பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1097

 
  858 நண்ணிய வொருமை யன்பி னாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி யிளைத்தபின் றிறம்பி நிற்க.
வொண்ணுமோ? கலய னார்த மொருப்பாடு கண்ட போதே
யண்ணலார் நேரே நின்றா; ரமரரும் விசும்பி லார்த்தார்,

28
       
  859.



பார்மிசை நெருங்க வெங்கும் பரப்பினர் பயில்பூ மாரி;
தேர்மலி தானை மன்னன் சேனையுங் களிறு மெல்லாங்
கார்பெறு கானம் போலக் களித்தன; கைகள் கூப்பி
வாழ்கழல் வேந்தன் றொண்டர் மலரடி தலைமேல் வைத்து;



29
   
  860.



"விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரின் மேருத்
திண்சிலை குனிய நின்றார் செந்நிலை காணச் செய்தீர்;
மண்பகிர்ந் தவனுங் காணா மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியா ரல்லாற் பரிந்துநேர் காண வல்லார்?"



30
   
  861.



என்றுமெய்த் தொண்டர் தம்மை யேத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகண் மற்று முள்ளன பலவுஞ் செய்து
நின்றவெண் கவிகை மன்ன னீங்கவு, நிகரி லன்பர்
மன்றிடை யாடல் செய்யு மலர்க்கழல் வாழ்த்தி வைகி,



31
   
  862.



சிலபகல் கழிந்த பின்பு திருக்கட வூரி னண்ணி
நிலவுதம் பணியிற் றங்கி நிகழுநா ணிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாருந் தாண்டகச் சதுர ராகு
மலர்புக ழரசுங் கூட வங்கெழுந் தருளக் கண்டு.



32
   
  863.



மாறிலா மகிழ்ச்சி பொங்க வெதிர்கொண்டு மனையி லெய்தி
யீறிலா வன்பின் மிக்கார்க் கின்னமு தேற்கு மாற்றால்
ஆறுநற் சுவைக ளோங்க வமைத்தவ ரருளே யன்றி
நாறுபூங் கொன்றை வேணி நம்பர்த மருளும் பெற்றார்.



33

     858. (இ-ள்.) நண்ணிய.......பாசத்தாலே - ஒருமை பொருந்திய
அன்பாகிய நாரினால் இயன்ற கயிற்றினாலே; திண்ணிய...ஒண்ணுமோ -
திண்மையுடைய தொண்டர் பூட்டி இளைப்படைந்த பின்னரும் அக்கருத்துக்கு
மாறுபட்டு முன்போலச் சாய்ந்து நிற்க இறைவர்க்கு முடியுமோ?;
கலயனார்தம்....நின்றார் - கலயனாரது மனத்தில் எழுந்த ஒருமைப்பாட்டினைக்
கண்ட அப்பொழுதே பெருமையுடைய பிரானார் நேரே நின்றனர்;
அமரரும்...ஆர்த்தார் - தேவர்களும் ஆகாயத்தில் மகிழ்ச்சியினால்
ஆரவாரித் தனராகி, 28

     859. (இ-ள்.) வெளிப்படை. பூமியின்மேல் எங்கும் நெருங்கும்படி
அதிகமாகக் கற்பகப் பூமழை பரப்பினர்; தேர்களால் மிகுந்த மன்னனுடைய
சேனைகளும் யானைகளும் ஆகிய இவை எல்லாம் மேகத்தைப் பெற்ற
சோலைபோல மகிழ்ந்தன; வீரக்கழல் கட்டிய அரசன் கைகளைக்கூப்பித்
தொழுது தொண்டருடைய மலர்போன்ற பாதங்களைத் தலைமேற்கொண்டு
வணங்கி, 29

     860. (இ-ள்.) வெளிப்படை. "விண்ணிற் பறக்கின்ற முப்புரங்களும்
வேகும்படி வேதப்புரவி பூண்ட தேரில் மேருமலையை வலிய வில்லாக
வளைத்து நின்ற சடையப்பருடைய நேர் நிற்கும் நிலையினை அடியேன்
தரிசிக்கும்படி செய்தருளினீர்! மண்ணைப் பிளந்து சென்ற திருமாலும் தேடிக்
காணமுடியாத (சிவபெருமானது) மலர் போன்ற திருவடிக ளிரண்டினையும்
பண்பு மிக்க அடியவர்களல்லது வேறு யாவரே அன்பினால் நேர் காண
வல்லவர்?" 30