பக்கம் எண் :


22 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     கற்பகமாலை - முன்பக்கத்திலே அலங்காரம் செய்யத்
தூக்கப்படுவனவும், இறைவன் திருவடிக்குச் சூட்டுதற்காக ஏந்தப்படுவனவும்
ஆம். தேவர்கள் அணிந்தனவும் ஆம். பின்னர்த், “தேன்உறை கற்பக வாச
மாலைத் தேவாசிரியன்”(தடுத் - 124) என்று கூறுவதும் காண்க.“இன்னிசை
வீணையர் யாழினர் ஒருபால், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்,
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்” என்ற திருவாசகமும் காண்க.
மேலே“மதுமலர் இருகையும் ஏந்தி” (19) என்பதும் காண்க.     5

16. நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
 
  நாடு மைம்பெரும் பூதமு நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி யாடும் பரப்பது பாங்கெலாம்.
6

     (இ-ள்.) நீடுதேவர் நிலைகளும - தேவர்களின் நீடிய பதங்களையும்;
வேண்டிடின் - விரும்பினால்; நாடும் ஐம்பெரும் பூதமும் - உலக காரணமாக
நாடும் ஐம்பெரும் பூதங்களையும்; நாட்டுவ கோடி கோடி குறள்சிறு பூதங்கள்
- தாம் எண்ணியபடி நிலைநாட்ட வல்லனவாகிய கோடி கோடியாகிய
அனேகம் சிறு குறள் வடிவுள்ள சிவபூதகணங்கள் ; பாடி ஆடும் பரப்பது
பாங்கு எல்லாம் - பக்கங்களில் எல்லாம் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்
உள்ள பரந்த இடங்களையுடையது அத்திருமலை.

     (வி-ரை.) நீடு தேவர் நிலை - தேவர்களது நீடுநிலை என மாற்றிப்
பொருள் உரைக்க.

     வேண்டிடின் - நடுநிலைத் தீவகமாய், வேண்டிடின் நிலைகளும்,
வேண்டிடின் பூதங்களும், நாட்டுவ என முன்னும் பின்னுங் கூட்டி முடிக்க.

     நாட்டுவ - நாட்டுவன; வினைப்பெயர். நாட்டுவனவாகிய - நாட்டும்
வலியுடைய பூதங்கள் என்க. மற்றவர்களைப் பார்க்க தேவர்களது நிலைகள்
நீடுவன ஆயினும் சிவகணங்களின் வலிமையையும் கால அளவையும் நோக்க
அவை குறைந்தனவாகி அழியுந் தன்மையுடையன என்பார் நீடு நிலைகளும்
நாட்டுவ என்று சிறப்பும்மை தந்து கூறினார். “கேடிலாப் பேய்க்கணஞ்சூழ
என்பது திருஞான சம்பந்த நாயனார் தேவாரம். (குறிஞ்சி
அச்சிறுபாக்கம் - 3)
.

     கோடிகோடி குறட்சிறு பூதங்கள - இவை சிவகணங்களாகிய
பூதங்கள். இவற்றின் எண்ணும், உருவும், வலியும், ஆனந்தமும் கூறியவாறு.
அப்பர் சுவாமிகளுக்குத் திருத்தோளில் இடபமும் சூலமும் பொறித்ததும்,
திருஞான சம்பந்த நாயனாருக்கு ஆயிரம் பொன் அடங்கிய உலவாக்கிழி
தந்ததும், முதலியவற்றைத் திருவருளாணையின் வழிச் செய்தன
இந்தப்பூதங்களேயாம். “ஆளும் பூதங்கள் பாடநின்றாடும் அங்கணன்றனை”
(தேவாரம்) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க. சிவபெருமான்
பூதநாயகனாதலாலும், அவனது கணங்களாகிய பூதங்கள் அவனது
திருமலையைச் சுற்றி ஆனந்தித்திருப்பன ஆதலாலும் இவ்வாறு கூறினார்.
பார்வை யளவிலே குறட்சிறு பூதங்களாயினும், ஆணை வலியினாலே பெரியன
என்பார் குறட்சிறு பூதங்கள் பெரும் பூதமும் நாட்டுவ என்று இலகு தோன்றக்
கூறினார். வேண்டிடின் நாட்டுவ என்று சொல்லவே, ஆக்கலும், அழித்தலும்
செய்யவல்லன என்பது பெற்றாம். ஐம்பூதச் சேர்க்கையாலாகிய,
இவ்வுலகத்தையும் தேவர் நிலைகளாகிய பிரம உலகம், விட்டுணு உலகம்,
முதலியவற்றையும் நாட்டும் வலிமையுடையன சிவகணங்களாகிய இப்பூதங்கள்
என்றபடி. ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆக்கலும், அவற்றின்
ஒவ்வொன்றன் மிகுதிப்பாட்டால் அழித்தலும், படும் இவ்வுலகம். அதனால்
உலகத்தார் இவற்றையே பெரிதென மயங்கிப் பயந்து இவற்றிற்குப் பூசை
முதலியனவும் செய்வர். ஆயின் அப்பூதங்களையே ஆக்கியும் அழித்தும்
நாட்டவல்லன இந்தக் குறட் பூதங்களாம் என்று கூறினமையால்
சிவபூதங்களின் சிறப்பும் இவற்றினாற்