பக்கம் எண் :

574திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


447. பார்மலிந்தோங்கிப் பருமதில்சூழ்ந்த

பாம்புரநன்னக ராரைக்

கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக்

கழுமலமுதுபதிக் கவுணி

நார்மலிந்தோங்கு நான்மறைஞான

சம்பந்தன்செந்தமிழ் வல்லார்

சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச்

சிவனடி நண்ணுவர்தாமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: உலகில் புகழ் நிறைந்து ஓங்கியதும்பெரிய மதில்களால் சூழப் பெற்றதுமான திருப்பாம்புர நன்னகர் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும் வயல்கள் சூழப் பெற்றதும், மாட வீடுகளை உடையதுமான, கழுமலம் என்னும் பழம் பதியில் கவுணியர் கோத்திரத்தில், அன்பிற் சிறந்தவனாய்ப் புகழால் ஓங்கி விளங்கும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஒதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்.

கு-ரை: பாம்புரப்பதிகம் வல்லவர் செல்வத்திற் சிறந்து சிவனடி சேர்வர் என்கின்றது. கழனி - வயல். கவுணி - கவுண்டின்ய கோத்திரத்தவன். நார் - அன்பு. சீர் - புகழ்.

திருநாகைக்காரோணப் புராணம்

இருமுது மாதர் தங்கூ னிருகரங் கொடுமுயன்று
கருதுறத் தீர்த்த தாச ரதியுங்கண் ணனுநாண் கொள்ளக்
குருமதிக் குலத்து வேந்தன் கூனொரு சொல்லாற் றீர்த்த
பொருவருங் காழி ஞான பூரணற் கடிமை செய்வாம்.

- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.