பக்கம் எண் :

26

அந்தணரைத் தான் எனச் சேக்கிழார் விளக்கந் தருகிறார். ஏனெனில்
இங்கு அந்தணர் மரபில் வந்த சிறப்புலி நாயனார் பெருவள்ளலாக வாழ்ந்து
விளங்கினார் என்று பெரியபுராணம் கூறுகிறது. சுந்தரரும் திருத்தொண்டத்
தொகையில்,

      “சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்”

என்று குறிக்கிறார். எனவே சம்பந்தர் அந்தணரையே இங்கு இல்லை
என்னாது ஈந்துவக்கும் ‘தன்மையார்’ என்னும் சொல்லால் கூறுகிறார்.
இதனைச் சேக்கிழார் பெருமான் ஆக்கூரில் தோன்றியருளிய சிறப்புலி
நாயனார் வரலாற்றுத் தொடக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார் அப்பாடல்
காண்க.

“பொன்னிநீர் நாட்டில் நீடும் பொற்பதி புவனத் துள்ளோர்
 இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லைஎன் னாதே ஈயும்
 தன்மையார் என்று நன்மை சார்ந்தவே தியரைச் சண்பை
 மன்னனார் அருளிச் செய்த மறைத்திரு ஆக்கூர் ஆக்கூர்”

மலையாள அந்தணர் வழிபாடு:

     பழுவூர், மேலைப்பழுவூர், கீழைப்பழுவூர் என இருபகுதியாயுள்ளது,
பழு - ஆலமரம். இது இங்குத் தலவிருட்சமாக உள்ளது.

     சோழர் சம்பந்திகளாகிய சேரர் கிளையினரைப் பற்றிய
கல்வெட்டுக்கள் மேலைப்பழுவூரில் உள்ளன. கீழைப்பழுவூரே பாடல்
பெற்றது. சேரர் கிளையினர் இங்கு வந்து வதிந்ததனால் அவர்கள்
அங்கிருந்தே மலையாள அந்தணர்களை அழைத்து வந்தனர் என்ற
குறிப்புக் காணப்படுகிறது. இதனை, ஞானசம்பந்தர், ‘அந்தணர்களான
மலையாளரவரேத்தும் பந்தமலிகின்ற பழுவூரனை’ (தி. 2 ப. 34 பா. 11)
என்று குறித்துள்ளார்.

வினாவுரை:

     இப்பதிகங்களில் முதல் நான்கு திருப்பதிகங்கள் வினாவுரை
அமைப்பில் உள்ளன. வினாவுரை என்பது, இறைவனின் திருவுருவத்தில்
காணப்பெறும் அடையாளங்களைச் சுட்டி அவற்றின் அவசியம் என்ன
என்று வினவுகிறது. இவ்வினாக்களுக்குத் தக்கவாறு தத்துவார்த்த
விளக்கங்களையும் புராண விளக்கங்களையும் இப்பதிகங்களின்
உரைகளில் கண்டு தெளியலாம்.