பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)118. திருக்கழுமலம்1317

4069. மின்னிய வரவும் வெறிமலர் பலவும்
       விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் றேவர்தம் பெருமான்
     சேயிழை யொடுமுறை விடமாம்
பொன்னியன் மணியு முரிகரி மருப்புஞ்
     சந்தமு முந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங்
     கழுமல நகரென லாமே.                2

4070. சீருறு தொண்டர் கொண்டடி போற்றச்
       செழுமலர் புனலொடு தூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த
     சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி
     யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க
     கழுமல நகரென லாமே.                3


     2. பொ-ரை: மின்னும் பாம்பும், நறுமணம் கமழும் மலர்களும்,
இறைவனின் திருவடியைச் சரணடைந்த பிறைச்சந்திரனும் தங்கிய
தலையுடையவர் சிவபெருமான். அவர் தேவர்கட்கெல்லாம் தலைவர்.
அப்பெருமான் செம்மையான ஆபரணமணிந்த உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் இடம், பொன், மணி, யானையின் வளைந்த தந்தம்,
சந்தனக்கட்டை இவற்றை உந்தித் தள்ளுகின்ற வலிய அலைகளையுடையதும்,
கன்னிப்பெண்கள் கடற்கரையில் விளையாடுதலையுடையதும், கடலொலி
மிகுதலையுடையதுமான திருக்கழுமலநகர் எனலாம்.

     கு-ரை: முரி - வளைந்த.

     3. பொ-ரை: பெருமை மிக்க சிவதொண்டர்கள் நறுமலரும், நீரும்,
தூபமுங் கொண்டு திருவடிகளைப் பூசிக்கும்படி, கொன்றை மாலையினைத்
தமது திருமுடிமேல் வைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, பலவூர்களைத் தம்பாற் கொண்டுள்ள பதிகளை உலகுடன்
கொள்ளும்படி கடல் பொங்கி எழுந்தபோது