பக்கம் எண் :


1412 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

      தொண்டைநாட்டுக்குன்ற மகளிர் கூந்தல்களின் உயர்வை
வாசனையால் வண்டுகள் முதலில் அறிந்து, அரம்பையர் கூந்தலிலிருப்பதினும்
இங்குத் தங்குதலே சிறந்தது என்று கண்டு, அவ்வரம்பையர் கூந்தலைவிட்டுக்
கொடிச்சியர் கூந்தலில் மூழ்கிக் குடிகொண்டன. அதன் பின்னர்,
அவ்வண்டுகள் வழி காட்டினமையாலும் பிறவாற்றாலும் இவ்வுண்மையையறிந்த
அரம்பையரும் இமையவர்களும் தேவருலகில் வாழ்வதினும் வேடமாதரும்
வேடருமாகப் பிறந்து இங்கு வாழ்தல் சிறப்புடைத்தென்று வேண்டி அவ்வாறே
இங்கு வந்து பிறந்து இறைவரை வணங்குகின்றார்களென்றும் (1090), அவ்வாறு
பிறக்கும் பேறு கிடைக்கப்பெறாத அரமகளிர் கொடிச்சியருடன் கூடி இங்குச்
சுனைநீராடுகின்றனர் என்றும் (1091) இக்கருத்தினைத் தொடர்ந்து அடுத்த
இரண்டு பாட்டுக்களினும் கூறுதல் காண்க.

     காளத்தி - தொண்டை நாட்டின் 19-வது திருத்தலம். கண்ணப்பர்
புராணம் - தலவிசேடம் பார்க்க.

     கருங்குழல் - அமுதமுண்டு நெடுநாள் மூப்பின்றி
யிருக்கப்பெற்றார்களாதலின் நரைசேராது கறுத்த கூந்தல் என்பது குறிப்பு.

     பொங்குபூண் முலைக் கொடிச்சியர் - வள்ளி நாயகியாரை வளர்த்த
தாயர் சேடிமார் முதலியோர்களின் வழியினர் என்ற சிறப்புக் குறித்தது. 12

     திரு இடைச் சுரம்

1090. பேறு வேறுசூ ழிமையவ ரரம்பையர் பிறந்து
மாறில் வேடரு மாதரு மாகவே வணங்கும்
ஆறு சூழ்சடை யண்ணலார் திருவிடைச் சுரமுங்
கூறு மேன்மையின் மிக்கதந் நாட்டுவண் குறிஞ்சி
13

     (இ-ள்.) வெளிப்படை. அந்நாட்டினது வுண்மையுடைய குறிஞ்சி
நிலமானது, வேறாகிய தனிப்பேற்றினை எண்ணி நோற்ற வானவர்களும்
அரம்பையர்களும் இங்கு ஒப்பற்ற வேடர்களும் வேடமாதர்களுமாகப் பிறந்து
வணங்குதற்கிடமாகிய, கங்கையாறு சூழ்கின்ற சடையையுடைய சிவபெருமான்
எழுந்தருளிய திருவிடைச்சுரமும் நிலவிய வாழ்வுடையதென்று சொல்லத்தக்க
மேன்மையினால் மிகுந்தது.

     (வி-ரை.) பேறு வேறு சூழ் - பேறு - அவ்வப்போது உருத்தெரியாது
வந்து வணங்கிப் போதலைவிட எப்போதும் இங்கு வாழ்ந்து வணங்கும் பேறு,
வேறு சூழ் - தனியாக - வேறாகச் சூழ்ந்த. சூழ்தல் - ஆலோசித்தல்;
நினைத்தல். அதற்கென்று தனியாக நினைத்துத் தவஞ்செய்து வேடராகவும்
வேடமகளிராகவும் பிறந்தார்க ளென்பதாம்.

     மாறில் - முன்னரே தவஞ்செய்த தேவராயிருந்து பின்னரும்
தவஞ்செய்து இறைவனை வணங்கப்பெற்றவர்களாதலின் அவ்வாறு செய்யாத
ஏனைவேடர்கள் இவர்களுக்கு ஒப்பாகார் என்பார் மாறில் வேடர் என்றார்.
"புவனியிற் போய்ப் பிறவாமையி னாணாம் போக்குகின் றோமவமே" என்ற
திருவாசகம் காண்க.

     பிறந்து - வணங்கும் என்க. பிறத்தல் - வணங்குதற்காகப் பிறவி
எடுத்தனர் என்பதாம். வணங்குதலே பிறவிப்பயனாம் என்ற உண்மை
வற்புறுத்தப்பட்டது.

     திருவிடைச் சுரமும் கூறுமேன்மை - இடைச்சுரமும் நிலவிய
வாழ்வுடையதென்று எடுத்துச் சொல்லும் மேன்மை என்க. "நிலவிய
வாழ்வுடையது என்று" என்பது குறிப்பெச்சம். உம்மை, முன் கூறிய
திருக்காளத்தியேயன்றி, என இறந்தது தழுவிய எச்சவும்மை.