பக்கம் எண் :

45

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

மதீனா நோக்கிப் புறப்படுதல்

நான்காம் நாளில் அப்துல்லாஹ் இப்னு உரைக்கித்
தைலமீ என்ற வழிகாட்டி ஒருவர் துணைகொண்டு
அண்ணலார் மதீனா நோக்கிப் புறப்படுவதானார்

குறைஷியர் நிலையை எல்லாம்
     கூறவே தெரிந்துகொண்டு
நிறைவுடன் நான்காம் நாளில்
     கிளம்புவோம் என்றார் நெஞ்சே


முன்னரே திட்ட மிட்ட
     முடிவதை ஒப்ப ஸித்தீக்
தன்னிரு ஒட்ட கத்தை
     ‘தலமீ’ தந்தார் நெஞ்சே


முஸ்லிம்அல் லாத போதும்
     முன்வந்து உதவ வந்த
விஸ்வாச தல மீயின்
     விருப்பம் என்னே நெஞ்சே


மதினாசெல் மார்க்கந் தன்னை
     மாண்புடன் அறிந்த அந்த
அதிநுட்ப தல மீதான்
     அறைந்திட லானார் நெஞ்சே


நற்றவ வள்ளல் ஒன்றில்
     நலமுடன் ஏறிக் கொள்ள
மற்றொன்றில் இருவ ருந்தான்
     மகிழ்ந்தமர்ந் திட்டார் நெஞ்சே


தகிக்கும்அப் பாலை தன்னில்
     தலைவரும் தோழர் தாமும்
சகிக்கொணாத் துன்பி னோடு
     தாவியே சென்றார் நெஞ்சே


வெயிலதன் சூடோர் பக்கம்
     வெண்தரைச் சூடோர் பக்கம்
அயர்வுடன் வள்ளல் சென்ற
     அல்லல்தான் என்னே நெஞ்சே


கதிரவன் வெம்மை யாலே
     கருணைசேர் வள்ளல் மேனி
வெம்துபிய தென்னே நெஞ்சே
     வேதனை என்னே நெஞ்சே

 

நீரதும் நிழலு மற்ற
     நீண்டஅப் பாலை தன்னில்
சீர்மிகு வள்ளல் கொண்ட
     சிரமங்கள் என்னே நெஞ்சே


நிழல்எங்கும் உண்டா? என்றே
     நீள்வெளி எங்கும் பார்த்துச்
சுழன்றஅவ் வபுபக் ரின்நற்
     துணையதும் என்னே நெஞ்சே


நீண்டதூ ரத்தில் நின்ற
     நிழல்மரம் ஒன்றைக் கண்டே
மூண்டநல் மகிழ்வு தன்னில்
     மிதந்திட லானார் நெஞ்சே


அண்ணலை அழைத்துக் கொண்டே
     அவ்விடம் நோக்கி ஏகி
பண்ணிய பரிவுத் தொண்டைப்
     பகர்ந்திடக் கேளாய் நெஞ்சே

போனதும் மேலி ருந்த
     போர்வையைத் தரையில் இட்டுத்
தேம்மொழி நபிக ளாரைப்
     படுக்கவைத் திட்டார் நெஞ்சே


பசியினால் அண்ண லாரும்
     பரிதவிப் பாரே என்று
நசையுடன் பாலை தன்னில்
     நடந்திட லானார் நெஞ்சே


நடந்தவர் ஆடு மேய்க்கும்
     ஒருவனை நாடி ஆங்கு
நடந்துமே சென்று பால்தான்
     வாங்கிவந் தாரே நெஞ்சே


அண்ணலும் இருவர் தாமும்
     ஆட்டுப்பா லதனை உண்டே
எண்ணிலா மகிழ்வ டைந்த
     ஏற்றமும் பெரிதே நெஞ்சே

 

களைப்பதும் பசியும் தீர
     களிப்புற்ற கருணை வள்ளல்
இலட்சியப் பயணந் தன்னைத்
     தொடர்ந்திட லானார் நெஞ்சே

பகைமத் தீ வளர்த்த பாதகர்கள்

அண்ணலைத் தேடித் தேடி
     ஆத்திரம் கொண்டே நெஞ்சில்
புண்பட்ட பகைவர் எல்லாம்
     புழுங்கிட லானார் நெஞ்சே


பாலையில் ஓரி டத்தில்
     பரிவுடன் ஒன்று கூடிக்
கோலஞ்சேர் நபியைப் பற்றிக்
     கூறிட லானார் நெஞ்சே


ஓர்வழிப் போக்கன் ஆங்கே
     உட்கார்ந்தி ருப்போர் தம்மை
யாரைநீர் தேடு கின்றீர் ?
     இயம்புக! என்றான் நெஞ்சே

 

இருவரைத் தேடு கின்றோம்
     இவ்வழி சென்றா ராமோ ?
தருவீர்நற் பதிலை என்றே
     தவித்திட லானார் நெஞ்சே


இருவரா? மதினா நோக்கி
     இருவர்தாம் செல்லு கின்றார் ;
இருவிழி யாலே அங்கு
     கண்டனன் என்றான்-நெஞ்சே


இம்மொழி கேட்ட துந்தான்
     இரைகண்ட சிங்கம் போல
தம்முடைக் குதிரை மீது
     சுராக்காவும் விரைந்தான் நெஞ்சே


குறிப்பிட்ட இடத்தை நோக்கி
     கூர்அம்பு போல சென்றான்
திரும்பஅ பூபக் கர்தான்
     சுராக்காவைக் கண்டார் நெஞ்சே

 

வருபவன் சுராக்கா என்றும்
     வம்பனே என்றும் கண்டு
அருங்குண வள்ள லின்பால்
     அறைந்திட லானார் நெஞ்சே


அம்மொழி கேட்ட வள்ளல்
     அதிர்ச்சியே கொள்ளா வண்ணம்
எம்மிறை உள்ளா னென்றே
     எழிலுடன் சொன்னார் நெஞ்சே


துன்பத்தைக் கண்ட அண்ணல்
     தூயவ! என்ன செய்வோம்
அன்புடன் காப்பாய்! என்றே
     வேண்டிட லானார் நெஞ்சே


தொழுதநம் வள்ள லுந்தான்
     திரும்பியே பார்த்த போது
விழுந்துமே சுராக்கா ஆங்கு
     வேதனை கொண்டான் நெஞ்சே

 

மீண்டுமே சுராக்கா ஆங்கு
     மேலெழ எண்ணும் போது
ஆண்டகை திரும்பி நோக்க-
     அம்மகன் வீழ்ந்தான் நெஞ்சே


விழுந்தவன் குதிரை ஏறி
     விரட்டவே அண்ணல் நோக்க
விழுந்தனன் தரையின் மீது
     விந்தைதான் என்னே நெஞ்சே


மும்முறை தரையில் வீழ்ந்து
     முனகிய சுராக்கா வுந்தான்
அம்பினைத் தொடுவ தற்கே
     அஞ்சிட லானான் நெஞ்சே


எதிர்பாரா விதத்தில் ஏதோ
     எல்லையில் சக்தி ஒன்று
எதிர்நின்று தடுப்ப தைத்தான்
     எண்ணிட லானான் நெஞ்சே

 

ஏதோஓர் பெரிய சக்தி
     எதிர்ப்பதை அறிந்து கொண்டு
காதெலாம் அடக்கும் வண்ணம்
     கத்திட லானான் நெஞ்சே


குதிரைமீ திருந்த வண்ணம்
     குரல்கொடுத் திட்ட போது
எதிரியாம் சுராக்கா சொன்ன
     மாற்றத்தைக் கேளாய் நெஞ்சே


நில்லுங்கள் உங்க ளுக்கு
     நிந்தைகள் செய்யே னென்றே
அல்லலால் அபுபக் கர்பால்
     அறைந்ததும் வியப்பே நெஞ்சே


அண்ணல்அம் மொழியைக் கேட்டே
     அகலாமல் நிற்க, வந்தே
கண்ணீரால் சுராக்கா வுந்தான்
     கதறிட லானான் நெஞ்சே

 

மன்னித்தேன் செல்வீ ரென்றே
     மாநபி விடைய ளிக்க
நன்றியால் சுராக்கா சொன்ன
     நயமொழி கேளாய் நெஞ்சே


மக்கம்நான் செல்வேன்; சென்றால்
     மாநபி நும்மைப் பற்றி
மக்கள்பால் சொல்லே னென்றே
     சென்றிட லானான் நெஞ்சே


வழியினில் வந்தோர் தம்மை
     வா வா வா செல்வோம் நானும்
வழியெங்கும் பார்த்தேன்; இல்லை
     வாருங்கள் என்றான் நெஞ்சே

மற்றுமோர் எதிரிகள் குழு வழி மறித்தது

அபுபக்க ரோடு சேர்ந்தே
     அங்கிருந் தேவி ரைந்து
நபிகள்தாம் மதினா நோக்கி
     நகர்ந்திட லானார் நெஞ்சே

 

அப்படிச் சென்ற போதும்
     ஆபத்தும் வந்த தென்னே!
எப்படி யோதான் ஆங்கே
     எதிரிகள் வந்தார் நெஞ்சே


எழுபது பேர்க ளோடு
     எதிர்த்தேஓர் மனிதன் வந்து
செழுங்கதிர் நாய கத்தை
     வளைத்திட லானான் நெஞ்சே


நாயகம் நடுவில் நிற்க
     நல்லதோர் வளையம் போல
தீயகம் கொண்டோர் சூழ்ந்து
     நின்றதும் என்னே நெஞ்சே


வளைத்தவர் நாய கத்தை
     வா வா வா என்றே இன்பில்
திளைத்தம் என்னே ! இங்கு
     திரும்புக! என்றான் நெஞ்சே

 

அபுபக்கர் அச்சங் கொண்டு
     அடுத்தென்ன நிகழும் என்றே
நபிகளின் முகத்தை நோக்க
     நடந்ததைக் கேளாய் நெஞ்சே


பகைவர்கள் சூழ்ந்த போதும்
     பயமதே இல்லா வண்ணம்
நகைமுகத் தோடு வள்ளல்
     இருந்திட லானார் நெஞ்சே


நேர்ந்ள்ள நிலையால் அண்ணல்
     நெஞ்சத்தில் இறையை எண்ணி
சார்ந்ள்ள பகைவ ருக்குச்
     சாற்றிட லானார் நெஞ்சே


அற்புத மொழியில் ஆங்கே
     அறிவுரை ஆற்றக் கேட்டோர்
நற்பேறு பெற்றோ மென்றே
     நயந்திட லானார் நெஞ்சே

 

பகைபொங்க வந்த அன்னார்
     பரிவுரை கேட்ட பின்னே
நகைபொங்க நின்ற தைத்தான்
     நவின்றிட லாமோ! நெஞ்சே


மகிழ்ந்தவர் இஸ்லாம் தன்னில்
     இணைந்திட வேண்டு மென்ற
மகிமைதான் என்னே நெஞ்சே
     மாறிய தென்னே நெஞ்சே


வீரர்கள் தலைவர் தம்மை
     மன்னிக்க வேண்டு மென்று
பேரிரக் கத்தால் நின்று
     பேசிட லானார் நெஞ்சே


வீரர்கள் தலைவர் ஆங்கே
     வெண்தலைப் பாகை தன்னை
ஆர்வமாய்க் கிழித்தெ டுத்தே
     அருங்கொடி செய்தார் நெஞ்சே

 

கூடிய அவர்கள் எல்லாம்
     கொடியினைத் தூக்கிக் கொண்டே
ஆடியே அண்ணல் முன்பு
     சென்றிட லானார் நெஞ்சே


அமைதியின் தூதர் நீங்கள்
     ஆம் ஆம் ஆம் என்றே மக்கள்
சுமக்கொணா இன்பத் தோடு
     சொல்லிட லானார் நெஞ்சே


பகையெல்லாம் பணிந்து போகும்
     பான்மையைக் கண்ணால் கண்டு
நகைமுக அபுபக் கர்தான்
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே


அண்ணலின் மகிமை தன்னை
     அறிந்ததும் இன்பம் என்றே
எண்ணியே இதயந் தன்னில்
     இன்பங்கொண் டாரே நெஞ்சே

 

இறைவனின் துணைதான் அண்ணல்
     இதயத்தை இயக்கு மென்றே
நிறைவுறு இன்பத் தோடு
     நெகிழ்ந்திட லானார் நெஞ்சே


அண்ணல்தாம் மதினா நோக்கி
     அதிவேக மாகச் செல்ல
அண்மித்த சிற்றூர் ஒன்றை
     அடைந்திட லானார் நெஞ்சே


‘குபா’என் றோதும் அந்தக்
     குக்கிரா மத்தைச் சேர்ந்தோர்
நபிகளை எதிர்கொண் டேத்தத்
     திரண்டிட லானார் நெஞ்சே


அனைவரும் ஒன்று கூடி
     ‘அம்ர்’என்னும் தலைவ ரன்பில்
இணையிலா நபிகள் தம்மை
     எதிர்கொள்ள லானார் நெஞ்சே

 

ஆண்களும் பெண்கள் தாமும்
     ஆர்வமாய் ஒன்று கூடி
மாண்புடன் வருக! என்று
     மகிழ்ந்தழைத் தாரே நெஞ்சே


போ! போ! போ! என்று சொன்ன
     புன்மொழி நீக்க நெஞ்சே
போ! போ! போ! நபிபால் என்றே
     புளகமுற் றாரே நெஞ்சே


அபுபக்கர் அங்கு கண்ட
     அன்பதன் வெள்ளம் கண்டு
நபிகளின் உயர்வை எண்ணி
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே


தலைவர்தம் இல்லத் திற்குத்
     தலைவரை அழைத்துச் சென்று
சிலநாட்கள் தங்கிச் செல்ல
     வேண்டிட லானார் நெஞ்சே

 

காட்டுத்தீ போன்றே இந்தக்
     களிப்புறு செய்தி செல்ல
வீட்டுக்கு வெளியே மக்கள்
     வெள்ளம்போல் ஆனார் நெஞ்சே


ஊர்ப்பெரு மக்கள், பெண்கள்
     ஓரணி யாக வந்தே
பார்க்கவே துடிது டித்த
     பரவசம் என்னே நெஞ்சே


அபுபக்கர் அண்ண லோடு
     அமர்ந்திருந் திடவே மக்கள்
நபிகள்யார் இவருள்? என்றே
     நவின்றிட லானார் நெஞ்சே


மக்களின் தயக்கந் தன்னை
     மனத்தினால் நன்கு ணர்ந்தே
அக்கணம் குடையொன் றேந்தி
     அபுபக்கர் நின்றார் நெஞ்சே

 

மக்கள்எல் லோரும் அண்ணல்
     மாணெழில் தோற்றங் கண்டு
மிக்கவும் இன்பங் கொண்டே
     மிதந்திட லானார் நெஞ்சே


மாவீரர் அலி அவர்கள் மதீனா நோக்கி வருவதானார்

அண்ணலார் இல்லந் தன்னில்
     அலியவர் பணிமு டித்தே
எண்ணியே அண்ணல் தந்த
     எழிற்பணி ஏற்றார் நெஞ்சே


தவத்தவர் தம்மி டத்தில்
     தந்தகாப் புப்ப ணத்தை
அவரவர் இல்லந் தன்னில்
     அளித்திட லானார் நெஞ்சே


நேர்மையைப் போற்றி ஆங்கே
     நிறைவுடன் நின்றோ ரெல்லாம்
ஆர்வமாய் அலியி டத்தில்
     அண்ணலைப் புகழ்ந்தார் நெஞ்சே

 

மக்கத்தில் வள்ளல் பட்ட
     மாபெரும் துன்பந் தன்னை
மக்கள்தாம் எடுத்து ரைத்தே
     மனம்வருந் திட்டார் நெஞ்சே


பிறந்ததம் நகரை விட்டே
     பிரிந்திட்ட போதும் வள்ளல்
மறந்திடா வண்ணம் தந்தார்
     மாண்பென்னே என்றார் நெஞ்சே


பணமதைப் பெற்றோ ரெல்லாம்
     பாராட்டி உரைத்த தோடு
குணமணி போனார் என்றே
     குலைந்திட லானார் நெஞ்சே


இத்தகை வள்ளல் தம்மை
     இங்கிருந் தேகும் வண்ணம்
புத்தியில் லாதோன் செய்தான்
     புன்மைஎன் றுரைத்தார் நெஞ்சே

 

அபுஜஹில் இரக்க மின்றி
     அற்பமாய் நடந்தா னென்றே
நபிகளை மக்கள் போற்ற
     அலிமகிழ்ந் தாரே நெஞ்சே


அண்ணலைக் காண்ப தற்கு
     அலியவர் எண்ணங் கொண்டே
எண்ணிலா இடரை ஏற்று
     ஏகிட லானார் நெஞ்சே


பகலிலே நடந்து சென்றால்
     பருந்தென அலையும் அந்தப்
பகைவர்கள் தொடர்வா றென்றே
     பயந்தவர் சென்றார் நெஞ்சே


இரவினில் மட்டும் செல்வார்
     இடர்கள்தாம் பலவென் றாலும்
முரண்பகை தன்னைப் போக்க
     முயன்றிட லானார் நெஞ்சே

 

இப்படி நடந்த தாலே
     இளைத்திட லானார் ஆனால்
எப்படி யோந டந்தே
     இளவலும் வந்தார் நெஞ்சே


அலியவர் வந்தா ரென்ற
     ஆனந்தச் செய்தி கேட்டே
அலியினை அழைக்க! என்றே
     அண்ணல்சொன் னாரே நெஞ்சே


அலியவர் உடலோ ஆங்கே
     அசைக்கொணா நிலையில் வீங்கி
நலிந்தது என்று கேட்டே
     நபியவர் நொந்தார் நெஞ்சே


அலியினை நானே சென்று
     ஆரவே பார்ப்பே னென்று
அலியவர் இல்லம் நோக்கி
     அண்ணல்சென் றாரே நெஞ்சே

 

அண்ணலைக் கண்ட துந்தான்
     அலியவர் அன்புற் றேங்கி
கண்ணீரைச் சிந்தி நின்ற
     காட்சியும் என்னே நெஞ்சே


கட்டியே தழுவிக் கொண்டு
     களித்தனர் அண்ண லாரும்
மட்டிலா இன்பத் தோடு
     தழுவிட லானார் நெஞ்சே


பணமெலாம் அவர வர்க்குப்
     பகிர்ந்தளித் தீரா? என்ன-
குணமுடன் அலியும் ஆங்கு
     கொடுத்ததைச் சொன்னார் நெஞ்சே


அலியைத்தம் முடன்அ ழைத்தே
     அரியபல் லுதவி செய்து
நல்லிறைக் கடமை யாற்றி
     நயந்திட லானார் நெஞ்சே

 

லட்சியப் பயணத்தில் முதற்பள்ளி எழுந்தது.

அன்புற்ற அம்ர வர்தான்
     ஆங்கொரு பள்ளி வாயில்
அண்ணலால் அமைக்க எண்ணி
     ஆசையைச் சொன்னார் நெஞ்சே


அம்ரவர் ஆசைக் கேற்ப
     அன்புறு பள்ளி வாயில்
அமைக்கவே அண்ண லுந்தான்
     அலுவல்மேற் கொண்டார் நெஞ்சே


அபுபக்கர், அலி, அம் மக்கள்
     அனைவரும் ஒன்று சேர
நபிகளும் கற்சு மந்து
     நடந்திட லானார் நெஞ்சே


ஆர்வத்தால் பள்ளி வாயில்
     ஆக்கிடும் பணியில் மக்கள்
சேர்ந்துமே செயல்பு ரிந்த
     சீர்மையும் என்னே நெஞ்சே

 

அளவிலா உற்சா கத்தால்
     அனைவரும் பணிகள் செய்தே
உள்ளத்தில் இன்பங் கண்ட
     ஒற்றுமை என்னே நெஞ்சே


பணியினில் சேர்ந்தி ருந்த
     பாவலர் ஒருவர் பாட்டால்:
தணியாத இன்பந் தந்த
     தகைமையும் என்னே நெஞ்சே


பாவலர் இசைத்த அந்தப்
     பாட்டினைச் சேர்ந்தி சைத்தே
ஆவலைத் தூண்டி அண்ணல்
     அகமகிழ்ந் தாரே நெஞ்சே


பண்ணிசைத் தேநம் அண்ணல்
     பரவசம் உற்றதைப்போல்
மண்ணோடு கற்சு மந்த
     மாண்பதும் பெரிதே நெஞ்சே

 

தோளிலே கற்சு மந்து
     தொடர்ந்துமே உழைத்த அண்ணல்
தாளிலே வீழ்ந்து மக்கள்
     தடுத்ததும் என்னே நெஞ்சே


ஆயினும் அண்ண லாரோ
     அரும்பணி செய்வேன் என்றே
தூயவன் பணியில் ஆழ்ந்த
     துடிப்பதும் என்னே நெஞ்சே


அயராத நிலையில் அண்ணல்
     அரும்பணி ஆற்றக் கண்டே
தயங்கிய அம்ரென் பார்தான்
     தடுத்ததைக் கேளாய் நெஞ்சே


ஒப்பிலாத் தலைவ ராக
     உளத்தினில் கொண்டோம் நீங்கள்
இப்பெரும் வேலை செய்ய
     வேண்டாமென் றாரே நெஞ்சே

இவ்வுரை கேட்ட வள்ளல்
     இதயத்தில் களிது ளும்பப்
பௌவிய மாகச் சொன்ன
     பரிவுரை கேளாய் நெஞ்சே


மக்களின் நலத்தை நாடி
     மக்களுக் காக மெய்யாய்த்
தக்கநற் பணிசெய் வோனே
     தலைவனாம் என்றார் நெஞ்சே


பதிமூன்று நாட்க ளுக்குள்
     பார்த்தவர் வியக்கு வண்ணம்
அதிஅழ கான பள்ளி
     அமைத்ததும் என்னே நெஞ்சே


வெள்ளியாம் பதினான் காம்நாள்
     வியத்தகு அண்ணல் அந்தப்
பள்ளியில் தொழுகை தன்னைத்
     *துவக்கிய தென்னே நெஞ்சே

*அன்றுதான் முதன் முதலாக கூட்டு (ஜும்ஆ)த்
தொழுகையை அண்ணலார் தொழுதார்கள். இதே ஆண்டில்தான் நோன்பும் கடைமையாக்கப்பட்டது.

 

கூட்டான தொழுகை தன்னில்
     குதூகலம் கொண்ட மக்கள்
காட்டிய அன்பில் வள்ளல்
     களித்திட லானார் நெஞ்சே


அன்பினால் கவர்ந்த அந்த
     அருங்‘குபா’ மக்க ளின்பால்
அன்றந்த வெள்ளி மாலை
     அன்புடன் எழுந்தார் நெஞ்சே


வள்ளலைக் கண்டோம்; நல்ல
     வாழ்வினைக் கண்டோ மென்றே
உள்ளத்தால் வாழ்த்து ரைத்தே
     உவந்திட லானார் நெஞ்சே


வெள்ளம்போல் திரண்ட மக்கள்
     வீதியின் மருங்கில் நின்று
வள்ளலை அனுப்பி வைத்த
     வனப்பதும் என்னே நெஞ்சே

 

மதினாவை நோக்கி அண்ணல்
     வருகின்றார் என்று கேட்டே
மதினாவாழ் மக்கள் எல்லாம்
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே


மக்களின் நெஞ்சில் இன்பம்
     மாபெரும் கடலாய் ஆக
எக்களிப் பில்ம தீனா
     எழில்கொண்ட தென்னே நெஞ்சே


மதினாதன் வரலாற் றின்கண்
     காணாத வனப்பு தன்னை
எதிர்நோக்கி நின்ற அந்த
     எழிலதும் என்னே நெஞ்சே


மதினாவின் உள்ளே மக்கள்
     மாபெரும் கடலைப் போல
வதிந்ததை எடுத்து ரைக்க
     வார்த்தையுண் டாமோ நெஞ்சே

 

அன்றைக்கு மாலைப் போதில்
     ஆதவன் ஒளிவண் ணத்தால்
பொன்னுல காக இந்தப்
     புவியைச்செய் திட்டான் நெஞ்சே


மஞ்சளின் வண்ணத் தாலே
     மணலெலாம் மின்னி மக்கள்
நெஞ்செலாம் களிது ளும்ப
     நின்றிட லானார் நெஞ்சே


அடிவானந் தன்னை நோக்கி
     அனைவரும் கூடி நின்றே
நெடியதம் விழிசெ லுத்திப்
     பார்த்திட லானார் நெஞ்சே


அண்ணலின் வருகைக் காக
     ஆர்வமாய் மக்கள் கூடி
எண்ணிலா இன்பத் தோடு
     எதிர்பார்க்க லானார் நெஞ்சே

 

இன்றைக்கு வருவார் நாளை
     எதிர்கொள்வோம் என்றே எண்ணி
நின்றஅம் மக்கள் அன்பின்
     நெகிழ்ச்சியும் பெரிதே நெஞ்சே


அன்றைக்கோ அடிவா னத்தில்
     அன்பர்கள் கொடிகள் ஏந்தி
என்றைக்கும் இல்லா வண்ணம்
     எதிர்வரக் கண்டார் நெஞ்சே


அம்மக்கள் குழுவிற் குப்பின்
     அழகுவெண் துகில்அ ணிந்த
செம்மைசேர் ஒட்ட கங்கள்
     இரண்டினைக் கண்டார் நெஞ்சே


மூவர்தாம் அமர்ந்தே அந்த
     ஒட்டகம் இரண்டின் மீதும்
ஆவலாய் வருதல் கண்டே
     ஆனந்தங் கொண்டார் நெஞ்சே

 

வருகின்றார் அண்ணல் என்ற
     வாயொலி வாழ்த்து அந்தப்
பெருமலைக் குன்றில் எல்லாம்
     ஒலித்ததும் பெரிதே நெஞ்சே


சாலையின் மருங்கில் எல்லாம்
     ஜனங்கள்தாம் அணிவ குத்தே
சீலரின் வருகைக் காக
     நின்றனர் சீராய் நெஞ்சே


சிறுவர்கள் எல்லாம் அண்ணல்
     வருகின்றார் என்றே செப்பி
பெருங்களி கொண்ட தைத்தான்
     பேசிட லாமோ? நெஞ்சே


பெண்கள்தாம் பெருகி வந்து
     பேரணி யாக நின்று
கண்வைத்த நிலையில் நின்ற
     காட்சியும் என்னே நெஞ்சே

 

புதுவாழ்வைப் பெறுவோம் என்றே
     புளகத்தில் ஆழ்ந்தி ருந்த
மதினாவாழ் மக்கள் இன்பை
     வடித்திட லாமோ நெஞ்சே


வழியின்மேல் விழியை வைத்து
     வரவேற்கக் காத்து நின்ற
எழிலுடை மக்கள் இன்பின்
     எல்லைதான் என்னே நெஞ்சே


அண்ணலும் நெருங்கி வந்தார்
     அப்பெரும் மக்கள் கூட்டம்
கண்வைத்தே பார்த்துப் பார்த்துக்
     களிகொண்ட தென்னே நெஞ்சே


நகைமுகத் தோடு அண்ணல்
     நடுவினில் வந்த போது
முகமெலாம் மலரும் மக்கள்
     மொய்த்திட லானார் நெஞ்சே

 

ஒட்டக மதனை விட்டே
     இறங்கிட வொண்ணா வண்ணம்
ஒட்டியே மக்கள் நின்ற
     உருக்கமென் சொல்வேன் நெஞ்சே


மலரினை மொய்த்து நிற்கும்
     வண்டுகள் போன்றே மக்கள்
தலைவரின் அழகைக் கண்டு
     சந்தோஷ முற்றார் நெஞ்சே


‘யாம்பெற்ற பெரும்பே’ றென்றே
     யாவரும் பேசி நிற்க
ஆம்;அண்ணல் இறங்கி வந்த
     அழகுதான் என்னே நெஞ்சே


மக்கள்தாம் கடலைப் போல
     மன்னரைக் காண வேண்டி
எக்களிப் போடு நின்ற
     ஏற்றமும் என்னே நெஞ்சே