| 178 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
முதலிய நிலைகளைக்
காண்க. அன்றியும் - பொன்னும் - ஓடும் என்ற
இரண்டு பதங்களிற்பட்ட உலகப்பொருள்கள் எல்லாம் ஒன்றுபோலவே
மனிதர் நன்னெறிக்கு இடைஞ்சல் விளைப்பன என எண்ணி ஒதுக்குவர்
என்பதுமாம்.
|
“புல்லோடுங்
கல்லோடும் பொன்னோடு மணியோடுயஞ்
சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணிந்திருந்த..........“
|
அப்பர்
சுவாமிகள் திருப்புகலூரில் திருமுற்றத்திற்கிடந்த பருக்கைக்
கற்களோடு நவமணியையும் உழவாரத்தில் ஏந்தி வாவியிற்புக எறிந்தனர்
என்பதும், இவை முதலிய பிறவுங் காண்க.
மேலும், ஓட்டினைப்போலப் பொன்னும் மாயா பௌதிகப்
பொருளாகிய
மண் - எனவும், இவ்வாறே எல்லாப் பொருள்களும் அவ்வவற்றின்
தத்துவங்களில் நிற்பன எனவும் கண்டு, தத்துவங்கடந்த இறைவனிடம்
மனத்தைச் செலுத்தும் - என்பதுமாம்.
| “ஒட்டினை
எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் பொன்னாக்குவீர்.....“ |
என்று [ஒளிவிடும் பொன்
- தானே பிரகாசிக்கும் பொன் -
சுயம்பிரகாசமுள்ள பொன் - இரேடியம் (Radium) என்பர்.] சித்தர்களின்
தன்மையும் வன்மையும் தாயுமானாராற் பேசப்பெறுமாயின் தொண்டர்களின்
நிலைசொல்லவுங் கூடுமோ?
கூடும் அன்பு
- இறைவனோடு அந்நியமின்றி ஒட்டிக் கூடுவதற்குக்
காரணமாகிய அன்பு. “ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்“ என்னும்
பண்பே இங்குக் கூடும் எனப்பெற்றது. அந்நிலை பெறுதற்கு அன்பே
காரணம் ஆதலின் கூடும் அன்பு என்றார்.
(அன்பினிற்) கும்பிடல்
- கும்பிட்டு நிற்கும் பிறப்பு என்க. இது
ஆகுபெயர். மேலே “வீடும் வேண்டா“ என்பதற்கேற்பக் கும்பிடும் பிறப்பே
வேண்டுவர் என்றுரைக்கப்பெற்றது.
வீடு -
பிறப்பின்மை; விடுபடுதல். பிறவித்துன்பத்தினின்று
விடுபடுதேலே வீடு.
கூடும் அன்பினிற் கும்பிடல்
- “காணப் பெற்றால், மனித்தப்
பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே“ என்று அப்பர் சுவாமிகள்
அருளியதும். “நின்றிருவடிக்காம் பவமே யருளு கண்டாய்“ என்று
மாணிக்கவாசக சுவாமிகள் விண்ணப்பித்ததும், “கும்பிடப் பெற்று மண்ணிலே
வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்“ என்று வன்றொண்டர்
வேண்டியதும் இக்கருத்துப் பற்றியே என்க. “தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்“ என்பது சேக்கிழார் சுவாமிகள் கருத்துமாம்.
இவ்வாறன்றிக் கும்பிடல் என்பதற்குக் கூடுமன்பினில்
இறைவனையும்
உயிர்களையும் தொழுது பயன் கருதாப் பணிசெய்வது என்றும், அது (பயன்
கருதாத் தொண்டு) வீட்டினிற் சிறந்ததென்றும், வீட்டில் இன்பம் உண்டென்று
எண்ணித் தொண்டு செய்வதும் பயன் கருதுவதாய் முடியும் என்றும்,
இவ்வாறெல்லாம் தத்தம் மனதுக் கிசைந்தவாறு உரை காண்பாரும் உண்டு.
இறைவனைத்தொழுதலே யன்றி உயிர்களையும் தொழுது பயன் கருதாத்
தொண்டு செய்தல் என்பது இச்செய்யுளில் எங்குப் பெறுவதோ?. அன்றியும்,
உயிர்களைத் தொழுதல் பணியாம் என்பதற்கு விதி யாதோ? அறிகிலோம்.
உயிர்களிலே பந்தம் நீங்கப்பெற்ற முத்த ஆன்மாக்களும் அடியார்களுமே
தொழுவதற்கு உரியார் என்பது ஞான நூல்களின் முடிபு. ஏனைய உயிர்கள்
யாவையும் நம்போற் பாசபந்தப்பட்டவையே; அன்றியும் கும்பிடல் என்னும்
மொழிக்குப் பயன் கருதாப் பணிசெய்தல் என்னும் பொருள்கொள்ளும்
வகையுங் காணப்பெறவில்லை. மரபுபற்றி உரைகூறாது இவ்வாறு அவரவர்
கொள்கைகளைச் சைவசமய சம்பிரதாய சாத்திரங்களிற் புகுத்துவது ஆசிரியர்
கருத்துக்கும் நூன்மரபுக்கும் உரைமரபுக்கும் பொருந்தாமை உணர்க.
|
|
|
|