பக்கம் எண் :

 74. திருப்புறவம்831


799. உரவன்புலியி னுரிதோலாடை

யுடைமேற் படநாகம்

விரிவிவிரிபூங் கச்சாவசைத்த

விகிர்த னுகிர்தன்னாற்

பொருவெங்களிறு பிளிறவுரித்துப்

புறவம் பதியாக

இரவும்பகலு மிமையோரேத்த

வுமையோ டிருந்தானே. 2

____________________________________________________

"அண்ண லணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலி னுட்புக்கார்."

"பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி
தங்கி யிருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை யாளுடை யான்உமை யோடும் இருந்தான்என்று
அங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்"

இப்பதிகத்துள் பாடல் தோறும் ‘இமையோர் ஏத்த உமையோடிருந்தானே’ என்பதால் இதுவே இரண்டாம் பதிகம் என்பதை திரு.சி.கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தம் பெரிய புராண உரைப் பேருரைக் குறிப்பில் அறிவித்துள்ளார். இஃது இத்துறையில் உள்ளார்க்கும் பெருவிருந்தாம்.

2. பொ-ரை: மிக்க வலிமையை உடையவனும், புலியிலினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர் செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான்,

கு-ரை: புலித்தோல் ஆடையின்மேல் நாகத்தைக் கச்சாக உடுத்து, யானையை உரித்துப் போர்த்து, புறவம் பதியாக உமையோடு இருந்தான் என்கின்றது. உரவன் - வன்மை உடையோன்.