பக்கம் எண் :

1314திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4065. காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
  பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.     9

4066. வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
  தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மயுரிவே.                                           10


திருவருளுக்குப் பாத்திரமாயினான். யா -முன்னிலையசை. செருக்கினால்
செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை, சிறுமையாற் செய்த பிழைகளை
மன்னிக்கவும் தகும் என மன்றாடிய வாறு.

     9. பொ-ரை: காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப்பாற்றலின்
வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள்புரிபவனே. பூக்களில் சிறந்த
தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும்,
திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களை கடைக்
கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.

     கு-ரை: காலே - காற்றாகி யெங்கும் கலந்தவனே. மாலே -
எவற்றிற்கும் மாயம் செய்பவனே. மால் - மயக்கம். மாயம் - மாயனென்னும்
திருமாலுக்கும் மாயம்செய்பவனாகையினால் சிவபெருமானுக்கு
மாயனென்றொருபெயர் “மறவனை யன்று பன்றிப் பின்சென்ற மாயனை”
என்னும் சுந்தர மூர்த்தி நாயனார் திரு நள்ளாற்றப் பதிகத்தாலும் “மாயனே
மறிகடல் விடமுண்ட வானவா” என்னும் திருவாசகம் செத்திலாப் பத்தானும்
அறிக. மே - சிறந்த. பூ - மலர்ந்த. பூ மேல ஏ(ய்) - பிரமனும். மாலே -
மாலும். காலே - திருவடியையும். மேலே - திருமுடியையும். காண் -
காணலை. நீ - ஒழித்த. காழீ - வைரத்தன்மையனே. காழீ! காண் -
கடைக்கணி. கால் ஈ - திருவடியைத் தருக. கா:-

     10. பொ-ரை: நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும்,
புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுபவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள்
உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய
சிவயோகிகளின் செய்கையே. புத்தர், சமணர்களின் மொழிகளை
எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார்
பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.