பக்கம் எண் :

366திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


127. இயலாடிய பிரமன்னரி

யிருவர்க்கறி வரிய

செயலாடிய தீயாருரு

வாகியெழு செல்வன்

புயலாடுவண் பொழில்சூழ்புனற்

படப்பைத்தடத் தருகே

முயலோடவெண் கயல்பாய்தரு

முதுகுன்றடை வோமே. 9

__________________________________________________

பிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.

கு-ரை: செதுவாய்மைகள் கருதி - பொல்லாச் சொல்லை எண்ணி. செதுவாய்மை - பொல்லாமொழி. ‘செதுமொழிந்த சீத்தசெவி‘ என்பதுபோல நின்றது. கதுவாய்கள் - வடுவுள்ளவாய் ‘கதுவாய் எஃகின்‘ என்னும் பதிற்றுப்பத்தடி ஒப்பு நோக்குக. மலைப்பிளப்பை ஒத்த வாயுமாம். மதுவாய - தேனை மலரின் முகத்தே உடைய, செங்காந்தள் பூக்களில் நிறைய மூங்கில்கள் முத்தைச் சொரிகின்றன என்பது. செங்காந்தள் கையேந்தி ஏற்பாரையும், வேய்வரையாது கொடுப்பாரையும் ஒத்திருக்கின்றன என்று கொள்ள வைத்தவாறு.

9. பொ-ரை: தற்பெருமை பேசிய பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறிதற்கரிய திருவிளையாடல் செய்து எரியுருவில் எழுந்த செல்வனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள், நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள், நீர் நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் ஓடுமாறு வெள்ளிய கயல் மீன்கள் துள்ளிப் பாயும் குளங்கள் இவற்றின் வளமுடையதும் ஆகிய திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.

கு-ரை: இயலாடிய பிரமன், இயலாடிய அரி என அடைமொழியை இருவர்க்கும் கூட்டுக. இயல் - தற்பெருமை. செயல் ஆடிய - செயலால் வெற்றி கொண்ட. புயல் - மேகம். புனற் படைப்பை - நீர்பரந்த இடம்.