பக்கம் எண் :


634 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
7. அமர்நீதி நாயனார் புராணம்

தொகை

அல்லிமென் முல்லையந்தா ரமர்நீதிக் கடியேன்

                    - திருத்தொண்டத்தொகை

வகை

மிண்டும் பொழிறபழை யாறை யமர்நீதி வெண்பொடியின்
முண்டந் தரித்த பிராற்குநல் லூரின்முன் “கோவண நேர்
கொண்டிங் கரு“
ளென்று தன்பெருஞ் செல்வமுந் தன்னையுந்தன்
நுண்ட மதிநுத லாளையு மீந்த தொழிலினனே.


                    - திருத்தொண்டர் திருவந்தாதி - 7

விரி

வேறு

502. சீரி னீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்  
  காரின் மேவிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரி னீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
1

     புராணம் :- நிறுத்த முறையானே, இச்சருக்கத்து ஏழாவது
அமர்நீதியார்
என்ற பேருடைய நாயனாரது புராணங் கூறத் தொடங்குகின்றார். இது அவரது சரித வரலாறும் பண்புங் கூறும் பகுதி.

     தொகை :- அகவிதழ்களோடு கூடிய மெல்லிய முல்லை மலர்மாலை
யணிந்த வணிகர் குலத்தவராகிய அமர்நீதி நாயனாருக்கும் நான்
அடியேனாவேன்.

     அல்லி
- அகவிதழ். (புல்லி - புறவிதழ்.) புறவிதழ் வேறாக இல்லாமல்
முற்றும் அகவிதழ்போல அமைந்தது முல்லை மலரின் சிறப்பிலக்கணம்.
அகமும், புறமும் ஒன்றேயாயிருக்கும் அமர்நீதியாரின் பெருமை குறிக்க இச்
சிறப்பினாற் கூறினார். உள்ளந்தா ணின்றுச்சி யளவு நெஞ்சாய்“ என்ற
திருவாசகக் கருத்தும் காண்க. முல்லை - வணிகர்க்குரிய அடையாள
மாலையாம். இதனால் நாயனாரது மரபும் இயலும் குறித்தபடி. மென்முல்லை
- முல்லைமலர்கள் மிகமென்மையுடையனவாயினும் மணமிக்கனவும்,
நெடுநாணின்றுபூத் தருவனவும், மலர் மிகத் தருவனவுமாம்.

“செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனுங் குற்றலம்“
                              - குறிஞ்சி - 3

என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங் காண்க. தார் -
இன்பத்திற்குரியதோர் அடையாள மாலை.

     வகை :- மீண்டும்.....அமர்நீதி - நெருங்கிய சோலைகள் சூழ்ந்த
பழையாறையில் அவதரித்த அமர்நீது நாயனார்; வெண்பொடியின்....பிராற்கு
- திருவெண்ணீற்றைத் திரிபுண்டரமாக நெற்றியிலே தரித்த சிவபெருமானுக்கு;
நல்லூரின் - திருநல்லூரிலே; முன்......என்று - முன் நீர் என்னிடம் தந்து
வைத்த கோவணம், வைத்த விடத்தினின்று காணாமற் போய்விட்டதனாலே,
அதற்கு நேராக உள்ள பொருளினைக் கொண்டு இங்கு என்பிழை
பொறுத்தருள வேண்டுமென்று; தன் - தொழிலினனே - தம்முடைய
பெருஞ் செல்வங்களையும், தம்மையும், தமது பிறைபோன்ற நெற்றியையுடைய
மனைவியாரையும் துலையிலேற்றித் தந்த தொழிலுடையவரேயாம்.