பக்கம் எண் :


1254 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

படும் - பொருந்தும். இங்கு முத்தம் - முத்துப்போன்ற பல் என்று
உரைகொண்டு அதற்குத் தக உரைப்பாருமுண்டு.

     கடலும்படும் - என்றதனோடு கூட்டும்போதும், நீர்மை -
நீரினுட்பிறக்கும் உயர்ந்த முத்துமணிக்கியல்பாகிய ஒருவகை ஒளிப்பரப்பு.
இதனை நீரோட்டம் என்பது வழக்கு. முத்தம் - முத்து மணிகள்.
பணித்த
- இங்குப்பொருந்திய என்ற பொருளில் வந்தது. படும் -
உண்டாகும்.

     மருங்குலையும் கண்ணையும் உடைய தோளியர் என்க. சாயும்
மருங்குல் - என்க. தளிர்களின் செறிவும் கனமும் தாங்க மாட்டாது சாயும்
வல்லி என்று காரணங்கூறியபடி.

     வல்லி மருங்குல் - வல்லி - கொடி. மெய்பற்றி வந்த உவமம்.

     நெடும் தடம் கண் - நீண்டிருத்தலும் அகன்று விசாலமாயிருத்தலும்
கண்ணுக்கு அழகிலக்கண மென்பர்

     வேயும்படு தோளியர் - வேய் - மூங்கில். படுதல் இங்கு
அழகினாற் கீழ்மைப்படுதல் குறித்தது. வேய் - பெண்களின் தோளுக்கு
உவமமாகக் கொள்ளும் பொருள்களுள் ஒன்று.

     பண்படும் இன் சொல் - பண்கள் இயல்பான் அமைந்து
விரவுகின்ற இனிய சொல். "பண்ணமரு மென்மொழியார்" (மேகராக -
திருமிழலை - 10), "பண்ணினேர் மொழியாள்" (குறுந் - மறைக்காடு - 1)
முதலிய திருவாக்குக்கள் காண்க.

     செய்ய வாய் - செம்மை - உதடுகளின் இயல்பாகிய பவளம்
போன்ற நிறம் தாம்பூலத்தினிறமுமாம்.

     நீள்கரை மண் பொரும் - வெள்ளப் பெருக்கினால் இருபுறமும்
கரைகளில் மண்ணை அரித்துக் கொண்டு செல்லும் ஆற்றினது இயல்பு
குறித்தது.

     தண் பொருந்தம் - குளிர்ச்சியுடைய தாமிரபர்ணி ஆறு. பாயும்
கடலும்
என்று உடம்பொடு புணர்த்துக் கூறியவதனால் தாமிரபர்ணியாற்றின்
நீர் பாய்வதனால் அந்நீரின் தன்மை பொருந்த அவ்விடத்துக் கடல்
முத்துக்களை உடைத்தாகும் தன்மை பொருந்துவதாம் என்பது. தாமிரபர்ணி
பாயும் கடற்கரையில் கொற்கை நகரின் பக்கத்தே முத்துக்குளிக்கப்பட்ட
தென்ற செய்தியும் காண்க. அன்றியும் தாமிரபர்ணியினால் பொதியம்
முதலிய மலைகளினின்றும் வாரிக்கொண்டு வரப்பட்ட முத்துக்கள், அது
பாயும் கடலிற்படும் என்றதுமாம்.

     “பூழியர்கோன் றென்னாடு முத்துடைத்து” என்ற வழக்கும் காண்க.

     இப்பாட்டால் ஆறும் ஆற்றுச் சிறப்பும் கூறினார்.

     மண் படும் - என்பதும் பாடம்.           2

970.



மொய்வைத்தவண் டின்செறி சூழன் முரன்ற சந்தின்
மைவைத்தசோ லைமல யந்தர வந்த மந்த
மெய்வைத்தகா லுந்தரும்; ஞால மளந்த மேன்மைத்
தெய்வத்தமி ழுந்தருஞ்; செவ்வி மணஞ்செ யீரம்.
   3

     (இ-ள்.) செவ்வி மணஞ்செய் ஈரம் - நறுமணம் வீசச் செய்யும்
ஈரத்தை; மொய்வைத்த...காலும் தரும் - மொய்த்த வண்டுகள் நெருங்கிய
கூட்டம் ஒலிக்கின்ற இருண்ட சந்தனச் சோலை சூழ்ந்த பொதியமலை
தரவந்த மெல்லவுலவுகின்ற சிறு தென்றற் காற்றும் கொடுக்கும்; செவ்வி
மணஞ்செய் ஈரம்
நன்மணத்தைச் செய்தற்குரிய அன்பினை; ஞாலம்...
தமிழும் தரும்
- உலகத்தை அளந்த மேன்மையும் தெய்வத்தன்மையும்
உடைய தமிழும் தரும்.

     (வி-ரை.) மொய் வைத்த வண்டு - என்றது கூட்டமாக
மொய்க்கும்வண்டுகளின் இயல்பினையும், செறிசூழல் என்றது அக்கூட்டங்கள்
பல நெருங்கிச் சூழ்ந்ததனையும் குறித்தன.