பக்கம் எண் :


1264 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

என்ற ஆகம பூசை முறையும் காண்க. மூர்த்தம் என்பதும் இது. மூர்த்தியார்
மூர்த்தியை உடையவர்.

     மூர்த்தியார் தாம் மூர்த்தியார்- என்க. மூர்த்தியார் பின்வந்தது
பெயர். இவ்வாறு அடுக்கி மொழிந்து சிறப்பிப்பது ஆசிரியரது மரபு - 932
முதலியவை பார்க்க. 9

977.



அந்திப்பிறை செஞ்சடை மேலணி யால வாயில்
எந்தைக்கணி சந்தனக் காப்பினிடை யென்று முட்டா
அந்தச்செய லின்னிலை நின்றடி யாரு வப்பச்
சிந்தைக்கினி தாயதி ருப்பணி செய்யு நாளில்,       10
978.



கானக்கடி சூழ்வடு கக்கரு நாடர் காவன்
மானப்படை மன்னன் வலிந்து நிலங்கொள் வானாய்
யானைக்குதி ரைக்கரு விப்படை வீரர் திண்டேர்
சேனைக்கட லுங்கொடு தென்றிசை நோக்கி வந்தான். 11

     977. (இ-ள்.) வெளிப்படை. மாலையில் விளங்கும் பிறையைச்
சிவந்தசடை மேல் அணிந்த திருவாலவாயுடையாராகிய எந்தைக்குச்
சாத்துகின்ற சந்தனக் காப்பினை இடையில் ஒருநாளும் தவிராத அந்தச்
செய்கையில் நிலைத்து நின்று அடியார்கள் மகிழும்படி மனதுக்கினிதாகிய
திருப்பணியைச் செய்து வருகின்ற நாளிலே, 10

     978. (இ-ள்.) வெளிப்படை. காடாகிய அரணையுடைய வடுகக்
கருநாடர்களின் காவல் பொருந்திய பெரிய சேனையுடைய அரசன்,
சேனைப்பலத்தினால் வலிமை செய்து நிலத்தைக் கைப்பற்றுவானாகி,
யானைகளும் குதிரைகளும் வீரர்களும் திண்ணிய தேர்களும் கொண்ட
கடல்போன்ற சேனையைச் செலுத்திக் கொண்டு தென்றிசை நோக்கி
வந்தான் 11

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.

     977. (வி-ரை.) அணி - எந்தை எனக் கூட்டுக.

     எந்தைக்கு அணி சந்தனக் காப்பு - "சந்தனமுங் குங்குமமுஞ்
சாந்துந் தோய்ந்த தோளானை" என்பது திருத்தாண்டகம். திருமஞ்சனத்துக்கு
உதவும் பொருள்களுள்ளே சந்தனக்குழம்பு சிறந்த ஒன்றாகும் என்பது
ஆகமவிதி. மெய்ப் பூச்சுக்கும் திலதப் பொட்டணிவதற்கும் உதவுவதுமாம்.
காப்பு - மெய்ப்பூச்சு.

     இடை என்றும் முட்டா அந்தச் செயல் - நியதியாகச் செய்யும்
திருப்பணியை ஒருநாளும் தவிர்தலுறாமற் செய்தல் வேண்டுமென்பது விதி.
நிலைநிற்றல் - உறைத்து நிற்றல்.

     அடியார் உவப்ப - இறைவனுக்கு நியதியாகச் செய்யும் அன்புடைய
திருப்பணிகளைக் கண்டு மகிழ்கின்றவர்கள் அடியார்களேயாவர் என்பதாம்.
மூர்த்தியார் திருவாலவாயுடையார்க்குச் செய்த மெய்ப்பூச்சினைத் தரிசித்த
அடியவர் களித்தனர் என்பது.

     சிந்தைக்கினிதாய திருப்பணி - அடியார் மனத்துக்கு உவந்ததன்றி
ஆண்டவனது திருவுள்ளத்துக்கும் ஏற்ற எனவும், அடியார் உவப்பதோடு
தமது சிந்தைக்கும் இனிதாகிய எனவும் உரைக்க நின்றது.

     நாளில் - வந்தான் என்று வரும்பாட்டுடன் கூட்டி முடித்துக்
கொள்க. 10

     978. (வி-ரை.) கானக்கடிசூழ்வடுகக்கருநாடர் - கானக்கடி - காடாகிய
அரண். அரணாவன - "மணிநீரு மண்ணு மலையு மணிநிழற், காடு முடைய
தரண்" என்ற திருக்குறளாலறிக. கடி - காவல். இது உயர்வு, அகலம்,
திண்மை, அருமை என்ற அரணிலக்கணம் நான்கினையும் குறித்தது. வடுகு -
ஒருமொழி. மொழியின் பெயர் அம்மொழி வழங்கும் நாட்டுக்குப்
பெயராய்வந்தது. ஆகுபெயர். இந்நாடு