பக்கம் எண் :

42

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

வான்பயணத்திற்குப் பின் இஸ்லாம்

விண்ணேற்றத் திற்குப் பின்னர்
     விந்தைசேர் இஸ்லாம் மார்க்கம்
வண்ணமாய் ஊன்றி எங்கும்
     வளர்ந்ததும் என்னே நெஞ்சே


மின்வேகப் பணிகள் செய்து
     மேலவன் மார்க்கம் ஓதி
கண்ணிய மாக நின்ற
     காட்சியும் என்னே நெஞ்சே


புதியவோர் சக்தி பெற்ற
     பூலோக வள்ளல் ஆங்கே
அதிவிரை வாக மார்க்க
     அறவுரை சொன்னார் நெஞ்சே


ஐவேளைத் தொழுகை கொண்டே
     அகத்திருள் போக்கிக் கொள்ளும்
மெய்யன்புத் ‘தொழுகை’காட்டும்
     மேன்மையைச் சொன்னார் நெஞ்சே


பாவங்கள் முற்றும் நீங்கிப்
     பாரெலாம் ஒன்றாய் ஆக
ஆவலாய் இறைவன் தந்த
     அருட்கொடை அன்றோ! என்றார்


வேற்றுமை எல்லாம் நீங்க
     வீண்பகை அச்சம் நீங்க
ஆற்றலோன் புவிக்க ளித்த
     ஆயுத மாமோ ! என்றார்

 

ஒற்றுமை நலத்தை நாடி
     உலகமே ஒன்றாய்க் கூடி
வெற்றிகள் காண்ப தற்கு
     வாய்த்தவோர் கொடையோ ? என்றார்


அறத்தொண்டே சிறந்த தென்றே
     ஆற்றிடும் நெறிய தற்கே
திறங்கண்டு இறைவன் தந்த
     திருப்பரி சதுவோ ? என்றார்


தினமொன்றுக் கைந்து வேளை
     திரளான பக்தர் எல்லாம்
இனமொன்றாய்த் தொழுவ தாலே
     இறையாட்சி காண்பீர் என்றார்


எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்தே
     எல்லோரும் ஒன்றே என்று
நல்லோராய் வாழ்வ தற்கு
     நல்கிய பரிசே என்றார்

பாசத்தால் பாரில் எல்லாம்
     பண்புகள் ஓங்க, பொல்லா
நீசங்கள் எல்லாம் மாள
     நினைத்தளித் ததுவே என்றார்


எண்களுக் குள்ள டங்கா
     ஏற்றஞ்சேர் பயன்க ளெல்லாம்
புண்ணியத் தொழுகை தன்னில்
     பொலிவதைப் பாரீர்! என்றார்


ஆண்டவன் ஆதிக் கத்தில்
     அமைந்தஇவ் வுலகந் தன்னில்
ஈண்டிய தொழுகை யாலே
     இதயமொன் றாகும் என்றார்


தொழுகைஒன் றுள்ள மட்டும்
     தொன்மைசேர் உலகம் பண்பால்
ஒழுகிடும் தன்மை தன்னை
     உரைத்திட லானார் நெஞ்சே

சித்தத்தின் தூய்மை யோடு
     சீர்மையாய்த் தொழுவோன் அல்லாஹ்
சித்தத்தின் உறவைப் பெற்றான்
     என்றவர் உரைத்தார் நெஞ்சே


நம்பிக்கை கொண்டோர்க் கெல்லாம்
     நற்தொழுகை *‘மிஃராஜ்’ அன்றோ?
செம்மையாய்த் தொழுவோர்க் கேகன்
     திருவருள் உண்டாம் என்றார்

* மிஃராஜ் - இறைவனிடத்தில் பக்தன் ஒன்றி வழிபடும்
தவ நிலை.


முறையான தொழுகை தன்னால்
     முன்னவன் இடத்தில் பக்தன்
உரையாடும் தன்மை தன்னை
     உணரலாம் என்றார் நெஞ்சே


நாயகம் ஆற்றி வந்த
     நலமுடை உரையி னாலே
நேயஞ்சேர் தொழுகைக் கென்றே
     நிறைந்தனர் பலரும் நெஞ்சே


விண்ணிலே பெற்று வந்த
     வியப்புறு தொழுகை யாலே
எண்ணிலா மக்கள் நெஞ்சில்
     இலங்கிட லானார் நெஞ்சே


நபிகளின் வழியை ஏற்றோம்
     நலமெலாம் பெற்றோ மென்றே
நபியவர் துணையாய் மக்கள்
     நயந்ததும் என்னே நெஞ்சே


உடல்,பொருள், ஆவி எல்லாம்
     உயர்நபிப் பரிசாய் ஈந்தே
அடங்கொணாப் புகழைக் கொள்வோம்
     என்றுமே அறைந்தார் நெஞ்சே


இறைகாட்சி கண்ட பின்னர்
     இணையிலா ஒளியைப் பெற்று
நிறைமணி நாய கந்தான்
     நின்றொளிர்ந் தாரே நெஞ்சே

 

அண்ணலைக் கண்டோ ரெல்லாம்
     ஆட்பட்டே ஒளிய டைந்தே
எண்ணிலா இன்பங் கண்ட
     இயல்பதும் என்னே நெஞ்சே


அண்ணலா ரிடத்திற் சென்றே
     அருமுரை யாற்று வோர்கள்
அண்ணலின் வழியிற் செல்ல
     அகமதைக் கொள்வார் நெஞ்சே


பாவத்தை நீக்க வல்ல
     பரிவுடை நாய கத்தை
ஆவினைத் தொடருங் கன்றாய்
     அவரெலாம் சென்றார் நெஞ்சே


அண்ணலைத் தொடர்வா ரெல்லாம்
     அகத்தொளி நிரம்பப் பெற்றே
ஒண்மையாய்த் தொழுகை செய்த
     உருக்கமும் என்னே நெஞ்சே

கூடியே தொழுகை செய்யும்
     கொள்கையில் நன்மை கண்டோர்
நாடியே அதனை ஏற்று
     நாயனைத் தொழுதார் நெஞ்சே


தீஞ்சுவை மொழியில் வல்ல
     திருநபி தொழுகை தன்னில்
வாஞ்சையாய் மக்கள் எல்லாம்
     வணங்கிய தென்னே நெஞ்சே


திரள்திர ளாக மக்கள்
     தொழுகையில் சேரக் கண்டே
அறக்கடல் அண்ணல் கொண்ட
     ஆனந்தம் என்னே நெஞ்சே


அண்ணலார் கொள்கை நாட்டில்
     ஆலாக ஊன்ற ஊன்ற
எண்ணற்றோர் அவரின் கூற்றை
     ஏற்றதும் என்னே நெஞ்சே

 

வள்ளலைத் தழுவி ஆங்கே
     வாஞ்சையாய் மக்கள் நின்ற
விள்ளரும் காட்சி தன்னை
     விளக்குவ தாமோ ! நெஞ்சே


மணியனை நாய கத்தின்
     மாண்புறு வழியை ஏற்றே
அணிஅணி யாக மக்கள்
     ஆர்த்ததும் வியப்பே நெஞ்சே


தளபதி போன்றே அண்ணல்
     முன்னின்று தலைமை ஏற்றுத்
தலைவனை வணங்கி நின்ற
     தகைமையும் என்னே நெஞ்சே


படைஅணி வகுப்பே என்ன
     பக்குவ மாக மக்கள்
கொடைஅருள் வல்லான் தன்னைத்
     தொழுததும் என்னே நெஞ்சே

 

உளமெலாம் களியில் மூழ்க
     உடலது வலிமை கொள்ள
நலமிகு தொழுகை நல்கும்
     நற்பயன் கண்டார் நெஞ்சே


உடல்,உடை, உள்ளம் யாவும்
     உயரியத் தூய்மை கொள்ள-
திடமிகு வாழ்வில் மக்கள்
     திருந்திய தென்னே நெஞ்சே


நைந்தஓர் நிலயில் வாழ்வில்
     நலமேதும் இல்லா மக்கள்
சிந்தையில் ஒளியைப் பெற்ற
     சீர்மையும் பெரிதே நெஞ்சே


போட்டியில் பூசல் தன்னில்
     புரண்டிட்ட மக்கள் எல்லாம்
நாட்டிய தொழுகை யாலே
     நட்புற்ற தென்னே நெஞ்சே

 

விலங்கினம் போன்று வாழ்ந்த
     விந்தைசேர் மக்கள் வாழ்வில்
துலங்கிய பெருமை பற்றித்
     தொடுத்துரைப் பதுவோ நெஞ்சே


குடித்துமே குடியில் மாசைக்
     கொண்டவர் மறையை நெஞ்சால்
படித்துமே வாழ்வில் கொண்ட
     பண்பதும் என்னே நெஞ்சே