் முடிந்த பின்பு
     வந்தஅவ் வொட்ட கங்கள்
உற்றநல் வேகத் திற்கோ
     உரையிலை யென்றார் நெஞ்சே


காரினும் கடிதாய் அந்தக்
     கவின்மிகு ஒட்ட கங்கள்
வீறுவீ றென்று வந்த
     வேகத்தைச் சொன்னார் நெஞ்சே


அண்ணலின் உடலின் மீதே
     அருங்கதிர் வெப்ப மின்றி
விண்ணிலே மேகம் பந்தல்
     விரித்தன என்றார் நெஞ்சே


வள்ளலின் பயணம் பற்றி
     வந்தஅம் மொழிக ளாலே
உள்ளத்தில் கதிஜா கொண்ட
     உவப்பதும் என்னே நெஞ்சே


இன்னும்நான் சொல்லு கின்றேன்
     இன்புடன் கேட்பீ ரென்றே
இன்மொழி மைச ராவும்
     இயம்பிட லானார் நெஞ்சே


மேகங்கள் விரைவை மிஞ்ச
     மேல்நோக்கி ஒட்ட கங்கள்
வேகமாய்ப் போட்டி யிட்டு
     விரைந்தன என்றார் நெஞ்சே


ஒப்பிலாத் தலைவர் தம்மை
     ஊரிலே விரைந்து சேர்க்க
ஒப்பிய எண்ணங் கொண்டே
     ஓடின என்றார் நெஞ்சே


தம்மெஜ மானர் தம்மைத்
     தகவுடன் மக்கம் சேர்க்க
மும்மடங் காகச் செல்ல
     முனைந்தன என்றார் நெஞ்சே


தம்மரும் தலைவி உள்ளத்
     தவிப்பினை அறிந்த தாலே
செம்மையாய் அவைக ளெல்லாம்
     சென்றதோ! என்றார் நெஞ்சே


இத்தகை மொழிகள் தம்மை
     இருசெவி யாலே கேட்டுப்
புத்தொளி முகத்தில் தோன்றப்
     புன்னகை செய்தார் நெஞ்சே


பின்னர்அப் பயணம் பற்றிப்
     பிரியமாய்க் கேட்க ஆங்கே
அன்புடை மைச ராதான்
     அடுத்திதைச் சொன்னார் நெஞ்சே


வாய்மையில், தூய்மை தன்னில்,
     வாணிபத் திறமை தன்னில்
தாய்மையின் பரிவைக் காட்டும்
     தனித்தவர் என்றார் நெஞ்சே


கனிவுடன் மக்க ளின்பால்
     கவர்ச்சியாய் உரையை ஆற்றும்
முனிவிலா வேந்தர் என்றே
     மொழிந்திட லானார் நெஞ்சே


நகையுடன் உரைக ளாடி
     நட்புடன் வணிகம் செய்தே
அகமெலாம் கொள்ளை கொண்டார்
     என்றவர் அறைந்தார் நெஞ்சே


வாணிபம் செய்யும் போது
     வள்ளலின் பேரங் கண்டோர்
மாணிக்கம் போன்றார் என்றே
     மகிழ்ந்தனர் என்றார் நெஞ்சே

வாணிப நேர்மை தன்னை
     வாய்மையோ டுணர்த்த வந்த
ஆணெழில் அரசோ என்றே
     அறைந்திட லானா ரென்றார்


எல்லோரும் வாழ்தல் வேண்டும்
     என்பதைத் தொழிலில் கொண்ட
நல்லவர் என்றே அந்த
     நாட்டவர் சொன்னா ரென்றார்


இவரிடம் பேச வந்தோர்
     இவரெழில் தன்னைப் பார்த்தே
உவப்புடன் நின்ற தைத்தான்
     உரைக்கவோ! என்றார் நெஞ்சே


சிரியாவை அடைந்த அண்ணல்
     செம்மைசேர் அழகைக் கண்டு
பிரியாமல் ஆங்கே கண்கள்
     பிறங்கின என்றார் நெஞ்சே


ஆண்களுள் அண்ணல் போன்ற
     அழகரைக் காணோம் என்றே
மாண்புறு சிரியா மக்கள்
     மகிழ்ந்தனர் என்றார் நெஞ்சே


இத்தனை அழகு வாய்ந்த
     இளவலைக் கண்ட கண்கள்
உத்தமக் கண்கள் என்றே
     உரைத்தனர் என்றார் நெஞ்சே


திரும்பிய அண்ணல் மேனி
     திகழொளி தன்னை நாடி
விரும்பியே பார்த்த மக்கள்
     வியந்தனர் என்றார் நெஞ்சே


மாணிக்கம் போன்ற அண்ணல்
     மாண்புசேர் அழகு தன்னைக்
காணக்கண் கோடி கூட
     காணாதென் றாரே நெஞ்சே


மக்களின் மனங்க வர்ந்த
     மன்னரின் உதவி யாலே
துக்கமே இல்லை என்று
     தொடர்ந்துரை தந்தார் நெஞ்சே


உரைத்தஅம் மொழிகள் எல்லாம்
     ஒளிக்கொடி கதிஜா நெஞ்சில்
நிறைந்தஓர் இன்பம் தந்த
     நிகழ்ச்சியைச் சொல்வ தாமோ