பக்கம் எண் :


798 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

உன்னுக. இவற்றின் மேல் இரண்டு பாட்டுக்களும் (630 - 631) அவ்வாறே
மெல்லோசைச் சந்தத்தில் யாத்தது இருபக்கத்துப் படைஞர் பலர்
இறந்தொழிந்து மெலிந்த நிலைகுறிக்க என்க. அதன்மேல் தலைவராகிய
நாயனார் போர் தொடங்குதலின் உயர்நடைபெற் றொழுகும் தரவு
கொச்சகக் கலிப்பாவாகிய வேறு யாப்பினாற் கூறும் யாப்பமைதியும்
நோக்குக. 21

629.
பொற்சிலை வளைய வெதிர்ந்தவர் புற்றர வனைய சரம்பட
விற்படை துணியவு நின்றிலர் வெற்றிகொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவள னின்றியு முற்படு கொடைநிலை நின்றிட
வுற்றன வுதவிய பண்பின் ரொத்தன ருளர்சில கண்டகர்.   22

     (இ-ள்.) பொற்சிலை...வழங்கினர் - பொற்பூணிட்ட தமது விற்களை
வளைத்துப் போர் செய்தாரில் புற்றினின்று கிளம்பும் அரவு போல மாற்றார்
விட்ட அம்பினால் தமது விற்படை அறுபட்டொழியவும் போர் ஒழிந்து
நிற்காதவர்களாகிய, வெற்றி தரும் உடைவாளை உருவிப் போரிட்டனராகிய
இவர்கள்; முற்றிய ... பண்பினர் - முன்னர் நிறைந்திருந்த தமது
பெருவளங்கள் ஒழிந்த பின்னரும் முன்னைக் கொடை நிலையிலே நிற்கத்
தம்மிடம் எஞ்சி உள்ளனவற்றை உதவுகின்ற வள்ளற்றன்மையுடையாரை;
ஒத்தனர் உளர் சில கண்டகர் - ஒத்தாராகி உள்ளார் சில வீரர்கள்.

     (வி-ரை.) பொற்சிலை - பொற்பூணிட்டவில். போர் மள்ளர்களும்
ஏனைத் தொழிலாளர்களும் தத்தம் தொழிற்குரிய கருவிகளுக்குப் பொற்பூண்
முதலியன இட்டுப் பாராட்டிக்கொள்ளுதல் மரபு. இவை அக்கருவிகளுக்குப்
பலமும் உறுதியுந் தருவனவுமாம். பொன் - அழகிய என்பாருமுண்டு.

     சிலைவளைய எதிர்ந்தவர் - விற்படை மள்ளராய் எதிர்த்துப்
போரிட்டார். வளைய என்பது அதற்கு உரிய போர்த்தொழில் குறித்தது.

     புற்று அரவு அனைய சரம் - அம்பறாத்தூணி (புட்டில்) புற்றாகவும்,
அதினின்றும் ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாது தொடர்ந்து வரும் சரங்கள்
அரவாகவும் உவமித்தார். இறத்தலைத்தரும் தொழிலாலும் அரவுக்குவமையாம்.
விடமூட்டிய அம்புகள் என்பதுமாம்.

     பட - பட்டமையால். துணியவும் - துணிக்கப்பட்டு அற்றுப்போயின
பின்னரும். நின்றிலர் - போர் செய்யாது நின்றாரில்லை.

     வெற்றிகொள் - வெற்றியைத் தன்னதாகக் கொள்கின்ற.

     வழங்கினர் - போரிற் பயன்படுத்தினர்.

     முற்படு கொடை நிலை - முற்படு - பெருவளன் இல்லாமற்
போயின காலத்தின் முன் தம்மிடத்துப்பட்ட. கொடைநிலை -
பெருங்கொடையாகிய தன்மை. நின்றிட - அத்தன்மை ஒழியாது தங்க.
நிலைநின்றிட
என்று கூட்டிக்கொடையானது அறாமல் நிலைக்க என்றலுமாம்.
கொடைநிலை நின்றிட
- கொடை நிலை செல்லாது நின்று பட்டதாக
என்பாருமுண்டு. உற்றன - அப்போதைக்குத் தம் கைக்கு உதவியன -
கிடைத்தன.

     பண்பினர் - தன்மையுடையாரை, இரண்டனுருபு தொக்கது,
பண்பினரை ஒத்தனர் என்க. எதிர்ந்தவரில் - நின்றிலராகி - வழங்கினார்கள்
- பண்பினரை - சில கண்டகர் - ஒத்தனர் - என்று கூட்டி முடித்துக்
கொள்க.

     கண்டகர் - வன்கண்மையுடைய போர். வீரர்கள்,

     கண்டர்கள் - என்பதும் பாடம். 22

630.
அடன்முனை மறவர் மடிந்தவ ரலர்முகம் உயிருள வென்றுஉறு
படர்சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன தூன்றலில்
விடுசுடர் விழிக ளிரும்புசெய் வினைஞர்த உமுலையின்
முகம்பொதி புடைமிடை கரியிடை தங்கிய புகைவிடு தழலை
                                      நிகர்ந்தன.  23