763. பிண்டியேன்று பெயராநிற்கும்
பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியு
மதியில் தேரரும்
உண்டிவயிறா ருரைகள்கொள்ளா
துமையோ டுடனாகி
இண்டைச்சடையா னிமையோர்பெருமான்
ஈங்கோய் மலையாரே. 10
764. விழவாரொலியு முழவுமோவா
வேணு புரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சே
ரணிகொள் சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ்
ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார்
கவலை களைவாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
10. பொ-ரை: அருகதேவன் வீற்றிருக்கும்
அசோகமரம் என அம்மரத்தின் பெருமை கூறிப்பெயர்ந்து
செல்லும் மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும்,
பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக்கையில்
ஏந்தித் திரியும் அறிவற்ற புத்தரும் உண்டு பருத்த
வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் கொள்ளாது,
உமையம்மையாரோடு உடனாய், இண்டை சூடிய சடைமுடியினனாய்,
இமையோர் தலைவனாய், ஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ள
எம்பெருமானைச் சென்று வழிபடுவீராக.
கு-ரை: சமணரும் புத்தருமாகிய இவர்களின்
உரையைக் கொள்ளாத இமையோர் பெருமான் இவர் என்கின்றது.
பிண்டி - அசோகந்தளிர். ஏன்று - தாங்கி. மண்டை -
பிச்சை ஏற்கும் பாத்திரம். தேரர் - புத்தர். உண்டி
வயிறார் - உண்டு பருத்த வயிற்றையுடையவர்கள். இண்டை
- திருமுடியிற் சூடப்படும் வட்டமாகக் கட்டப்பெற்ற
மாலை.
11. பொ-ரை: திருவிழாக்களின்
ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் என்னும்
சீகாழிப் பதியில் அழல் வண்ணனாகிய
|