65. காவிரிப்பூம்பட்டினத்துத்
திருப்பல்லவனீச்சரம்
பதிக வரலாறு:
திருவலம்புரத்தை வணங்கித் திருச்சாய்க்காடு
செல்லத் திருவுளம்பற்றிய பிள்ளையார், வழியில்
பல்லவனீச்சரத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள
பன்னகப் பூணினாரைப் பணிந்து போற்றி ‘அடையார்தம்
புரங்கள் மூன்றும்‘ என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்.
பண்: தக்கேசி
பதிக எண்: 65
திருச்சிற்றம்பலம்
701. அடையார்தம் புரங்கண்மூன்று
மாரழலில் லழுந்த
விடையார்மேனி யராய்ச்சீறும்
வித்தகர் மேயவிடங்
கடையார்மாட நீடியெங்கும்
கங்குல் புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர்
பல்லவ னீச்சரமே. 1
__________________________________________________
1. பொ-ரை: பகைவராய
அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில்
அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று
சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம்,
வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து
விளங்குவதும், வானவெளியைத் தடவும் மதில்களால்
சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த
திருப்பல்லவனீச்சரமாகும்.
கு-ரை: திரிபுரங்கள் தீயிலழுந்தச்
சீறும் வித்தகர் இடம் பல்லவனீச்சரம் என்கின்றது.
அடையார் - பகைவர். விடையார் மேனியர் - இடபத்தில்
ஆரோகணித்த திருமேனியார். கங்குல் - ஆகாயம். படை
- ஆயுதம் பல அடுக்கு.
|