பக்கம் எண் :

 132. திருவீழிமிழலை1217


1420. காணுமா றரியபெரு மானாகிக்

காலமாய்க் குணங்கண்மூன்றாய்ப்

பேணுமூன் றுருவாகிப் பேருலகம்

படைத்தளிக்கும் பெருமான்கோயில்

தாணுவாய் நின்றபர தத்துவனை

யுத்தமனை யிறைஞ்சீரென்று

வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப

போலோங்கு மிழலையாமே. 5

_________________________________________________

முகிலாகிய முழவம் ஒலிக்க, மயில் நடமாட, வண்டு பாட, கொன்றைமரம் பொற்பரிசில் வழங்க, காந்தள் கையேற்று வாங்கும் மிழலையாம் என்கின்றது. உரைசேரும் - நூல்களில் உரைக்கப் பெறுகின்ற. முகில் - மேகம். விரை - மணம். இதழி கொன்றை.

5. பொ-ரை: காண்டற்கரிய கடவுளாய், மூன்று காலங்களாய், மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப் பெறும் அரி, அயன், அரன் ஆகிய மும்மூர்த்திகளாய், பெரிதாகிய இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் சிவபிரான் உறையும் கோயில், மூங்கில்களிற் கட்டிய நெடிய கொடிகள் நிலை பேறு உடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய, உத்தமனை, வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை அழைப்பனபோல, அசைந்து ஓங்கி விளங்கும் திருவீழிமிழலையாகும். மூன்று உருவுக்கு ஏற்ப அழித்தல் வருவிக்கப்பட்டது.

கு-ரை: காணுதற்கரிய கடவுளாகி, காலம் குணம் இவையுமாகி, எல்லாரானும் போற்றப்பெறும் பிரம விஷ்ணு ருத்ரனாகி, பெரிய உலகத்தைப் படைத்தும் அளிக்கும் பெருமான்கோயில், இறைவனை வணங்குங்கள் என்று கொடிகள் தேவரையழைக்கும் வீழிமிழலை என்கின்றது. காலமாய் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலமாய்; என்றது எல்லாவற்றையும் அடக்கித் தம் எல்லைக்குள் இன்பத்துன்பங்களை எய்தி நடக்கச்செய்தலின். குணங்கள் மூன்றாய் - சாத்துவிகம் முதலிய குணங்கள் மூன்றாய். பேணும் - போற்றப் பெறுகின்ற. படைத்து அளித்து எனவே அழித்தலாகிய இவர்தொழில் சொல்லாமலே பெறப்பட்டது. தாணு - நிலைத்த பொருள். தூண் வடிவு என்றுமாம். வேணுவார்கொடி - மூங்கிற்றண்டில் கோக்கப்பெற்ற நீளமான கொடிகள். விண்ணோர்கள் போகத்தால் மோகித்து மறந்திருத்தலின் கொடிகள் நினைவூட்டி அழைக்க வேண்டியதாயிற்று.