பக்கம் எண் :


1544 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     காட்டி - கடக்கும் - சூரனாதியோர் மூவருள், வேற்படையினாற்
சங்கரிக்கப்பட்ட இருவருள், ஒருவனான தாரகனைக் காட்டி என்ற
இதனாலும், மற்றவனான சூரபதுமனை இகல் வெம்பகை கடக்கும்
என்றதனாலும் உணர்த்தினார். பகை என்றதனால் குலிசாயுதத்தால்
வதைக்கப்படும் சிங்கமுகனையும் கொள்ள வைத்தார்.

     இகல் வெம்பகை - போரிற் கொடிய பகைவன்; சூரபதுமன். 
கடக்கும்
- சேய்ஞலூர்த் தாபனத்தின்பின் இனி நிகழ உள்ளது என்பார்
எதிர்காலப் பெயரெச்சத்தாற் கூறினார். சேந்தன் - முருகப்பெருமான்.

     அளித்த மூதூர் - அளித்தது அதனைப் புதிதாய் உளதாக்கி
விரும்பிய என்றதாம். "செல்லு மாமுகில் செறிந்திடு காப்பின், மல்லன்
மாநகர் வளந்தனை நோக்கி, யெல்லை யில்லறிவன் யாமுறை தற்கோர்,
நல்ல மாநகரி
தென்று நவின்றான்", "வீரவேளிது விளம்புத லோடு, மாரும்
வானவர்க ளம்மொழி கேளா, வேரெ லாமுடைய விந்நகர் சேய்ஞ,
லூரதென்று பெய ரோதின ரன்றே" என்னும் கந்தபுராணம்
குமாரபுரிப்படலம் (14 - 15) பார்க்க. சேய்ஞலூர் என்பது வடமொழியில்
குமாரபுரி என வழங்கப்பட்டது.

     காட்டிக் - கடக்கும் - சேந்தன் அளித்த - கிரவுஞ்சத்தையும்
தாரகனையும் சங்கரித்த பின்னரும், சூரனை வதைக்கும் முன்னரும் ஆக
இடைவழியில் முருகர், சேய்ஞலூரை உளதாக்கி அங்குச் சிவபெருமானைப்
பூசித்தனர் என்ற சரித நிகழ்ச்சியைச் சுருக்கி விளக்கிய திறம் காண்க.
"சேயடைந்த சேய்ஞலூர்" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் காண்க.
சேய் (முருகன்) நல்ல ஊர் - சேயினால் அமரப்பட்ட நல்ல ஊர் என்க.
சேய் நல்லூர் என்பது சேய்ஞலூர் என வழங்குவதாயிற்று. நகரத்துக்கு
ஞகரம் போலி.

     திருமறையோர் மூதூர் - திரு - முத்திக்குச் சாதனமாவது, செல்வம்
- அருட்செல்வம் குறித்தது.

     மறையோர் மூதூர் - "வேதியர் வாழும் சேய்ஞல்" (ஆப்பாடி - 2)
என்பது திருநேரிசை. இது மறையோர் மிகுதியும் வாழும் நகரமாகும்.
சரிதமுடைய நாயனார் மறையவராதலும் குறித்தவாறு. மூதூர் - சேய்ஞலூர்
என்று முடிக்க. பெயர்ப் பயனிலை.1

     இப்பாட்டினால் நாயனாரது திருநாடு, ஆறு, திருநகர் முதலிய
வளங்களையும், பழஞ்சரிதத் தொடர்பும், குடிவளமும் ஒருங்கே கூறிய நயம்
காண்க. இவ்வாறே "விரைசெய் நறும்பூந் தொடையிதழி (491) என்றதும்,
பிறவும் காண்க. 1

1207.

செம்மை வெண்ணீற் றொருமையினா; ரிரண்டு பிறப்பின்
                                  சிறப்பினார்;
மும்மைத் தழலோம் பியநெறியார்; நான்கு வேத
                                முறைபயின்றார்.

     1முருகப் பெருமான் உளதாக்கி யமர்ந்து சிவபூசை செய்த சிறப்புடைய
பெருந்தலமா மிதன் ஆலயம் பழுதுபட்டுப் போய் 50 ஆண்டுகளின் முன்
சுவாமி, அம்பிகை முதலிய மூர்த்திகள் எல்லாரையும் இளங்கோயிலினுள்
அன்பர்கள் எழுந்தருளுவித்துள்ளார். இதன் கோயில் முழுதும் இடிக்கப்பட்டு
அரைகுறை வேலையாய் நின்றுபட்டிருப்பதைச் சைவ உலகம் இன்னும்
பார்த்துக் கொண்டுதான் வாளா நிற்கின்றது. "மண்ணின் பயனா மப்பதி" (1214)
என்று ஆசிரியர் விதந்து போற்றிப் பாராட்டும் பெருமையுடையதாய்ச்
சிவபூசைப் பயனை உலகுக்குக் கொடுப்பதாயுள்ள இப்பெரும் தலத்தின் நிலை
இதுவாயின் சைவர்கள் சிவபூசையின் பயன் பெற்றுய்வதெங்கே? இதனைத்
திருப்பணி செய்து முற்றுவித்து முன்போலத் தாபித்தல் சிவபெருமான்
றிருவருளும், முருகப்பெருமான் றிருவருளும், சண்டீசர் திருவருளும் ஒருங்கே
பெறுவிக்க வல்லதாகிய தலைசிறந்த சிவத்திருப்பணியாகும்.