பக்கம் எண் :

21

அருளிய திருஆமாத்தூர்த் திருப்பதிகத்தில், ‘ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே’ என்றும், ‘அவர் புகழ்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே’ என்றும், ‘அவர் திருநாமம்
கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே’என்றும் கூறுவன ஒப்பு
நோக்கத்தக்கன.

இல்லான், இல்லாள்:

     இல்லறத்தில் இல்லான் என்றால் இல்லாதவன் என்ற பொருளைத்
தருகிறது. இல்லாள் என்றால் இல்லத்தை ஆட்சி செய்பவள் என்ற
பொருளைத் தருகிறது என்று பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

     சேக்கிழார், காரைக்காலம்மையார் வரலாற்றில், இல்லானுக்கு
இல்லாளன் என்ற சொல்லைப் படைத்துள்ளார். ‘இல்லாளன் வைக்க
எனத் தம்பக்கல் முன்னிருந்த நல்லநறு மாங்கனிகள் இரண்டினில்
ஒன்றை’ அடியவர்க்கு அமுதளிக்க இட்டார், என்ற இடத்துக்
குறித்துள்ளார்.

     இரண்டாவதாக, திருமூலர் வரலாற்றில், திருமூலர் தம் உடலை
ஓரிடத்தில் சேமித்து வைத்து மூலன் உடலில் புகுந்து ஆனிரைகளை
மேய்த்து அவரவர் வீட்டில் சேர்ப்பித்து ஒரு பொது மடத்தில் தங்கினார்.
மூலன் மனைவி மூலனை அழைத்தபோது தொடர்பில்லை என்பதை
உணர்த்தினார். அப்போது மூலன் மனைவி “இல்லாளன் இயல்பு
வேறானமை கண்டு” வீடு திரும்பினாள், என்ற இடத்திலும் இல்லாளன்
என்ற சொல்லை ஆண்டுள்ளார்.

     இல்லாளன் என்ற சொல்லுக்கு, இல்லத்தையும் இல்லத்தை ஆள்கின்ற
இல்லாளையும் ஆள்பவன் என்பது பொருளாகும்.

     இது பற்றி ஞானசம்பந்தர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

     இல்லான் என்றால் இல்லத்தை உடையவன் என்பது பொருள்.
இதற்கு இரண்டு மேற்கோள் காட்டுகிறார், நல்லான் என்றால் நன்மையை
உடையவன் என்பது தானே பொருள், வல்லான் என்றால் வன்மையை
உடையவன் என்பது தானே பொருள். அதுபோல இல்லான் என்றால்,
இல்லத்தை உடையவன் என்பதுதானே பொருள் என்கிறார்.