இதுமுதல் நான்கு பாட்டுக்களும்
குறிஞ்சி வளங்கள். இதனால் குறிஞ்சிக்
கருப்பொருள்களுள் மக்களும், புள்ளும், செய்தியும் கூறியபடியாம்.
படர்வன
பயில் சிறைத் தோகை - என்பதும் பாடம். 11
திருக் காளத்தி
1089.
|
அங்கண்
வான்மிசை யரம்பையர் கருங்குழற் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழன்மூழ்கிப்
போகாச்
செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னு
மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினான் மல்கும். |
12 |
(இ-ள்.)
வெளிப்படை. அழகிய இடமகன்ற விண்ணுலகத்தில் வாழும்
அரம்பையர்களது கரிய கூந்தலிலுள்ள வண்டுகள், ஒளிவிளங்குகின்ற
அணிகளையணிந்த தனங்களையுடைய குறவர் மாதர்களுடைய கூந்தலினுள்
மூழ்கி அங்கிருந்து நீங்காதிருத்தற்கு இடமாகிய, சிவந்த கண்களையுடைய
திருமாலை விடையாகவுடைய சிவபெருமானது திருக்காளத்தி
என்னும்
மேகஞ்சூழ்ந்த திருமலையைத் தன்னுள் நிலவப்பெற்ற வாழ்வுடைமையால்
(அக்குறிஞ்சி) மிகுவதாகும்.
(வி-ரை.)
அங்கண் என்றதற்கு அந்தக் குறிஞ்சிநிலத்தில்
என்பாருமுண்டு.
அரம்பையர்
- தேவமாதர். இவர் காளத்தியில் பூசிக்கவந்து வழிபடும்
வானவரோடு உடன்வந்தவர்கள் என்க. "கடவுண்மால் வரையி னுச்சி,
யதிர்தருமோசை யைந்து மார்கலி முழக்கங் காட்ட" (750) என்றவிடத்துத்
திருக்காளத்தியிற் றேவர் பூசித்தல் குறிப்பிக்கப்பட்டது காண்க. கண்ணப்ப
நாயனார் பேறு பெற்றபோது உடனிருந்து கண்டு "நான்முகன் முதலா வுள்ள
வானவர் பூவின்மாரி பொழிந்தனர்" (828) என்றதும் கருதுக.
கொடிச்சியர்
- குறவர் மகளிர். குறிஞ்சிநிலத் தலைமகளிரைக்
கொடிச்சியர் என்பது பொருளிலக்கணம். குழன்
மூழ்கி - அவ்வாசனையில்
ஈடுபட்டு, அதில் மூழ்கித் தன்வசமிழந்து என்ற குறிப்புமாம்.
(குறிஞ்சி)
வாழ்வினால் மல்கும் என்க. குறிஞ்சி என்ற
எழுவாய்
வருவிக்க. தொண்டைநாட்டுக் குறிஞ்சிநிலமானது திருக்காளத்தி என்ற
திருமலையினைத் தன்னுள்ளே இருக்கப்பெற்ற வாழ்வுடைமையினால்
சிறப்புப் பெருகுவதாயிற்று என்க. அடுத்த இரண்டு பாட்டுக்களிலும் "குறிஞ்சி
மேன்மையின் மிக்கது" (1090), ''குறஞ்சி செய் தவம்'' (1091) என்றவை காண்க.
குறிஞ்சி தவஞ் செய்து இத்தலங்களைத் தன்னுள்ளே கொண்டு
மேன்மையடைந்தது என்பது தற்குறிப்பேற்றம்.
அரம்பையர்
குழற்சுரும்பு கொடிச்சியர் குழன்மூழ்கிப் போகா
என்றது அரம்பையர் கூந்தலினும் கொடிச்சியர் கூந்தலில் வண்டுகள்
மிக்கமணம் கண்டன என்றதாம். வானரம்பையர் கூந்தல் மந்தாரம், கற்பகம்
முதலிய மலர்களினாலாகிய செயற்கை மணம் மட்டும் கொண்டது. ஆனால்
இங்குள்ள கொடிச்சியர் குறிஞ்சிநிலத் தலைவியராகிய உத்தமசாதிப்
பெண்களாதலின் அவர் கூந்தல் இயற்கை மணமும், குறிஞ்சியின் பல
செழித்த பூக்கள் சூடிய செயற்கைமணமும் ஆக இருவகை மணமும்
பொருந்தியது என்பதாம். அன்றியும் இக்கொடிச்சியர் காளத்திநாதரின்
பங்குடைய ஞானப்பூங்கோதையம்மையாரை வழிபட்டு அவரது திருவருள்
மணம் பெற்றவர்கள். அவ்வம்மையாரது கூந்தலின் இயற்கை மணம் பற்றிய
திருவிளையாடற் புராண வரலாறுகளும், "கொங்குதேர் வாழ்க்கை" என்ற
இறைவன் பாடலும் இங்கு நினைவு கூர்தற்பாலன.
|