பக்கம் எண் :

506திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


328. விடைசேர் கொடியண் ணல்விளங் குயர்மாடக்
கடைசேர் கருமென் குளத்தோங் கியகாட்டில்
குடையார் புனன்மல் குகுரங் கணின்முட்டம்
உடையா னெனையா ளுடையெந் தைபிரானே. 2

329. சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்
காலன் றனையா ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்
தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே. 3

__________________________________________________

2. பொ-ரை: உயர்ந்து விளங்கும் மாடங்களின் கடை வாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய காட்டிடையே அமைந்த குடைந்து ஆடுதற்குரிய நீர் நிலைகள் நிறைந்த குரங்கணில்முட்டத்தை உடையானும் விடைக்கொடி அண்ணலுமாகிய சிவபிரான் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான்.

கு-ரை: இது இத்தலமுடைய பெருமானே என்னையாளுடைய பிரான் என்கின்றது. மாடக்கடைசேர் கருமென்குளத்து ஓங்கிய காட்டில் - மாடங்களின் கடைவாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய குளத்தால் சிறந்த கட்டிங்களிலே. குடையார் புனல் மல்கு - குடைதற்குரிய நீர் நிறைந்த; அணில் முட்டம் என்க.

ஆளுடைபிரான் என்பதால் எனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு. அநாதியேயான ஆண்டான் அடிமைத்தன்மையென அறிவித்தது. எந்தை என்றது ஆதியாயிருந்து, அடித்தும் அணைத்தும் அருள்வழங்கலின். பிரான் என்றது தன்வழிநின்று ஏவல்கொள்ளுந் தலைவனாக இருத்தலின்.

3. பொ-ரை: அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தை பிரான்சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் கால காலன் எனப்படுபவன்.

கு-ரை: இது இத்தலத்திறைவன் சூலப்படையான் விடையான் நீற்றான் காலகாலன் என அடையாளமும், அருளுந்திறமும் அறிவிக்கின்றது. கோலம் - அழகு. ஏலம் - மயிர்ச்சாந்து.