பக்கம் எண் :

 9. திருத்தூங்கானைமாடம்709


642. நோயும் பிணியு மருந்துயரமு

நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்

வாயு மனங்கருதி நின்றீரெல்லா

மலர்மிசைய நான்முகனு மண்ணும்விண்ணும்

தாய வடியளந்தான் காணமாட்டாத்

தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்

தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர்

தூங்கானை மாடந் தொழுமின்களே. 9

643. பகடூர் பசிநலிய நோய்வருதலாற்

பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்

முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்

மூடுதுவ ராடையரு நாடிச்சொன்ன

திகடீர்ந்த பொய்ம் மொழிகள் தேறவேண்டா

திருந்திழையுந் தானும் பொருந்திவாழும்

துகடீர் கடந்தைத் தடங்கோயில்சேர்

தூங்கானை மாடந் தொழுமின்களே. 10

__________________________________________________

9. பொ-ரை: உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குறிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய

சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.

கு-ரை: இதுவும் அது. நோய் - உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன. பிணி - மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள். அருந்துயரம் - அவற்றால் விளையும் துன்பங்கள். வாயும் - பொருந்தும். தாய - தாவிய.

10. பொ-ரை: பெரும்பசி நலிய, நோய்கள் வருத்துவதால். பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத் துவராடையால்