பக்கம் எண் :

1216திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநகம

முகங்காட்டக் குதித்துநீர்மேல்

விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்

வாய்காட்டும் மிழலையாமே. 3

1419. உரைசேரு மெண்பத்து நான்குநூ

றாயிரமாம் யோனிபேதம்

நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா

யங்கங்கே நின்றான்கோயில்

வரைசேரு முகின்முழவ மயில்கள்பல

நடமாட வண்டுபாட

விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்

கையேற்கு மிழலையாமே. 4

_________________________________________________

தாமரைகள் முகங்களையும் துள்ளிக்குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும், ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும் காட்டும் திருவீழிமிழலையாகும்.

கு-ரை: உலகை வருத்தும் அவுணர்தம் புரத்தைக் கண்ணாடியில் உழுந்துருளும் காலத்தில் எரித்த இறைவன்கோயில், முத்து, மகளிர் பல்காட்ட, தாமரை, முகங்காட்ட, துள்ளுங்கயல், விழிகாட்ட. பவளம் வாய்காட்டும் வீழிமிழலையாம் என்கின்றது. நலிந்து - வருத்தி. உழுந்து உருளும் அளவை - ஓர் உளுந்து உருளக்கூடிய காலச் சிறுமையில். தரளம் - முத்து. கோகநகம் - தாமரை. வில் - ஒளி.

4. பொ-ரை: நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயில், மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள் பல நடனமாட, வண்டுகள்பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும்

கு-ரை: எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்களையும் படைத்து, அவற்றின் உயிர்க்குயிராக நிற்கும் இறைவன் கோயில்.