பக்கம் எண் :

966திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1043. தூர்த்த னைச்செற்ற, தீர்த்த னன்னியூர்
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே. 8

1044. இருவர் நாடிய, அரவ னன்னியூர்
பரவு வார்விண்ணுக், கொருவ ராவரே. 9

1045. குண்டர் தேரருக்கு, அண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 10

1046. பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
வேந்த னன்னியூர், சேர்ந்து வாழ்மினே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

8. பொ-ரை: காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனிதனாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

கு-ரை: தூர்த்தன் - காமியாகிய இராவணன். தீர்த்தன் - பரிசுத் தமானவன். ஆத்தமா - அன்போடு. ஆப்தமாக என்பதன் சிதைவு.

9. பொ-ரை: திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர்.

கு-ரை: விண்ணுக்கு ஒருவராவர் - இந்திரனாவர்.

10. பொ-ரை: சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.

கு-ரை: அண்டன் - அண்டமுடியாதவன், வினை விண்டு போகும் - நெல் வாய் விண்டதுபோல வினை முளைக்குந் தன்மையழியும்.

11. பொ-ரை: பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.

கு-ரை: பந்தன் - ஞானசம்பந்தன் என்பதன் முதற்குறை. பூந்தராய் - சீகாழி.