பக்கம் எண் :


24 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
மூழ்கி ஒன்றாய - மலையின் வெள்ளிய ஒளியினுட் பொருந்தியதால் தனித்து
வேறாகக் காணமுடியாதிருத்தல். பொருள் இரண்டாயினும் ஒரு
தன்மைப்படுதலே ஒன்றாதல் எனப்பட்டது. கண் ஒளியும் கதிர் ஒளியும்போல்
ஒன்றித்துக் கலத்தல். இதனையே இரண்டற்றதாகிய அத்துவிதக் கலப்பு
என்பர் பெரியோர். ஆன்மாக்களைத் தனது அருட்சோதியிலே இரண்டறக்
கலக்கும்படி செய்வான் இறைவன்; அவனது திருமலையும் அத்தன்மை
பெற்றது என்ற குறிப்பும் தோன்றுதல் காண்க.

     மால்வரை - பெரியமலை. மால் (விட்டுணு) போன்ற மலை என்றும்.
ஆம். “கடல் கடைந்திடச் சென்றிடும் வெள்ளைமால் கடுப்ப” என்றபடி
இப்பொருளில் இது உள்பொருள் உவமமாம். மாலே ஆகிய மலை என்று
முரைப்பர். திருமால் சிவபெருமானை இடபமாகத் தாங்கிநின்றமை
புராணத்துட்கேட்கின்றோம்.

“தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ”
                               - திருவாசகம்

“அந்தண் வெள்ளிமால் வரையிரண் டாமென வணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால் விடையெதிர் நிற்ப”
             - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 378

என்று கூறுதல் காண்க.

     சோதியின் மூழ்கி ஒன்றாய - “..........கனகமலையருகே, போயின
காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே” என்பது பொன்
வண்ணத்தந்தாதி. பொன்மலையைச் சார்ந்த காகமும் பொன்னிறமாம் என்பது
பழமொழி. காக்கையின் கருமையாகிய வேற்று நிறமும் மாற்றப்பெற்றுப்
பொன்வண்ணமாகும் என்றால், வெள்ளிய தூய ஒளியில் அவ்வெள்ளை
நிறமேயாகிய அன்னம் மூழ்கி வேறாகப் புலப்படாமை பொருந்துவதாம்
என்க.  7

                                 வேறு

18. காதில்வெண் குழையோன் கழற்றொழ நெடியோன்
     காலம்பார்த் திருந்தது மறியான்
 
  சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையிற்
     றுதிக்கையோ னூர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செஞ்சுடரின்று
     வெண்சுட ரானதென் றதன்கீழ்
ஆதியே னமதா யிடக்கலுற் றானென்
     றதனைவந் தணைதருங் கலுமுன்.
8

     (இ-ள்.) காதில்.......அறியான - காதிலே வெண்சங்கக் குழையை
அணிந்த இறைவனது பாதங்களைத் தொழுவதற்கு நெடியோனாகிய திருமால்
உரிய காலத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த செய்தியை
அறியாதவனாகி; சோதி......கண்டு - வெள்ளை ஒளியுடைய கயிலையின்
சாரலில் உள்ள ஒருமுழையிலே விநாயகருடைய வாகனமாகிய
பெருச்சாளியைப் பார்த்து; மீது...என்று - முன் காலத்தில் மேலே எழுந்த
செஞ்சுடராகிய அக்கினித் தூணமானது இன்று வெள்ளை யொளித் தூணாய்
நிற்கின்றதென்ற எண்ணத்தாலே அதனை ஆதிப்பன்றி உருவெடுத்து
அடிதேடி நிலந்தோண்டி நிற்கின்றான் திருமால் என்று கருதி;
அதனை........கலுழன - கருடன் அப்பெருச்சாளியை வந்து சேரும்.

     (வி-ரை.) இது வெள்ளி பாடல் என்பர். அஃதாவது ஒரு
வெள்ளியம்பலத்தம்பிரான் என்பவரால் இடைச் செருகலாய்ச் சேர்க்கப்பட்ட
பாட்டு என்று