330. வாடா விரிகொன் றைவலத்
தொருகாதில்
தோடார் குழையா னலபா லனநோக்கி
கூடா தனசெய் தகுரங் கணின்முட்டம்
ஆடா வருவா ரவரன் புடையாரே. 4
331. இறையார் வளையா ளையொர்பா
கத்தடக்கிக்
கறையார் மிடற்றான் கரிகீ றியகையான்
குறையார் மதிசூ டிகுரங் கணின்முட்டத்
துறைவா னெமையா ளுடையொண் சுடரானே. 5
__________________________________________________
4. பொ-ரை: வாடாது விரிந்துள்ள
கொன்றை மாலையைச் சூடியவனும், வலக்காதில் குழையையும்
இடக்காதில் தோட்டையும் அணிந்துள்ளவனும், நன்றாக
அனைத்துயிர்களையும் காத்தலைத் திருவுளம் கொண்டு
தேவர் எவரும் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனுமாகிய
குரங்கணில்முட்டத்துள் திருநடனம் புரியும் இறைவன்
எல்லோரிடத்தும் அன்புடையவன்.
கு-ரை: இத்தலத்து ஆடிவரும்
பெருமானாகிய அவரே அடியேன் மாட்டு அன்புடையார் என்கின்றது.
வாடாவிரி கொன்றை - வாடாத விரிந்த கொன்றை
மலர்மாலையையும். தேவர்கட்கே அணிந்த மாலை வாடாது;
அங்ஙனமாகத் தேவதேவனாகிய சிவபெருமான் அணிந்த
மாலை வாடாமை இயல்பு ஆதலின் இங்ஙனம் கூறப்பட்டது.
வலத்துக்குழையும், ஓர்காதில் தோடும் உடையான்
எனக்கொள்க. நல்ல பாலனம் நோக்கி - நன்றாகக்
காத்தலைத் திருவுளங்கொண்டு. கூடாதன செய்த - வேறுதேவர்
எவரும் செய்யக்கூடாத அரிய காரியங்களைச் செய்த.
ஆடா வருவார் - திருநடனம் செய்து வருவார்.
5. பொ-ரை: இறையார் வளையாள் என்னும்
திருப்பெயர் கொண்ட உமையம்மையை ஒருபாகத்தே கொண்டவனும்,
நீலகண்டனும், யானையின் தோலை உரித்துப் போர்த்த
கையினனும் ஆகிப் பிறைமதியை முடியில் சூடிக் குரங்கணில்
முட்டத்தில் உறையும் இறைவன் எம்மை ஆளாக உடைய ஒண்
சுடராவான்.
கு-ரை: சிவனே எம்மை யாளுடைய சோதி
வடிவன் என்கின்றது. இறையார்வளையாள் இத்தலத்து
அம்மையின் திருநாமம். முன்கையில் வளையல் அணிந்தவள்
என்பது பொருள். கரி கீறிய கையான் - யானையையுரித்த
கையையுடையவன். குறையார்மதி -
|