1851.
|
பதுமநற்
றிருவின் மிக்கார் பரிகலந் திருத்திக் கொண்டு
கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்பரோடும்
விதிமுறை தீப மேந்தி மேவுமின் னடிசி லூட்ட
வதுநுகர்ந் தின்ப மார்ந்தா ரருமறைக் கலய னார்தாம். |
21 |
(இ-ள்.)
வெளிப்படை. தாமரையில் வீற்றிருக்கும் நல்ல திருவிலும்
மிகுந்த அம்மையார் பரிகலம் திருத்தி யமைத்துக்கொண்டு விரைவாகத் தமது
கணவனாரைச் சிவபெருமானுக்கன்பர்களோடும் விதிப்படி தீபம் முதலிய
ஏந்திப் பூசைசெய்து இனிய அமுதினை ஊட்ட, அரிய மறைவல்லவராகிய
கலயனார் அதனை நுகர்ந்து இன்பநிறைந்தனர்.
(வி-ரை.)
பதுமம் நல் திரு - செந்தாமரையில் உள்ள இலக்குமி.
உருவாலும் திருவாலும் ஒப்புமை பெறினும், நற்றிரு என்றது
அவரினும்
அருளால் மிகுந்த அம்மையாரது மேம்பாடு கருதுதற்கு எல்லைப்பொருளாய்
எண்ணப்படும் பேறு பெற்றமை பற்றி. மிக்கார் -
அருளால் மிகுந்தவர்.
அந்தப் பதுமத்திரு ஒவ்வோர்காலம் தமது கணவரை யிழக்கவும் அதனால்
தாலியிழக்கவும் பெற்று, அதன் பொருட்டுச் சிவபெருமானை நோக்கித்
தவங்கிடந்து மீளப்பெற்றுத் தாலிதாங்குவர். அவ்வாறன்றி இவ்வம்மையார்
தமது தாலியை இறைவனது தூபத்திருப்பணிக்கேற்பிக்கப்பெற்று, அதன்
விளைவாகிய மாளாச்செல்வங்களையும் பெற்று, அடியார்களையும் ஆளுடைய
அரசுகள் ஆளுடைய பிள்ளையார் என்ற இருபெருமக்களையும் பூசித்து
அமுதூட்டவும் அரன்பணி புரியவும் பேறுபெற்றவர் என்ற சிறப்பெல்லாங்
குறிக்கத் திருவின் மிக்கார் என்றார்.
அன்றியும் பதுமத்திரு வானவர்
தமது செல்வ விளைவுகளைச் சிவனருளேயாகக் காண்டலின்றி வாழ்ந்து
கழிவர். இவ்வம்மையார் போலக் கணவனாரை அடியார்களுடன் விதிமுறை
பூசித்துபசரித்தூட்டப்பெறாது தமது நாயகரின் மார்பிற் றங்கி அவரால்
உபசரிக்கப்பெற்று வாழ்வார் என்ற குறிப்பும் காணத்தக்கது. இவ்வாறன்றி
உருவினால் மட்டும் ஒப்புக்கூறுமிடத்து அதுபற்றியே கூறுவர் ஆசிரியர்.
"தேனலர் கமலப் போதிற் றிருவினு முருவ மிக்கார்" (364) என்றது காண்க.
பரிகலம்
- உண்கலம் - வாழைக்குருத்து. திருத்துதல் -
அரிந்துகொண்டு ஒழுங்கு பட அமைத்தல்
கதுமென
- கணவனார் மூன்றுபகல் உணவின்றிப் பசியால்
வாடியிருந்தமை கருதி விரைவாகச் சமைத்து ஊட்டினார் என்பது.
"திருவமுதமைக்கச்சார்ந்தார்" (846) என்று அடிசில் சமைக்கப் புகுந்ததனை
மட்டிற் கூறிய ஆசிரியர், சமைத்ததனைக் கூறாது, அமுதமைக்கச் சார்ந்தார்
- பரிகலந்திருத்தி - ஊட்ட என்றுவிரைவு படக் கூறியது நாயனாரது பசி
தாங்கலாற்றாது ஊட்டுந் திறத்தில் அம்மையார்க்கிருந்த ஆர்வமும், அதனின்
மிக ஆசிரியர்க்குள்ள தீவிரமும் குறித்தது.
கணவனாரை - அன்பரோடும் - உடனிகழ்ச்சிப் பொருளில் வந்த
ஓடு என்ற மூன்றனுருபு ஒப்பாக வைத்துப் பூசித்து ஊட்டிய பரிசு குறித்தது.
அம்மையார் கலயனாரைக் கணவனார் என்ற உடற்பொருத்தம்பற்றிய
அளவில் நில்லாது, அதனின் மேலாக உயிரொடு பொருந்திய
சிவனடியாராகவும் எண்ணி ஊட்டினார் என்ற குறிப்பும் காண்க.
"எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க, ஏங்கை யுனக்கல்லாத
தெப்பணியும் செய்யற்க", "உன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே
பாங்காவோம், அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து, சொன்ன பரிசே
தொழும்பாய்ப் பணிசெய்வோம்" (திருவெம்பாவை - 19 - 9) என்பனவாதி
திருவாசகங்கள் இந்த மனநிலையை நன்கு விளக்குவன. இது பற்றியே
விதிமுறை தீப மேந்திப் பூசித்து ஊட்டினார் என்றதும் காண்க. ஓடு என்ற
உருவை அன்பரோடு புணர்த்திக்கூறியது சிறப்புப்பற்றி. ஆயின்
அன்பரோடும் கணவரோடும் யென்னாது கணவனாரை முன் வைத்தோதியது
மூன்றுபகல்
|