பக்கம் எண் :

326

1541.







அரவம் பூண்பரணி யுஞ்சிலம்
     பார்க்க வகந்தொறும்
இரவி னல்லபலி பேணுவர்
     நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின்
     றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு
     நின்றவெம் மைந்தரே.        6
1542.







விண்ணி லானபிறை சூடுவர்
     தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலநங் கன்னுட
     லம்பொடி யாக்கினார்
பண்ணி லானவிசை பாடன்மல்
     குந்திரு வாஞ்சியத்
தண்ணலார் தம்மடி போற்றவல்
     லார்க்கில்லை யல்லலே.       7



     6. பொ-ரை: அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும்
சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல
பலியைப் பெறுபவர்; தம் திருப் பெயர்களைக் கூறிப் பரவுவார்
வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு
உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார்.

     கு-ரை: அரவம் - பாம்பு, பூண்பர் - சூடுவர். அணியுஞ்சிலம்பு
-அலங்காரமாகப்பூணும் வேதச்சிலம்பு. ஆர்க்க - ஒலிக்க. அகம் - வீடு
பேணுவர் - விரும்புவர். நாமமே பரவுவார் - திருநாமஜபமே செய்பவர்.
வினை-கர்மம். மடமாது - உமா தேவியார். மைந்தர் - வீரர்.

     7. பொ-ரை: வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திருமுடியில்
தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை
நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய
திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப்
போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை.