பக்கம் எண் :

 49. திருநள்ளாறு633


525. சேயடைந்த சேய்ஞலூரிற்

செல்வன சீர்பரவித்

தோயடைந்த வண்வயல்சூழ்

தோணிபு ரத்தலைவன்

சாயடைந்த ஞானமல்கு

சம்பந்தனின்னுரைகள்

வாயடைந்து பாடவல்லார்

வானுல காள்பவரே. 11

திருச்சிற்றம்பலம்.

----------------------------------------------------------------

11. பொ-ரை: முருகப் பெருமான் வழிபட்ட சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செய்வனாகிய சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற, வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும், நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர்.

கு-ரை: நுணுகிய ஞானத்தோடு கூடிய இப்பதிகம் வல்லவர்கள் வானுலகு ஆள்வர் என்கின்றது. சேய் - முருகன். முருகன் சூரபன்மாவைக் கொல்லப் படை எடுத்த காலத்து இத்தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டார் என்பது கந்த புராண வரலாறு ஆதலின் ‘சேயடைந்த சேய்ஞலூர்’ என்றார். தோயடைந்த - நீர் நிறைந்த. தோயம் என்பது தோய் என ஈறு குறைந்தது. சாய் - நுணுக்கம்.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணைபோற்றுவார்
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.

- சேக்கிழார்.