15. திருநெய்த்தானம்
பதிக வரலாறு:
பெரும்புலியூர் முதலிய தலங்களை வணங்கிப்
பிள்ளையார் வீற்றிருக்குங் காலத்தில், மேற்குத்
திசைத் தலங்களையும் வணங்கத் திருவுள்ளங் கொண்டு
விடைபெற்றுத் திருவருட் குறிப்பின் வழியே செல்லுகின்றார்கள்.
திருநெய்த்தானத்தை யடைந்தார்கள். மனம்
பொருந்த வணங்கினார்கள். ‘மையாடிய கண்டன்‘
என்னும் இப்பதிகத்தைப் பாடினார்கள். இதில்
‘நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானம் என்னுங்கள்:
செல்வன் அடி, சிவகதி சேரலாம்‘ என்று ஆணை வழங்குகிறார்கள்.
பண்: நட்டபாடை
பதிக எண்: 15
திருச்சிற்றம்பலம்
152. மையாடிய கண்டன்மலை
மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி
யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர்
நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம்
நெய்த்தானமெ னீரே. 1
__________________________________________________
1. பொ-ரை: கருநிறம் அமைந்த கண்டத்தை
உடையவனும், மலை மகளாகிய பார்வதியை இடப் பாகமாகக்
கொண்டவனும், துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை
எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ் பெற்ற யானையைக்
கொன்று அதன் தோலைப் போர்த்த, தன்னொப்பார்
இல்லாத் தலைவனுமாகிய சிவபிரான் வயல்களில் முளைத்த
குவளை மலர் போலும் கண்களை உடைய உமையம்மையோடும்
நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும்
விளங்குமிடமாகிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைச்
சொல்வீராக.
கு-ரை: மையாடிய கண்டன் - விஷம்
பொருந்திய கழுத்தையுடையவன். கையாடிய கரி - கையோடு
கூடிய யானை, கேடில்கரி
|