பக்கம் எண் :

43

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

கொள்கை விளக்கம் செய்வதானார்


நாட்டவர் எல்லாம் ஒன்றாய்
     நாயகம் வழியை ஏற்கக்
கேட்டவர் எல்லாம் கொண்ட
     கிளர்வதும் சிறிதோ? நெஞ்சே


பல்வேறு திசையி ருந்தும்
     பறவைகள் போல வந்து
நல்லருட் கஅபா தன்னில்
     நாட்டவர் குவிந்தார் நெஞ்சே

 

அரபுமக் கள்எல் லோரும்
     ஆண்டொரு முறை‘கஃ பா’வின்
தரிசனம் கண்டு செல்லும்
     தகைமையைக் கேளாய் நெஞ்சே


மக்காவின் மாண்பு யர்த்தும்
     மகிமைசேர் கஅபா வுக்குத்
திக்கெலாம் இருந்து பல்லோர்
     திரண்டதும் என்னே நெஞ்சே


வந்தவர் எல்லாம் கஃபா
     வனப்புறு இடத்தைச் சுற்றி
அந்தமாய்த் தங்கி நின்ற
     அழகதும் அழகே நெஞ்சே


மக்காவின் அருகில் உள்ள
     மனங்கவர் ‘அகபா’ என்னும்
தக்கஇ டத்தில் பல்லோர்
     தங்கிட லானார் நெஞ்சே

அவ்விடம் சென்ற அண்ணல்
     அன்புரை ஆற்றக் கேட்ட
செவ்வைசேர் வழியில் அன்னார்
     சேர்ந்ததும் என்னே நெஞ்சே


அருகினில் இருந்தோ ரான
     அன்புறு மதினா மக்கள்
அறுவரைக் கண்டே அண்ணல்
     ஆசிகள் சொன்னார் நெஞ்சே


அண்ணல்தம் லட்சி யத்தை
     அன்புடன் மதினா மக்கள்
எண்ணியே ஏற்கு வண்ணம்
     எடுத்துரைத் தாரே நெஞ்சே


மதினாவாழ் அந்த மக்கள்
     மாண்புறு நபியி டத்தில்
அதிஆசை யோட மர்ந்தே
     அருளுரை பெற்றார் நெஞ்சே

அருளுரை பெற்ற துந்தான்
     அதிசயம் கொள்ளும் வண்ணம்
அருமைசேர் அன்பில் அன்னார்
     ஆழ்ந்ததும் என்னே நெஞ்சே


அண்ணலின் கொள்கை கொண்ட
     அனைவரும் அண்ண லுக்குத்
திண்ணிய உறுதி தந்து
     திரண்டதும் என்னே நெஞ்சே


அறுதியே இட்டு அன்னார்
     அண்ணல்பால் உரைத்த அந்த
உறுதிசேர் மொழிகள் தம்மை
     உரைக்கின்றேன் கேளாய் நெஞ்சே


ஏகனுக் கிணையை நாங்கள்
     என்றுமே வைக்க மாட்டோம்
ஏகனே தலைவ னென்று
     எடுத்துரைத் தாரே நெஞ்சே

 

பெண்களை மதிப்போம்; பெண்ணாய்ப்
     பிறந்தநற் மகவைக் கொல்ல
எண்ணிடோம் என்றே அன்னார்
     எடுத்துரைத் தாரே நெஞ்சே


கொலை,கொள்ளை, விபசா ரத்தைக்
     கொண்டிடோம்; போர்!போர் என்றே
அலைந்திடும் நிலையை மாற்றி
     அமைவோம்என் றாரே நெஞ்சே


பஞ்சமா பாத கத்தில்
     பட்டிடா வண்ணம் மீண்டு
நெஞ்சினில் அன்பைத் தேக்கி
     நேசிப்போம் என்றார் நெஞ்சே


தொழுகையை ஏற்றுக் கொண்டோம்
     தொன்மைசேர் மனிதப் பண்பில்
ஒழுகியே நிற்போம் என்றே
     உரைத்ததும் என்னே நெஞ்சே

 

இம்மொழி அனைத்தும் கேட்டே
     இறைதூதர் களிது ளும்ப-
செம்மைசேர் இறைவ னைத்தான்
     சிந்திக்க லானார் நெஞ்சே


அண்ணல்பால் விடையை ஏற்றே
     ஆர்வமாய்த் திரும்பி வந்த
எண்ணிலா மதினா மக்கள்
     ஏற்றமும் என்னே நெஞ்சே


இஸ்லாத்தின் மாண்பு தன்னை
     எங்கெங்கும் எவரி டத்தும்
விஸ்வாசத் தோடு சொல்லி
     விளக்கிட லானார் நெஞ்சே


கேட்டவர் எல்லாம் கூடி
     கிளர்ந்தெழும் ஆர்வத் தோடு
கூட்டமாய் நபியைக் காணக்
     கூடிய தென்னே நெஞ்சே

 

சென்றவர் மீண்டும் வந்து
     செம்மலாம் நாய கத்தை
அன்புரை ஆற்றச் சொன்ன
     அழகதும் என்னே நெஞ்சே


எழுபத்து ஐந்து பேர்கள்
     இணையிலா மகிழ்வு பொங்க
வளவாழ்வில் ஒளியைத் தேட
     வந்ததும் என்னே நெஞ்சே


அண்ணலைப் பார்த்த அன்னார்
     அகமதைக் கொடுத்த தோடு
புண்ணிய இஸ்லாம் தன்னைப்
     பொற்புடன் ஏற்றார் நெஞ்சே


நல்வழி காட்டி வைத்த
     நாயகச் செம்ம லின்பால்
உள்ளத்தால் அவர்கள் சொன்ன
     உரையதைக் கேளாய் நெஞ்சே

முன்னர்யாம் வாழ்ந்தி ருந்த
     முரண்மிகு வாழ்வு தன்னை
எண்ணவே அஞ்சு கின்றோம்
     இழிவிழி வென்றார் நெஞ்சே


ஒற்றுமை இல்லா வண்ணம்
     ஓயாமல் போரில் வீழ்ந்தே
வெற்றுக்கு வாழ்ந்தோ மென்று
     விளக்கிட லானார் நெஞ்சே


நல்வழி காட்ட வந்த
     நாயக மே!உங் கள்பால்
எல்லையில் பற்றுக் கொண்டோம்
     என்றிட லானார் நெஞ்சே


பெரியீர்!நீர் காணு கின்ற
     பெரும்பெரும் வெற்றி கண்ட
சிறியோர்கள் செய்யும் துன்பால்
     திகைக்கின்றோம் என்றார் நெஞ்சே

 

மதினாவை நோக்கி நீங்கள்
     மகிழ்வுடன் வந்தீ ரென்றால்
அதிஇன்பம் கொள்வோ மென்றே
     அறைந்திட லானார் நெஞ்சே


எம்மினத் தலைவ ராக
     ஏற்றுமே நீங்கள் சொல்லும்
செம்மொழி வழிந டப்போம்
     சிந்தனை வேண்டாம் என்றார்


அம்மொழி கேட்ட அண்ணல்
     ஆராய்வோம் என்று சொல்லித்
தம்முடைப் பெரிய தந்தை
     ‘அப்பாஸ்’பால் தனித்தார் நெஞ்சே


என்னரும் மைந்தா! உன்றன்
     எதிரிகள் கொண்டி ருக்கும்
எண்ணத்தை அறிவேன் என்றே
     எடுத்துரை சொன்னார் நெஞ்சே

 

வளரும்உன் வளர்ச்சி கண்டு
     வாடிடும் பகைவர் உம்மைத்
தளரும்ஓர் நிலையில் வீழ்த்த
     தவிக்கின்றார் என்றார் நெஞ்சே


ஆவல்சேர் மதினா மக்கள்
     அன்புறு உறுதி கேட்டுப்
போவாயேல் நன்றே என்று
     புகன்றிட லானார் நெஞ்சே


மதினாமுஸ் லிம்பால் வந்தே
     மாண்புறு அப்பா ஸுந்தான்
எதிரிகள் நிலையைப் பற்றி
     எடுத்துரை தந்தார் நெஞ்சே


மதினாவாழ் மக்காள்! எங்கள்
     மாண்புறு மகனைப் பற்றி
அதிகம்நான் சொல்லேன்; ‘அன்னார்
     அன்புரு’ என்றார் நெஞ்சே

மக்கமா நகரத் திற்கே
     மாமணி போன்று நிற்போர்;
தக்கவர் என்றே உம்பால்
     தந்தனம் என்றார் நெஞ்சே


அவரைநீர் அழைத்துச் சென்றால்
     ஆயிரம் துன்பம் சூழும்
அவைகளை எதிர்த்து நிற்க
     ஆகுமோ? என்றார் நெஞ்சே


இவ்வுரை கேட்ட மக்கள்
     இணையிலா வீரங் கொண்டே
எவ்வித எதிர்ப்பி னுக்கும்
     அஞ்சோம்யாம் என்றார் நெஞ்சே


கண்ணுக்கு இமையைப் போல
     கருணைசேர் நாய கத்தை
எண்ணியே காப்போம் என்றே
     எழுந்துரை செய்தார் நெஞ்சே

 

மக்கத்தின் எதிரி எல்லாம்
     மலையெனத் திரண்ட போதும்
அக்கண மேஅ ழிப்போம்;
     ஆம்!என்றே சொன்னார் நெஞ்சே


எங்கள்பால் நாய கத்தை
     ஏற்றமாய் அனுப்பி வைப்பீர்;
தங்கள்பால் வேண்டு கின்றோம்;
     தயைசெய்க என்றார் நெஞ்சே


இவ்வுரை கேட்ட துந்தான்
     இணையிலா அப்பா ஸுந்தான்
‘அவ்விதம் நடப்பீர்’ என்றே
     அறிந்தனம் என்றார் நெஞ்சே


நாயகம் மகிழ்வ டைந்தே
     ‘நாம்ஒன்றாய் ஆனோம்’ என்றே
தூயதம் நெஞ்சால் அன்னார்
     துணைகொள்வ தானார் நெஞ்சே

 

அவர்தந்த உறுதிக் கேற்ப
     அப்பாஸும் அண்ண லாரை
உவப்புடன் அனுப்பு தற்கு
     உறுதிகொண் டாரே நெஞ்சே


இவ்வாறு மதினா மக்கள்
     இன்புடன் தந்த ஊக்கம்
செவ்விய வள்ள லுக்குச்
     சிறப்பளித் ததுவே நெஞ்சே


வலிமையைக் கொண்ட வள்ளல்
     வழியிலே மக்கள் கூடிக்
களியுடன் தொழுகை செய்த
     காட்சியும் என்னே நெஞ்சே


மக்களின் செவியில் எல்லாம்
     மாநபி முழக்கச் சொற்கள்
திக்கெல்லாம் ஒலித்த அந்த
     திருவதும் என்னே நெஞ்சே

 

கூடாரம் தன்னில் குந்தி
     கொடுங்கதை பேசி வந்தோர்
நாடோறும் நாய கம்பால்
     நல்லொளி பெற்றார் நெஞ்சே


பாலையில் அமர்ந்த வண்ணம்
     பற்பல பேசி வந்தோர்
சீலஞ்சேர் கஅபா வந்தே
     சிந்திக்க லானார் நெஞ்சே


நான்!நான்!நான்! என்று நின்றோர்
     நாயகம் இடத்தில் வந்தே
வான்மறை பெருமை கண்டு
     வளைந்ததும் என்னே நெஞ்சே


பொழுதினைப் போக்கு தற்குப்
     பொருந்திய கஅபா வுந்தான்
செழுங்கதிர் வீசு கின்ற
     சிறப்படைந் ததுவே நெஞ்சே

 

இந்தநற் காட்சி கண்டு
     எதிரிகள் பொறுப்பா ராமோ?
சிந்தையில் எரிதான் பொங்கச்
     சீறிட லானார் நெஞ்சே


அண்ணல்தம் புகழ்தாம் மக்கம்
     அனைத்தையும் கொள்ளை கொள்ள
எண்ணத்தில் கலக்க முற்றே
     எதிரிகள் நின்றார் நெஞ்சே


நகரெங்கும் நாய கத்தின்
     நற்புகழ் பேச்சே யாக
பகைவர்கள் கொண்ட நெஞ்சப்
     பதைப்பதும் என்னே நெஞ்சே


புதுமார்க்கம் நகரந் தன்னில்
     புகுந்திடும் காட்சி கண்டே
இதயத்தில் எரியுண் டாக்கி
     எதிரிகள் நின்றார் நெஞ்சே

 

தூற்றிய மக்கள் சில்லோர்
     தூதரின் வழியை ஏற்றுப்
போற்றிடக் கண்ட அன்னார்
     புழுங்கிட லானார் நெஞ்சே


அடங்கியே கிடந்த மக்கள்
     ஆர்த்தெழுந் தாரே என்றே
இடருற்ற பகைவர் கொண்ட
     எரிப்பதும் சிறிதோ? நெஞ்சே


அடங்கொணாச் சீற்றங் கொண்டே
     அபுஜஹில் எழுவ தானான்;
மடக்குவார் போலும் இந்த
     மக்கத்தை! என்றான் நெஞ்சே


அல்லாஹ்வின் அருளைப் பெற்ற
     அருங்குன்றாம் அண்ண லாரைத்
தொல்லைக்குள் ஆழ்த்து தற்குத்
     தொடுத்ததும் என்னே நெஞ்சே

 

தொழுகையின் பெயரை இங்கு
     சொல்லியே முஸ்லிம் மக்கள்
செழுமைசேர் வலிவைத் தேடும்
     செய்தியோ? என்றான் நெஞ்சே


நாட்டினைப் பிடிப்ப தற்கு
     நயவஞ்சத் திட்டம் தானோ ?
கூட்டமாய்க் கூடு கின்ற
     குறிப்பென்ன ? என்றான் நெஞ்சே


பூலோக மெங்கும் காணாப்
     புதுமைப்பு ரட்சி தானோ ?
வாளேந்தும் பயிற்சி தானோ ?
     என்றவன் வம்பு ரைத்தான்!


தொழுகைஎன் றேஉ ரைத்துத்
     தொகுப்பாக மக்கள் தம்மை
அழிவுப்பா தைக்கே தள்ளும்
     அநீதிஎன் றானே! நெஞ்சே

 

ஏதேதோ எடுத்து ரைத்தே
     எல்லோரை யும்கெ டுக்கும்
தீதிதை அழிப்போம் என்றே
     திரிந்திட லானான் நெஞ்சே


அமைதியாய் இருந்த அந்த
     ஆலயம் கஅபா வுந்தான்
நமைஎதிர்ப் போரின் கூடம்
     ஆவதோ ? என்றான் நெஞ்சே


நாயகம் வழிசெல் வோரை
     நாமழிக் காமல் போனால்
நாயகம் வழிசெல் வோர்கள்
     நமையழிப் பாரே என்றான்


ஆகவே நாமெல் லோரும்
     அவசரக் கூட்டம் போட்டே
ஏகமாய்த் தலைவர் எல்லாம்
     எதிர்ப்போம்என் றானே நெஞ்சே

 

நாம்மட்டு மின்றி இந்த
     நகரத்து குருக்கள், வல்லார்,
நாமஞ்சேர் புலவர் தம்மை
     நாம்கூட்டு வோமே என்றான்


கூடிய பகைவர் எல்லாம்
     கொதித்திடும் நெஞ்சத் தோடு
சாடியே அழிப்போம் என்றே
     சாற்றிட லானார் நெஞ்சே


மக்கத்து மக்கள் மாறும்
     மாட்சியைக் கண்ட அன்னார்
ஒக்கவே கூடிச் சொன்ன
     உரைகளைக் கேளாய் நெஞ்சே


என்னதான் நேர்ந்த போதும்
     எதிரிஅந் நாய கத்தைக்
கொன்றிட வேண்டும்; போரில்
     குதிப்போம்நாம் என்றார் நெஞ்சே

 

நாயக மொழியைக் கேட்டு
     நழுவிய மக்கள் தம்மை
நாயகத் தோடு மாய்ப்போம்,
     நலியட்டும் என்றார் நெஞ்சே


இவ்வாறு பேசி நின்ற
     எதிரிகள் பேச்சை அண்ணல்
செவ்வையாய் அறிந்த தாலே
     சிந்தை வருந்தி நின்றார்


மலையெனப் பகைவந் தாலும்
     மறையோத அஞ்சேன் என்றே
நிலைபெற்ற நிலையில் அண்ணல்
     நின்றதும் என்னே நெஞ்சே


ஆயினும் சோர்வில் லாமல்
     அனைவரை யும்அ ழைத்து
நாயகம் எடுத்து ரைத்த
     நன்மொழி கேளாய் நெஞ்சே

 

முஸ்லிம்கள் வளர்ச்சி கண்ட
     முரடர்கள் செய்யும் இந்த
விஸ்வாச மில்லாப் போக்கால்
     வீழ்வதோ? என்றார் நெஞ்சே!


ஆகையால் அச்ச மின்றி
     அன்புறு இஸ்லாம் மார்க்கத்
தாகத்தை மக்க ளுக்குத்
     தந்திட லானார் நெஞ்சே


வஞ்சனை மிக்க அந்த
     வலிமைசேர் பகைவர் கூட்டம்
நஞ்சனைச் செய்கை தன்னை
     நாடிய தென்னே நெஞ்சே


வள்ளலார் வெளியில் வந்தால்
     வலிந்துபோய்க் கேலி செய்தே
எள்ளிய காட்சி தன்னை
     எடுத்துரைப் பதுவோ ? நெஞ்சே

 

அண்ணலார் அடிதொ டர்ந்தோர்
     அகமெலாம் வருந்தி நாளும்
புண்படும் வண்ணம் கீழ்மை
     புரிந்திட லானார்! நெஞ்சே


இத்தகை நிலையைக் கண்ட
     இதயத்தில் வருத்த முற்ற
உத்தம நாய கந்தான்
     உருகிட லானார் நெஞ்சே


பகைவர்கள் கையிற் சிக்கிப்
     பண்புள முஸ்லிம் மக்கள்
அகம்வருந் துவதோ? என்றே
     ஆராய லானார் நெஞ்சே


பகைவர்கள் கையில் அன்னார்
     பரிதவிப் பதுவோ? என்றே
அகமிகு வருந்தி அண்ணல்
     அமர்ந்திட லானார் நெஞ்சே

 

நெடுநேர ஆய்வுக் குப்பின்
     நேர்வழி ஒன்றைக் கண்டு
முடிவதைச் செயல்ப டுத்த
     முனைந்திட லானார் நெஞ்சே


மதினாவுக் கேமுஸ் லிம்கள்
     மனம்மேவச் செல்வோம்; அந்தச்
சதியாளர் திட்டம் எல்லாம்
     சரிந்திடும் என்றார் நெஞ்சே


எல்லோரும் சென்ற பின்பே
     ஏகுவோம் நாமும் என்றே
உள்ளத்தில் திட்ட மிட்டே
     ஊக்கிட லானார் நெஞ்சே


சிறு சிறு கூட்ட மாகச்
     சென்றனர் முஸ்லிம் மக்கள்
இறுதியில் நபியு டன்தான்
     இருவரே இருந்தார் நெஞ்சே

 

அபுபக்க ரோடு அன்பு
     அலியவர் இருவ ருந்தான்
நபிகளின் துணையாய் நிற்க
     மற்றவர் சென்றார் நெஞ்சே

தான்இன்னல் பட்ட போதும்
     தவறியும் பிறர்தான் துன்பம்
ஏன்எய்த வேண்டும்? என்றே
     எண்ணிய தென்னே நெஞ்சே

தான்முந்திச் செல்லா வண்ணம்
     தம்முடை மக்கள் செல்ல-
பான்மையாய் எண்ணங் கொண்ட
     பரிவதைப் பாராய் ! நெஞ்சே


தாயனை நபிகள் நாதர்
     தம்முடைத் தோழர் தம்மை
நேயமாய்க் காக்க-அன்பின்
     நெகிழ்ச்சியும் என்னே நெஞ்சே

 

முஸ்லிம்கள் மதினா சென்றதால்
பகைவர்கள் முனிவுகொண்டெழுந்தனர்

எல்லோரும் போனார் என்றே
     எதிரிகள் அறிந்த தும்தான்
எல்லையில் கோபங் கொண்டே
     ஏமாந்தோம் என்றார் நெஞ்சே


ஆயினும் நாய கந்தான்
     அகப்பட்டார் கொல்வோம் என்றே
தீயவன் அபுஜ ஹில்தான்
     தீஎன லானான் நெஞ்சே


அன்னவன் மொழியைக் கேட்டே
     அனைவரும் கொதித்தெ ழுந்தே
இன்றிர வுக்குள் கொல்வோம்
     என்றுரைத் தாரே நெஞ்சே


அப்படி யானால் மாலை
     அனைவரும் முடிவு செய்வோம்
தப்பாமல் வாரீர் என்றே
     சாற்றிட லானான் நெஞ்சே

 

குறைஷியர் கொடுமைக் கெல்லாம்
     உதவிய *‘தாருன் நத்வா’
நிறைவுற்ற நிலையை இங்கு
     சொல்லிட லாமோ நெஞ்சே


* தாருன் நத்வா - குறைஷியர்களின் சதியாலோசனைக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒருமன்றம்.


பகைமைகொள் தலைவர் எல்லாம்
     பாசறைக் கூட்டம் இட்டே
முகம்மதை அழிப்ப தற்கு
     முனைந்திட லானார் நெஞ்சே


ஒவ்வொரு தலைவ னுந்தான்
     ஓங்கிய குரலி னோடு
எவ்வாறு ஒழிப்ப தென்றே
     இயம்பிட லானான் நெஞ்சே


தாருன்நத் வா’என் றோதும்
     தனிமைசேர் இடத்தில் அன்னார்
காருண்ய நபியை மாய்க்கக்
     கறுவிட லானார் நெஞ்சே


கூட்டத்தில் வந்தி ருந்த
     குருக்கள்தாம் மனம கிழ்ந்தே
நாட்டமாய் எடுத் ரைத்த
     நஞ்சுரை கேளாய் நெஞ்சே


பொய்யதை எடுத்து ரைத்துப்
     பொருள்கொளும் புரோகி தர்தாம்
மெய்யுடை நாய கத்தை
     மேவிடு வாரோ ? நெஞ்சே


வஞ்சகம் செய்தே நாளும்
     வளர்ந்திடும் அந்தக் கூட்டம்
செஞ்சொலால் கவர்ந்தா ரைத்தான்
     சேர்த்திடு மாமோ? நெஞ்சே


கல்லாமை தன்னைக் கொண்டு
     கண்கட்டிப் பொருளைத் தேடும்
பொல்லாத கூட்டம் அண்ணல்
     புகழ்ஏற்கு மாமோ? நெஞ்சே

 

எண்ணிலா நல்லோர் தம்மை
     எரித்திட்ட அந்தக் கூட்டம்
அண்ணலின் புகழைக் கண்டே
     அமைந்திடு மாமோ? நெஞ்சே


உள்ளத்தில் கோபம் பொங்க
     உறுத்திடும் பகையால் அண்ணல்
நல்லுயிர் பறிப்போ மென்றே
     நாடிட லானார் நெஞ்சே


நபிகளின் உயிரைக் கொல்ல
     நல்லதோர் சமய மென்றே
அபகீர்த்திக் கஞ்சா நெஞ்சர்
     ஆர்த்திட லானார் நெஞ்சே


நாயகம் வீழ்ந்தார் என்றால்
     நாம்பிழைத் திடலாம் என்றே
காய்ந்திடும் நெஞ்சத் தோடு
     கத்திட லானார் நெஞ்சே

 

புதுமார்க்கம் புதிய தென்று
     புகன்றிடும் மார்க்கத் தாலே
இதயங்கள் கெடுமென் றோதி
     எரியூட்ட லானார் நெஞ்சே


முகம்மது நம் பகைவர்
     முரண்பாடு கொண்ட தாலே
அகமதில் கருணை யின்றி
     அழிப்போம்என் றுரைத்தார் நெஞ்சே


குருக்கள்தாம் நபியை மாய்க்க
     கொடுமைசேர் திட்டம் சொல்லி
பொறுப்பதோ என்றே ஆங்கே
     புழுங்கிட லானார் நெஞ்சே


கூடியே இருந்தோ ரெல்லாம்
     குதூகலம் கொண்ட தோடு
நீடிய அரவம் செய்த
     நீசமும் என்னே நெஞ்சே

 

இன்றிர வதனில் தூதர்
     இல்லத்திற் கேகி வாளால்
கொன்றிட வேண்டும் என்றே
     குரல்வந்த தென்னே நெஞ்சே

அபுஜஹில் உரைத்த அந்த
     ஆணையை ஏற்றுக் கொண்டு
நபியினைக் கொல்வோர் கூட்டம்
     நகைத்ததும் என்னே நெஞ்சே

     
ஆணையைக் கேட்டோ ரெல்லாம்
     ஆகட்டும் முடிப்போம் என்றே
ஆணைக்குப் பதிலு ரைத்த
     ஆர்ப்பதும் என்னே நெஞ்சே

     
இன்றோடு பகைவர் கொட்டம்
     இறக்கட்டும் என்று சொல்லி
குன்றுபோல் அபுஜ ஹில்தான்
     குதித்ததும் என்னே நெஞ்சே

     

பகைவர்கள் கொண்ட அந்தப்
     பாவங்கள் தன்னை இங்கு
வகையுடன் சொல்வ தற்கு
     வார்த்தையுண் டாமோ நெஞ்சே

     
திரும்பிய பக்கம் எல்லாம்
     தீக்கனல் பாயும் வண்ணம்
நிரம்பிய பகைவர் ஆங்கு
     நின்றதும் என்னே நெஞ்சே

     
வழிப்பறி செய்வோர் கூட்டம்
     தலைவனாம் வரிந்தெ ழுந்தே
அழிப்போம்அப் பகையை என்றே
     ஆர்த்ததும் என்னே நெஞ்சே

     
மக்கத்துப் பகைவர் எல்லாம்
     மாபெரும் கூட்ட மாகி
எக்கணம் கொல்வோம் என்றே
     எரிந்ததும் என்னே நெஞ்சே

     

முகம்மதை வாழ விட்டால்
     முடியும்நம் வாழ்க்கை என்றே
அகமெலாம் கறுக றுக்க
     அறந்திட லானான் நெஞ்சே


மற்றொரு தலைவன் ஆங்கே
     மலைஎன எழுந்து நின்று
உற்றதோர் ஐயம் கொண்டேன்;
     உரைக்கின்றேன் என்றான் நெஞ்சே


முகம்மதை முதலில் கொல்லும்
     முழுப்பொறுப் பதனை யார்பால்
தகவுடன் தருவ தென்று
     தவித்துமே கேட்டான் நெஞ்சே


முகம்மதைக் கொன்றோ மானால்
     மூளுமோ போர்?என் றோதி
அகமெலாம் துடிக்கு வண்ணம்
     அறைந்திட லானான் நெஞ்சே

 

கூட்டத்தில் சிறி நேரம்
     கூக்குரல் இல்லை பின்னர்
நாட்டமாய் ஒருவன் தோன்றி
     நவின்றதைக் கேளாய் நெஞ்சே


ஒருவன்தான் கொன்றான் என்றால்
     உருத்தெரி யாமல் அண்ணல்
பெருங்குலம் அவனைத் தீர்க்கும்;
     பேதமை என்றான் நெஞ்சே


தலைவர்கள் எல்லாம் கூடித்
     தயக்கமே இல்லா வண்ணம்
தலைதனைக் கொய்வோம்; அன்றே
     தப்பிப்போம் என்றான் நெஞ்சே


ஆம்! ஆம்! ஆம்! அதுவே நன்று
     அனைவரும் சேர்ந்தே செய்வோம்;
வீம்புடை முஸ்லிம் மக்கள்
     விலகுவார் என்றார் நெஞ்சே