பக்கம் எண் :

238திருஞானசம்பந்தர் வரலாறு(முதல் திருமுறை)


நந்தியின் மேல் இடி வீழ்ந்தது. உடன் தேரர்கள் அஞ்சி அகன்றனர். சாரி புத்தன் என்பான் தர்க்க வாதம் புரியுமாறு ஞானசம்பந்தரை அழைத்த போது அந்த அடியவரைக் கொண்டே வாதிடச் செய்து வெற்றி கண்டார். புத்தர்கள் தங்கள் பிழை உணர்ந்து ஞானசம்பந்தரை வணங்கிச் சைவரானார்கள். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.

அப்பரைக் கண்டு மகிழ்தல்:

ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.

திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்த போது அப்பர் வரவைக் காணாது ‘அப்பர் எங்குற்றார்?’ என அடியவர்களை வினாவினார். அவ்வுரை கேட்ட அப்பர் ‘உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்’ என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையினின் றிறங்கி ‘இவ்வாறு செய்தருள்வது தகுமா?’ எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். ‘அப்பர் திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச்சூழும் பெருவேலி ஆயினீர்’ எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர் அந்நாடுசெல்லும் விருப்புடையவரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக்கேட்ட ஞானசம்பந்தர் தொண்டை நாடு செல்லும் விருப்புடையரானார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து யாத்திரை மேற்கொண்டனர்.

ஞானசம்பந்தர் காவிரி வடகரையை அடைந்து நெய்த்தானம் ஐயாறு பழனம் முதலிய தலங்களை வணங்கி, சீகாழிப் பதியை அடைந்து தோணிபுரப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார்.

தொண்டைநாட்டுத் தல யாத்திரை:

ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும்